Month: July 2010

குறும்படம் – மஹாதேவன்

.

மதம் மாறியது புரியாமல் ஒரு சிறுவன் ”தின்னூறு இட்டு விடும்மா ”என்று அடம்பிடிப்பதிலிருந்து ஆரம்பமாகிறது குறும்படம். அந்தச் சிறுவனின் அம்மா அவனைப் போட்டு அடிக்கிறாள். சிறுவனின் அக்கா ஆசை ஆசையாக பூ, பொட்டு வைத்துக் கொள்ள முய்ற்சி செய்கிறாள். அந்தக் குழந்தையையும் அடித்து பூவைத் தூக்கி எறிகிறார்கள். அந்த ஊரில் மாரி அம்மன் கோவில் திருவிழா நடக்கிறது. எல்லா சிறுவர்களும் துள்ளிக் குதித்து சந்தோஷமாக கோவிலில் விளையாடிக் கொண்டிருக்க பெந்தேகோஸ்தேவுக்கு மாறிய குடும்பத்தினரின் குழந்தைகள் மட்டும் ஏக்கத்துடன் தொலைவில் இருந்து அவர்களைப் பார்த்தபடி இருக்கின்றன.

இப்படியாக சம்பவங்கள் நடந்து கொண்டிருக்க ஒருநாள் அரசுப் பணி ஒன்றுக்கு தேர்வு நடக்கவிருக்கும் தகவல் வருகிறது. பெந்தேகோஸ்தேவைச் சேர்ந்த ஒருவரும் வின்ணப்பிக்கிறார். இந்து-ஆதிதிராவிடர் என்று இருப்பவர்களுக்கு மட்டும்தான் சலுகை உண்டு. கிறிஸ்தவ-ஆதிதிராவிடருக்கு சலுகை கிடையாது என்று அரசு அலுவலகத்தில் சொல்லிவிடுகிறார்கள். பெந்தேகோஸ்தேவைச் சேர்ந்தவர் இந்து ஆதிதிராவிடர் என்று போலிச் சான்றிதழ் தயாரித்துக் கொடுத்துவிடுகிறார். தாசில்தார் அலுவலகத்தில் இருந்து சோதனைக்கு வரப்போகிறார்கள் என்ற செய்தி அவர்களுக்குக் கிடைக்கிறது.

பெந்தேகோஸ்தேயினர் வீட்டில் இருக்கும் ஏசுநாதரின் படங்கள், காலண்டர்கள், ஸ்டிக்கர்கள் அனைத்தையும் பிய்த்து எறிகிறார்கள். அந்த நேரம் பார்த்து பாதிரியார் அவர்களது வீட்டுக்கு வருகிறார். பிய்த்து எறியப்பட்ட ஏசுநாதர் படங்களை கையில் எடுத்தபடியே அந்த வீட்டுக்காரர்களை கூர்ந்து பார்க்கிறார். அவர்கள் அவமானத்தால் தலை குனிந்து நிற்கிறார்கள்.

“உங்களுக்கு இப்படிச் செய்யறதுல கொஞ்சம் கூட வெக்கமோ வேதனையோ இல்லையா..? கேவலம் ஒரு வேலைக்காக கர்த்தரையே தூக்கி எறிஞ்சிட்டீங்க இல்லியா?” என்று அவர்களைத் திட்டுகிறார்.

“நாங்க காலகாலமா கும்பிட்டு வந்த மாரியாத்தாவையும் மதுரை வீரனையும் எங்க மனசில இருந்தே தூக்கி எறியச் சொன்னீங்களே அது மட்டும் சரிதானா?” என்று கேட்கிறார் திண்ணையில் படுத்திருக்கும் கிழவி.

பாதிரியார் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

*************************************************************************

இது மஹாதேவன் என்பவரின் வலயில் படித்த ஒரு பதிவு. இது அவர் பார்த்த குறும்படமா அல்லது அவரது கருவா எனத் தெரியவில்லை. குறும்படம் 1, 2,3,4,5 என 5 பதிவுகள் போட்டிருக்கார். ஐந்தும் அருமை.

