பெரும்பாலும் சினிமாக்களில், காதலர்களில் ஒருவர் இறந்துபோக நேரிடுமானால், மற்றவர் பைத்தியமாகவோ அல்லது அவரது நினைவில் வாழ்க்கையைத் தொலைத்தவராகவோ அல்லது இறந்துபோவதாகவோ அமைக்கப்படும். மாறாக இப்படத்தில் காதலன் இறந்துபோனதும் முடிந்துவிடும் கதையின் நீட்சியாகக் காட்டப்படும் இறுதி 5 நிமிடக் காட்சிகள் ஒரு குறுங்கவிதை. படத்தை வேறு தளத்திற்கு நகர்த்திவிடுகிறது.
23 வயது இர்ஃபானுக்கு 28 வயது அனிதாமீது காதல். கல்லூரிப் படிப்பை(பொறியியல்) பாதியில் விட்ட இர்ஃபான் வேலை ஏதுமற்றவன். அவ்வாறு வேலை செய்து சம்பாதித்துத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லாத அளவுக்கு வசதியான குடும்பத்தின் இளையவன். தன் விருப்பம் என பழைய பைக்குகளத் தேடி வாங்கி வந்து அதன் தோற்றம் மாற்றிப் பொலிவேற்படுத்தி ஓட்டுவதில் ஒரு பெருமிதம் கொண்டவன்.
அனிதா ஆராய்ச்சி மாணவி. ஏழை, தலித் குடும்பத்தில் உதித்தவள். எதேச்சையாக ஒரு மோதலில் சந்திக்கும் இர்ஃபான் மீது முதலில் கோபம் கொண்டாலும் அவன் நடவடிக்கைகளாலும் நல்லெண்ணத்தினாலும் ஈர்க்கப்பட்டு காதல் கொள்கிறாள். அவளது ஆராய்ச்சிக்கு இர்ஃபான் முன்வந்து உதவி செய்ய காதல் மேலும் இறுகிறது.
இர்ஃபான் வீட்டில் பெண்பார்க்க ஆரம்பிக்க, அவன் அனிதாவைப் பற்றி சொல்ல, வீட்டில் எதிர்ப்பு கிளம்புகிறது. உடனே அனிதாவைக் கூட்டிக் கொண்டு காவல் நிலையம் சென்று பாதுகாப்பு கோறுகிறான். அதுதான் அவன் உணர்சிவயப்பட்டு செய்யும் தவறு. ஏன் என பின்விரியும் காட்சிகளில் தெளிவாகிறது.
படத்தின் ஆகச்சிறந்த சித்தரிப்பு, காவல் நிலையம். ஒரு காவல் நிலையமொன்றில் இயல்பாக நடக்கும் அன்றாட நிகழ்வுகளை எந்தப் பூச்சும் பாசாங்குமற்று கன்முன்னே நிகழ்த்திக் காட்டுகிறார்கள். காவல் ஆய்வாளராக வரும் விநய் கூடக் குறைச்சல் இன்றி ஒரு ஆய்வாளரை அவரது நிறைகுறையுடன் கன்முன்னே காட்டுகிறார்.
புதிதாகச் சேரவரும் கான்ஸ்டபிளை நிறுத்தி வைத்துக் கொண்டே பேசுவதும், அதே சமயம் உள்ளே வரும் கான்ஸ்டபிள் பணியில் இருப்பவரை வேண்டுமென்றே உட்காரச் சொல்லுவதுமாக ரேக்கிங் செய்வதை போன்ற நடவடிக்கை ஒரு சிறு உதாரணம். “என்ன? வேற வேலை ஏதும் கிடைக்கலியா? இப்ப இதான் ஈசி இல்ல, நல்ல சம்பளம், கூடுதலாகக் கிம்பளம்” என்றவாரே புதிதாக வந்தவரை நோட்டம் பார்ப்பதில் அசத்துகிறார். இவர்தான் பிரேமம் படத்தில் காலேஜ் வாத்தியாராக வந்து மலரைக் காதலிப்பாரே, “ஜாவா இஸ் ரக்கட். ஜாவா இஸ் சிஸ்டமேட்டிக்” என்று பாடம் நடத்துவாரே அவர்தான்.
எல்லாக் கவல்நிலையங்களிலும் ஆய்வாளாருக்கு வேண்டியவர் சிலர் இருப்பர், கட்டப் பஞ்சாயத்து கோஷ்டி, இதில் கே டி. அஸ்ஸாமி இளைஞன் ஒருவன் மீது புகார், சாலையில் விபத்து ஏற்படுத்திவிட்டதாக. கே டி உடனே ஆஜராகி, தனது உறவினர்கள் இருவரைக் காயப்படுத்திவிட்டதாகவும், மருத்துவச் செலவுக்கு 2000 ரூபாய் வாங்கித்தரச்சொல்லியும் பைசல் செய்கிறார். அஸ்ஸாமி இளைஞன் பேசும் ஹிந்தி இவர்களுக்குப் புரியவில்லை, ஆய்வாளர் வினய் ஹிந்தியில் பேசியவாறே முரட்டுத்தனமாக உடல்காயமேற்படுத்தி அவனைச் சம்மதிக்கச் செய்வார். காவல் நிலையத்தில் அனைவருக்கும் தெரியும் அவன் அஸ்ஸாமி என்று , ஆனாலும் பெங்காலி என்பர். வினய் மட்டும்தான், “நீ அஸ்ஸாமியாடா, நக்ஸலா” என நக்கலாகக் கேட்பார்.
நாமும் அப்படித்தானே – முஸ்லீம்கள் என்றால் தீவிரவாதி. அஸ்ஸாம் ஜார்க்கன்ட் காரனென்றால் நக்ஸலைட். காவல்நிலையத்தை அப்பட்டமாகக் காட்டியதின் மூலமாக சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் காட்டுகிறார் அறிமுக இயக்குநர் – ஷாநவாஸ் கே பாவக்குட்டி. இவர் பொன்னானி நகரின் முனிசிபல் கவுன்சிலராக இருந்தபோது, 23 வயது B.Tech மாணவனுக்கும் 28 வயது தலித் பெண்ணிற்கும் இடையே வந்த காதலால் நடந்த உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் விளைந்தது இப்படம்.
காவலர் ஒருவர், கைப்பற்றி நிலையத்தில் நிறுத்தியிருந்த பைக்கின் எஞ்சினைத் திருடி விற்றுவிடுகிறார். விற்பனை செய்ய உதவியவனைப் பிடித்து அவன்தான் திருடன் எனக் கோர்ட்டில் ஒப்படைப்பதும், அதற்கு அவனைச் சம்மதிக்கக் கையாளும் நடவடிக்கைகளும், காவல்துறை எப்படித் தங்கள் சகஉழியரைக் காப்பாற்ற யாரைவேண்டுமானாலும் ஈவு இரக்கமின்றிப் பலிகொடுக்கும் என்பதன் வெளிப்பாடு அது.
இந்த நிகழ்வுகளுக்கிடையே, கே டி இர்ஃபானின் குடும்பத்தினருக்குச் சொல்லிவிட, அவர்கள் வந்து இர்ஃபானை அழைத்துச் சென்று விடுகிறார்கள். அனிதா என்ன ஆனாள், காதல் என்ன ஆயிற்று என்பதெல்லாம் உங்கள் திரையில்.
You must be logged in to post a comment.