தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் ஒரு முறை ரயிலில் பயனம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் எதிரில் அமர்ந்து இருந்த பெண், அவரிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் அவரை மயக்க முயற்சித்தாள். சிறி்தும் லட்சியம் செய்யாமால் படித்துக் கொண்டிருந்தார் தாஸ்.
பொறுமையிழந்த அப்பெண், “இந்தக் கூபேல் நாம ரெண்டு பேர்தான் இருக்கோம். நான் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தப் போறேன். கார்டு வந்தா நீ என்னிடம் தவறாக நடக்கப் பாத்தேன்னு சொல்லுவேன். இதெல்லாம் செய்யாம சும்மா இருக்கனும்னா எனக்குப் பணம் கொடு ” என்று மிரட்டினாள்.
தாஸ் அவளை நிமிர்ந்து பார்த்து தனக்கு காது கேட்காது, வாயும் பேசவராது எனவே அவள் சொல்வதை எழுதித் தரவேண்டுமென சைகையில் கேட்டார். அவளும் உடனே அவரிடமிருந்தே பேப்பரும் பேனாவும் வாங்கி சொன்னதை அப்படியே எழுதிக் கொடுத்தாள்.
எழுதியதை வாங்கிக் கொண்ட தாஸ் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தார். கார்டு வந்ததும் அவரிடம் விபரம் சொல்லி அப்பெண்மணியை ஒப்படைத்தார்.
பாவம் அந்தப் பெண்ணுக்கு தாஸ் ஒரு வழக்கறிஞர் என்பது தெரியாது.
****************************************************************
நேற்று வாரணம் ஆயிரம் படம் பார்த்தேன். எனக்குப் பிடிச்சது. கௌதம் மேனோன் படங்களில் காட்சிப்படுத்துதல் ஒரு அழகியல் சார்ந்து இருக்கும். இப்படமும் அவ்வாறே.
அப்பாவுக்கு அஞ்சலிப் படமா, காதல் படமா அல்லது ஆக்சன் படமான்னு ஒரு தெளிவில்லாம இருப்பதுதான் குறை. டெல்லி எபிசோட் இல்லாமலே படம் நன்றாகத்தான் இருந்திருக்கும்.
சமீரா ரெட்டி தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். சூர்யா தன் காதலை சொல்லும் சமயங்களில் (ரயில், வீடு) அதை மறுதலிக்கும் போது இயல்பாகச் செய்திருக்கிறார்.
படத்தின் மிகப் பெரிய குறை ஹாரிஸின் ரீ ரிக்கர்டிங். கடைசி 15 நிமிடங்கள் மிக அபத்தம். சூர்யாவும் அப்பா சூர்யாவும் பேசும் வசனங்களைக் கேட்கவிடாமல் செய்ததோடு ஒரு சங்கு ஊதுகிறார். கொடுமை. பாடலுக்கு ஹாரிஸ் ரீ ரிக்கு வேறு ஒருவர் என்றால் சரியாக இருக்குமோ என்னவோ. சில படங்களில் இளைய ராஜாவின் பின்னனி இசையே படத்திற்கு பலமாக இருக்கும்.
சிலர் இந்தப் படத்தையும் தவமாய்த் தவமிருந்து படத்தையும் ஒப்பிட்டிருந்தனர். இரண்டும் வேறு வேறு தளங்கள். சேரனோடது இடியாப்பம், தேங்காய் பால். மேனனோடது நூடுல்ஸ் சாஸ்.
****************************************************************
வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவல் உங்களுக்குப் பிடித்திருந்தால் ஜே டி க்ரூஸ் எழுதிய “ஆழி சூழ் உலகு” படித்துப் பாருங்கள்.
கடல்புரத்தில் ஒரு குடும்பதில் ஒரு தலைமுறயில் நிகழும் சம்பவங்களைக் கோர்த்தது. ஆழி சூழ் உலகு மூன்று தலை முறைக் கதை. இரு குழுக்களுக்கிடயே இருக்கும் தொழில் போட்டி, விரோதம், குரோதம், கோபம், தவறாகப் புரிந்து கொள்ளுதல், பொய்ப்பஞ்சாயத்து என அது வேறு விதமானது.
நுணுக்கமான பல சித்தரிப்புகளையும், விஸ்தாரமான விவரனைகளும் கொண்டது. ஒரு முழுமையான வாசிப்பனுபவத்துக்கு உத்திரவாதம் இந்நாவல்.
****************************************************************
பொதுவா ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு தனி எழுத்து நடைஇருக்கும், எழுத்தாளர்களுக்கு இருப்பது போல. அதே போல நம்ம கூடப் பழகுறவங்க, நம்மைச் சுற்றி உள்ளவங்க சிலர் ஒரே வார்த்தையைத் திரும்ப திரும்பச் சொல்லுவாங்க. அது அவங்களுக்கே உரியதாகவும் அவங்களுக்கு ஒரு அடையாளத்தைத் தருவதாகவும் இருக்கும்.
இந்த அடையாளத்தை கூர்மையாக் கவனிச்சு அதையும் ஒரு கவிதையாக்கியிருக்காரு பாருங்க கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன் என்கிற சி.கல்யாணசுந்தரம்.
”ஒரே சிக்கலாப் போச்சு”
என்பார் அய்யனார்
ஆறுமுகத்துடன் பேசும்போது
அடிக்கடி “நெருக்கடி” வந்தது
குமாரசாமி தன்பேச்சை
எப்போதும் “என்ன” என்று முடிப்பார்
“சரியா” என்று ஒப்புதல் கேட்பது
சங்கரியம்மா
சா.கந்தசாமியின் கதாபாத்திரங்கள்
“இது நன்றாக இருக்கிறது”
என்று சொல்கின்றன வெவேறு இடங்களில்
அவரவர் உலகம்
அவரவர் சொற்களில்
என் உலகம் எது என
நீங்கள் சொன்னால்
ரெம்பவும் “நல்லது”
– அந்நியமற்ற நதி தொகுப்பிலிருந்து
***************************************************
ரெண்டு பேரு டீ சாபிடலாம்னு ஒரு கடைக்குச் போறாங்க. டீ வழக்கமான நிறத்தில் இல்லாமல் கறுப்பாக இருக்குது.
நண்பர்களில் ஒருவன் கேட்டன் “ஏங்க பாலே ஊத்தலியா?”
மற்றவன் சொன்னான், ”கடை போர்ட பாக்கலியா நீ?”
வெளியே வந்து போர்டப் பார்த்தா “பாலக்காட்டார் கடை” .