குறும்படம் ஐந்தைத்தான் முதலில் படித்தேன்(நன்றி – ஹரன் பிரசன்னா) அருமையாக இருக்கு.

கவலைகளால் கரையும் காலம்

.

பத்தாண்டுக்கொருமுறை வரும் கணக்கெடுப்பு. முப்பதிற்கும் மேற்பட்ட கேள்விகளுக்குப் பதில் வாங்க வேண்டுமென்பதால், இம்முறை மனைவியுடன் துணைக்குச் சென்றேன; விரைந்தவர் முடித்தல் வேண்டி. கேள்விகள் குடும்பத்தினரின் பொருளாதர நிலை குறித்தேவெனினும் அவர்களதை எதிர்கொண்டவிதம் வேடிக்கையாக இருந்தது.

வருமானவரித்துறைக்குத் தகவல் அனுப்புவீரோவெனவும் ஒரு கேள்வி. இன்னுமெதை இலவசமாகத் தர இந்தக் கணக்கெடுப்பெனக்கூட ஒரு வினவல்; வெளித்தொங்குமவர் நாக்கினை உள்ளிழுத்து.

அவ்வீட்டின் இல்லத்தலைவர் கல்லூரியொன்றின் துறைதலைவராக இருந்து ஓய்வுபெற்றவர். இரு மகன்கள். ஒருவர் கலிபோர்னியாவிலும் மற்றவர் இலண்டனிலும். மாதந்தோரும் வரும் பணம் பத்தாதோ என வியக்கும் வண்ணமிருந்ததவர் கேள்வி, “எங்களுக்கு இலவசத் தொலைக்காட்சி என்று கிட்டும்?”

இன்னொரு வீட்டில் இல்லமெங்கும் விதேசிப் பொருட்கள் சூழ சுதேசிகளாய் தலைவரும் இல்லக் கிழத்தியும். இம்மாதம் பார்சலில் வரும் பொருளை வீட்டில் வைக்க இடமேதுமில்லை. கேட்ட கேள்வியோ மூர்ச்சையாக்கியவொன்று, “உயிர் காக்க்கும் உயர் சிகிட்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் அடையாள அட்டை என்று கிடைக்கும்?”

இதுகுறித்து நண்பரிடம் விசனப்பட்டபோது சொன்ன அவரது அனுபவம் இன்னும் வேதனையளிப்பதாக இருக்கிறது.

தமிழகத்தின் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனமது. ஆண்டு விற்றுமுதல் (turn over) இரண்டாயிரம் கோடியைத் தாண்டும். எப்பொழுதும் தொழில்முனைவோரை பேட்டி எடுப்பதை விடுத்து அவர்தம் பெற்றோரை நேர்காணல் செய்தாலென்ன என்றொரு எண்னம் நண்பருக்கு. விரைகிறாவர் கிராமம்தேடி. காத்திருக்கிறார் சிறிது நேரம். காத்திருப்பில் நேரம் கரைய, ஊர் சுற்றிவரக் கிளம்புகிறார். காணவந்தவரைக் காண்கிறார் எதிரே, வெள்ளையும் சொள்ளையுமாக; ஓரடி பின்தொடரும் ஏவலாள் தலையில் அரசு வழங்கிய இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி. “கிடைக்கும்போது வாங்கிடணும் தம்பி” என்றொரு அறிவுரையுடன்.

இலவசங்களினால் கட்டமைக்கப்படும் இச்சமுதாயத்தின் எதிர்காலம் எப்படி அமையும் என்ற கவலைகளால் கரைகிறது காலம்.

கலைடாஸ்கோப் – 26/07/2010

.

நீண்ட நாட்களுக்குபிறகு கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் போயிருந்தேன் குடும்பத்தோடு. பழைய நாகர்கோவில், நெல்லை முகங்களைக் காணவில்லை. இருந்த சிறுவர்களுக்கும் நாம் பேசுவது புரியவில்லை, அவர்கள் பேசுவது நமக்குப் புரியவில்லை.

“தும் பிஹாரிஹே க்யா?” என்றேன் என் உடைந்த ஹிந்தியில்.

