ஒரு முறை ராஜாஜியின் மாளிகையில் தங்கினார் காந்தி. அவர் தங்கியிருந்த அறையில் சத்தியமூர்த்தி, ராஜாஜி ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று உள்ளே நுழைந்தார் பாரதியார். காந்தியை வணங்கி விட்டு அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.
“மிஸ்டர் காந்தி! இன்று மாலை 5.30 மணிக்குத் திருவல்லிக் கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் நான் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?’ என்று காந்தியைக் கேட்டார் பாரதியார். அந்த நேரத்தில் மற்றோர் இடத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையால், “கூட்டத்தை மறுநாளைக்கு ஒத்தி வைக்க முடியுமா?’ என்று திருப்பிக் கேட்டார் காந்தி.
“ஒத்தி வைக்க முடியாது; நான் போய் வருகிறேன்! தாங்கள் துவங்கப் போகும் இயக்கத்தை நான் வாழ்த்துகிறேன்!’ என்று போய்விட்டார் பாரதியார்.
பாரதி வெளியேறியதும், “யார் இவர்?’ என்று கேட்டார் காந்தி. அவர், “எங்கள் தமிழ் நாட்டுக் கவி!’ என்று சொன்னார் ராஜாஜி. “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும், இதற்குத் தமிழகத்தில் ஒருவரும் இல்லையா?’ என்றார் காந்தி.
(நன்றி : தினமலர்)
பாதுகாக்க ஆளில்லாவிட்டாலும் நினைத்துப்பார்க்கக்கூட ஆளில்லதவராக ஆகிவிட்டார். டிசம்பர் 11 ஐக் கண்டுகொள்ளாத மீடியாக்கள் டிசம்பர் 12 ஐக் கோலாகலமாகக் கொண்டாடினர். இலக்கியத்தைத் தன் தோள்களில் தாங்கி வளரும் சமுதாயமே முன்னேறும்.
***************************************************
பூமணியின் வெக்கை நாவல், அண்ணனைக் கொன்றவனைப் பழிவாங்கும் சாதாரணக் கதைதான். ஆனால் எழுதப்பட்ட விதத்தில் சிறந்த படைப்பாக ஆகியிருக்கிறது.
15 வயதே ஆன செலம்பரம்(சிதம்பரம்) அண்ணனைக் கொன்றவனின் கையெடுக்கும் முயற்சியில் தோற்று ஆளையே கொன்று விடுகிறான். அவனறியாமல் அவனுக்கு உதவி செய்ய வரும் அப்பாவும் அவனும் அதன்பின் காட்டுக்குள் மறைந்து வாழ்வதும், அந்தச் சம்பவத்தை செய்யத் தூண்டிய காரணமும் அதனிடையே அவர்களது வாழ்க்கையுமென நாவல் பரந்து விரிகிறது.
ஒரு குடும்பமும் அதன் உறவின்முறைகளும் மட்டுமல்லாது அந்தக் கிராமமே அவர்களுக்கு உதவுவதும் அரசாங்க நிறுவனம் பணம்படைத்தவர்களின் கைக்கூலியாகச் செயல்படுவதும் மிகச் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
”ஏதோ பழிக்குபழி வாங்கினான் என்று மலினமாகியிருக்கக்கூடிய ஒரு சம்பவதைப் பிரியத்துகுரியதாக நாவல் ஆக்க முனைந்துள்ளது. வன்முறையை உள்ளடக்கிய வாழ்க்கையில் வர்க்க நலன்கள் மோதுகிற சூழலில் உழைக்கும் வர்க்கத்தின் குடும்ப உறவுகள் மிக இனிமையான மனிதச் சூழல்கள் ஆகிய ஒரு உலகிற்குள் சஞ்சரிக்கிறார் பூமணி” ராஜ் கெளதமன் (சிலுவை ராஜ் சரித்திரம் – நாவலாசிரியர்)
இது போன்ற யதார்த்த நாவல்கள் அதிகக் கவனம் பெறாமல்போவதும், பிற நாவல்கள் விளம்பரப்படுத்தல் மூலமும் , சந்தைப்படுத்தல் மூலமும் உலக உயரத்தில் என புகழப்படுவது தமிழிலக்கிய உலகின் ஒரு நகைமுரண்.
****************************************************************
”இரட்டைக் குழந்தைகளோட அச்சன் “ என்றொரு மலையாளப் படம் பார்த்தேன். 90 களின் ஆரம்பத்தில் வந்த படம். சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் ஸ்ரீனிவாசன் கதை திரைக்கதை எழுதியது.
நான்காவது பிரசவத்திலும் இறந்து பிறந்த குழந்தையுடன் போராடும் தந்தைக்கு ஆறுதலளிக்க தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளிலொன்றைக் கொடுக்கிறார் ஜெயராம்; மனைவிக்குத் தெரியாமல்,அரைமனதுடன்.
பிறிதொரு நாளில் தாங்க முடியாத மன அழுத்தத்தில் அதைச் சொல்லிவிட நேர்கிறது மனைவியிடம். அதன் பின்னெழும் உக்கிரகரமான சம்பவங்களும் மனநிலைகளில் ஏற்படும் மாற்றமுமாக நகர்கிறது படம். கொஞ்சம் அதிகமாகி இருந்தாலும் தற்கால மெகாத்தொடர் போல ஆகியிருக்கும் அபாயமுள்ள கதையை தேர்ந்த திரைக்கதை முலம் சுவராஸ்யமாக்கியிருக்கிறார் ஸ்ரீனிவாசன்.