“நஹி நஹி ஒரியா” என்கிறான்.

பாதிக்கு மேல் வெளி மாநில ஆட்கள். முன்பெல்லாம் சீருடை அணிந்திருப்பார்கள். பையன்கள் பார்வைக்கு மிகவும் பொடியன்களாக இருப்பதால் சீருடை கொடுத்துச் சிக்கலில் மாட்டவேண்டாம் என விட்டுவிட்டார்கள் போல இருக்கிறது.

வடவள்ளியில் காலை 8 முதல் 9 மணி வரை பாதிக்குப் பாதி வெளிமாநில ஆட்கள் முகம்தான் தென்படுகிறது. இவர்கள் தட்டிப் பறித்த வேலையைச் செய்து கொண்டிருந்தவர்கள் தற்பொழுது எங்கே?

*****************************************************************

”ஒம்மக்கிட்ட நான் என்னத்தச் செல்லியதுக்கு? நாம குடிச்சதுக்கு, வண்டியில கொலேரம் சந்தைக்குப் பெய் அவ சரக்கெடுத்து தந்ததுக்கு, இப்ப வாண்டினதுக்கு எதுக்குமே நீரு நயாபைசா குடுக்கேல. இனிமேலும் கனவாயிட்டே வெறுங்கையோட பெய் நின்னா அவ சீலையை உரிஞ்சி தலையில கெட்டீற்ரு ஆடுவான்னு உள்ள சங்கதி உமக்குத் தெரியாதா?”

மேலே உள்ள உரையாடல் உங்களுக்குப் புரிந்தால் நீங்கள் தயங்காமல் குமாரசெல்வா எழுதிய கயம் சிறுகதைத் தொகுப்பைப் படிக்கலாம். நல்ல சிறுகதைகள், ஆனால் குமரி மாவட்டத்தின் விளவங்கோடு பகுதியில் பேசப்படும் பேச்சுவழக்கில் எழுதி இருக்கிறார்; அச்சு அசலாக. பக்-192-196 வட்டாரச் சொற்களுக்கு விளக்கமும் சொல்லி இருக்கிறார்.

கயம் சிறுகதை நன்றாக இருக்கிறது. கதை, கதைக்குள் கதை, அதற்குள் ஒரு கதை என ஒரு சிக்கலான கதை. குறுவெட்டி என்ற கதையைத் தவறவிடாதீர்கள். தனக்கு பால்வினை நோய் இருக்குமோ என்ற அச்சத்தில் ஆட்படுபவன் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகிறான் என்பதுதான் கதை. அதை வைத்து கம்யூ தோழர் ஒருவர் செய்யும் அரசியல் சிரிப்பை வரவழைக்கிறது.

காலச்சுவடு பதிப்பகம் – விலை ரூ. 150

*******************************************************************

நானும் செல்வாவும் மதராசபட்டிணம் பார்த்தோம். எனக்குப் பிடித்திருந்தது. பீரியட் படம் எடுப்பதன் சிரமங்களைப் புரிந்து கொண்டால் இந்தப் படத்தில் விஜயின் உழைப்பு புரியலாம்.

படத்தில் சில குறைகள் இருந்தாலும் காட்சி அமைப்பிலும், குறிப்பாக எடிட்டிங்கிலும் அதை சரி செய்து விடுகிறார்கள். ஆர்யாவின் உடை விஷயத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம். மற்றபடி கிராபிக்ஸ் துணையுடன் நன்றாகவே எடுத்திருக்கிறார்கள். என் தனிப்பட்ட அபிப்ராயம் ஜி வி பிரகாஷின் இசை படத்திற்குப் பொருந்தி வரவில்லை என்பதே.

Music should create and complement a mood for the frame என்ற கூற்று நினைவு கொள்ளத் தக்கது.