தமிழில் இதுபோல ஒரு பிரச்சினையை மையமாக வைத்து படங்கள் எடுக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ தெரியவில்லை.
மலையாளக் திரையுலகிற்கும் தமிழ்த் திரையுலகிற்கும் இருக்கும் ஒரு வித்தியாசமே அதற்குத் தடைக்கல். அங்கே கதை நடிகர்களைத் தீர்மானிக்கிறது. ஆனால் இங்கே நடிகர்கள்தான் கதையைத் தீர்மானிக்கிறார்கள். இந்த வரையறைக்கு வெளியே தயாரிக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற்றது கண்கூடு.
*************************************************************
தெயவம் மனிதனாய் ஜனித்தால்
ஜீவிதம் அனுபவிச்சறிஞ்சால்
திருச்சி போகுமுன்னே
தெய்வம் பறயும்
மனிதா நீதான்
எண்ட தெய்வம்.
(திருச்சி – திரும்பி)
இது சமீபத்தில் இரு மலையாளிகள் பேசிக்கொண்டிருந்தபோது கேட்ட கவிதை வரிகள். மூலத்தில் எழுதியவர் யார்? தமிழ்ப் படுத்தப் பட்டிருக்கிறதா? எனில் என்ன அப்புத்தகத்தின் பெயர்? யாராவது உதவமுடியுமா?
இனி இந்தவாரக் கவிதை.
பயனிகள் கவனிக்கவும்
ஒரு ரயில் நிறுத்தம்
கண்டிப்பாக ஐந்து நிமிடம்
நின்று கிளம்பி விடும்
நூறு ரூபாய் கொடுத்து
நான்கு சமோசாவும் இரண்டு டீயும்
ஒரு கை கேட்கிறது
கேட்டதை கொடுத்து மீதி சில்லறையும்
கொடுக்கிறார் மறக்காமல்
இட்லி பொட்டலமும் சாம்பார் பாக்கெட்டும்
கொஞ்சம் கெட்டி சட்னியும் கூட
கேட்ட இன்னொருக் கைக்கு கொடுக்கிறார்
அடுத்த ஸ்டேஷனில் நிற்காது
தீர விசாரித்து ஒரு கை
பத்து ரூபாயும் அறுபது காசுகளும்
எண்ணிப்பார்த்து கொடுத்து
வாங்கி கொள்கிறது
சில கைகள் ஏதோ வாங்கிக்
கொண்டு பதிலுக்கு கிழிந்த நோட்டுக்கள்
உடைந்த நாணயங்கள்
தயிர் சாதத்திற்கு பதிலாக லெமன் ரைஸ்
மாற்றிக்கொள்கிறது ஒரு கை
அந்த கைக்கு கூட்டி கழித்து
கூட குறைய இல்லாமல்
கொடுக்கிறார் துல்லியமான சில்லறை
இதை அந்த குப்பை தொட்டியில் போடு
என்று சொன்ன – ஒரு
சிறுமி கைக்கு பணிகிறார்
ஊசிப்போச்சு என்று பாதி
சாப்பிட்டுவிட்டு மீதியை நீட்டுகிறது
முகத்தில் பருக்கைகளுடன் ஒரு கை
வண்டியின் கூடவே ஒடி
உள்ளே போய் அந்த கையைப் பார்த்து
கொடுத்து விட்டு பிளாட்பாரத்தின்
கடைசி சிமெண்ட் சதுர நுனியில்
உயிர்பிடித்து இறங்கும் அவர்
சட்டக் கல்லூரி வாசலில்
ஆயுதம் தாங்கிய கைகள்
ஏதோவொன்றின் அப்பாவாக
இருக்கலாம்
– ரவிஷங்கர் உயிரோசையில் வெளியான கவிதை
***********************************************************
ஓரு மலையாளியிடம் கடன் வாங்கியவர் பட்ட அனுபவம் இது.
கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார் மலையாள அன்பர். நாளை காலையில் தருகிறேன் என்பார். காலையில் வந்தால் மாலையில் தருகிறேன் என்பார். இப்படியாகக் காலை மாலை என மாற்றி மாற்றி அவரை அலைகழித்திருக்கிறார் இவர்.
வெறுத்துப் போன மலையாள அன்பர் சொன்னார், “ சாரே இது சரியில்ல கேட்டோ? ராவிலே ஒரு சம்சாரம், ராத்திரிக்கு ஒரு சம்சாரம்.”
திட்டிவிடு அவர் போன பின் இவர் அவர் தங்கமணியிடம் நாய் பட்டபாடு பட்டார்.
மலையாளத்தில் சம்சாரம் என்றால் பேச்சு என்றும் ராவிலே என்றால் காலையில் என்றும் அர்த்தம் சொல்லி அவர் தங்கமணிக்கு விளங்க வைத்தார்கள்.
சம்சாரம்னாலே பேசீட்டே இருப்பாங்கன்னுதான் மலையாளத்துல அப்படி வச்சுட்டாங்களோ?
You must be logged in to post a comment.