*******************************************************************

வெக்கை

வெந்து புழுங்கியத்தில்
விசிறியை ஓடவிட்டேன்

வட்டப் படலமாய்த்

தொங்கிச் சுழன்ற
மின்விசிறி இறக்கைகள்
மூன்றாகப் பிரிந்து
ஒன்றை ஒன்று
துரத்தத் துவங்கியதில்
சாயம் போயிருந்த
அந்த இறக்கைகள்
என்னைக் கடப்பதை
எண்ணத் தொடங்கியது காலம்

என்னைச் சூழ அடர்ந்த காற்று

காதோரங்களில் நரை ஏற்றியதில்
பதட்டமாகி விசிறியை நிறுத்தினேன்

வெந்து புழுங்கியது வெளி

அனுஜன்யா எழுதிய கவிதை இது.

சென்ற மாதம் நேரில் சந்தித்தபோது அவரது ஆதங்கம் வெளிப்பட்டது. “அனானிப் பின்னூட்டங்கள்கூடச் சரி அண்ணாச்சி, ஆனால் நான் மிகவும் மதித்த சிலரே அப்படி எழுதியதால் வருத்தமாக இருக்கு” என்றார்.

மீண்டு(ம்) வாருங்கள் நண்பரே.

நான் குரங்கு


நான் குரங்கு.
பானைக்குள் விழுந்து கள் குடிக்கும்குரங்கு.
வாலைக் கண்டு பாம்பென்று பதறும் வழிவந்ததில்லை.
நுனிவாலில் எழுந்து படம் விரிக்கும் பாம்பை
பகடி சொல்லும் குரங்கு.

நான் குரங்கு.
காண்பதையெல்லாம் களவுண்டு தின்றும்
கும்பிக்குள் தடநெருப்பு அடங்காத குரங்கு.

நான் குரங்கு.
நினைவுக் கோளாறால் மதியழிந்த குரங்கு.
எல்லா மரத்திற்கும் தாவி
எல்லா கிளைகளையும் உலுக்கி
எல்லா இலைகளையும் உதிர்த்து விட்ட பின்னும்
நினைவடங்காப் பெருவெறியில்
மண்ணைக்கீறி வேரைக் கடிக்கும் மூடக்குரங்கு.

நான் ஒரு குரங்கு.
தீங்கொன் றறியாத அப்பாவிக் குரங்கு.
ஒடிந்த கிளைகளை ஆட்டிப்பார்க்கும்,
நைந்த கனிகளை முகர்ந்து பார்க்கும்,
உதிர்ந்த இலைகளை அள்ளிக்கொண்டு போய்
மரத்திலேயே ஒட்டப்பார்க்கும் பேதைக் குரங்கு.

நான் ஒரு குரங்கு.
அடிக்கடி ஆப்பில் அகப்பட்டுழலும் அழுமூஞ்சிக்குரங்கு.
மருந்தில்லாக் கொடுநோயால் தாக்குண்ட குரங்கு.

நான் ஒரு குரங்கு.
கரணமிட்டு கையேந்தும் குரங்கு.
மலத்தினும் புழுத்த யாரினும் கடைய இழிக்குரங்கு.

ஆனாலும் நான் குரங்கு.

பானைக்குள் விழுந்து கள்குடிக்கும் குரங்கு.
படம் விரிக்கும் பாம்பை பகடி சொல்லும் குரங்கு.
பெருவெறி மூளும் கடுவளிக்குரங்கு.
ஊழியை வாலில் கட்டி இழுத்து வரும் குரங்கு.
தென் இலங்கை தீக்குரங்கு.
பதின்மதக்களிறு ஓருடலின் உள்ளே புகுந்திட்ட குரங்கு.
நான் குரங்கு…

என்னடா இந்த ஆளு சுயசரிதைக்கவிதை எழுதறானேன்னு யோசிக்கிறீங்களா? இல்லைங்க இது நண்பர் சத்யமூர்த்தி என்ற இசை எழுதியது. கொஞ்சமா எழுதினாலும் நிறைவா எழுதும் ஆள். இவரது பல்சர் கவிதையைப் படிங்க அதிலுள்ள படிமக் குறியீடு அசத்தலா இருக்கு.

நமக்கு நாமே குத்து – எப்ப?

.

1) வழக்கமா சூப்பரா சமைக்கிறவங்க, நண்பனைக் கூட்டிட்டு வர்ரேன்னு 2 நாளைக்கு முன்னாடிச் சொன்னதுக்கபுறமும் சொதப்பலா சமைச்சு வைப்பாங்களே, அப்ப.

2) வாஸ்துபடி பீரோ கிழக்க பாக்க இருந்தாத்தாங்க நல்லதுன்னு ஒரு ஞாயித்துக்கிழமை லீவக்கூடஅனுபவிக்கவிடாம நம்ம உயிரை வாங்கிட்டு, வாஸ்து சரியில்லைன்னு ஒரு மாசத்துலயே வீட்டையே மறுபடி தலைகீழா மாத்த முயற்சிப்பாங்களே, அப்ப

3) ரெண்டே ரெண்டு லார்ஜுக்கு பெரிய அலைப்பற பன்ணுவாங்க ஆனா அவஙக அண்ணனோ மாமாவோ ஃபுல் மப்புல அலப்பற பண்ணுறப்ப கம்முன்னு இருப்பாங்களே, அப்ப

4 – அ) குழந்தைகளைக் கூட்டீட்டு எங்கயாவது போலாம்ன்னு ப்ளான் பண்ணுனா அம்மாவாசை, சஷ்டின்னு எதையாவது சொல்லுவாங்களே, அப்ப

4 -ஆ) டூர் முழுவதும் ஆகுற செல்வ அடுத்து 3 மாசத்துக்குச் சொல்லி சொல்லிக் காட்டிட்டே இருப்பாங்களே, அப்ப

5) பட்டுச்சேலை நல்லா இருக்கேன்னு ஒரு ஆளப்பாத்தா குத்தமாய்யா? அது மாதிரி ஒண்ணு வாங்கிக் கொடுக்கலாமேன்னு யோசிக்கிறப்ப, “என்ன ஜொள்ளு”ம்பாங்களே, அப்ப

6)அவங்க அம்மாவோ, அப்பாவோ வரும்போது இருக்கிற குஷி, நம்ம வீட்டு ஆளுக வரும்போது இல்லாட்டக் கூடப் பரவாயில்லைங்க, இந்த இடுப்பு வலியும் மத்த வலியும் அந்த சமயத்துல வந்து உக்காருமே, அப்ப்

7) பையனோ, பொண்ணோ ஆசையா வந்து நம்ம மேல விழுவாங்க அதுதான் நமக்கு ஆறுதலே, ஆனா அப்ப “ஏய் போய் ஹோம் வொர்க்க முடி. என்னவோ பெரிய அதிசய அப்பா”ம்பாங்களே, அப்ப

8) நல்லா அடிக்கிற கலர்ல மேட்சே இல்லாத டிசைனை எடுத்து வச்சுக்கிட்டு நம்மகிட்ட அபிப்ராயம் கேப்பாங்க. நல்லா இருக்குன்னாலும் பிரச்சினை, இல்லைன்னாலும் பிரச்சினை. அந்த மாதிரி சமயத்துல

9) எங்கயாவது ரொமாண்டிக்கான டூர் போயிருக்கப்ப, ஏங்க பால் பைய எடுத்திட்டிங்களா, பாத்ரூம் கதவச் சாத்தீட்டீங்களா? பேப்பர்காரங்கிட்டச் சொல்லீட்டிங்களான்னு நச்சரிப்பாங்க, அப்ப

10) ஆஃபீஸ் விட்டு வீட்டுக்கு வந்து ஏதாவது நாலு வார்த்தை பேசி சிரிச்சு இருக்கலாம்னு பார்த்தா, எப்பப் பாத்தாலும் சீரியல் பாக்குறாங்களே, அப்ப

இதையும் ஒருக்காப் படிங்க

.

சீரல்ல அவர்கண் படின்

.

பொதுவெளியில் சாதியின் பயன் உறவுமுறைத் திருமணம் என்பதன் நீட்சியாகத் தொடர்கிறது என்பதைத் தவிர்த்து வேறெதுவும் இல்லாத சூழலில் சாதிய ஆதரவுக்குரல்கள் நசுக்கப்பட வேண்டும்.

இது கோவியாரின் பதிவில் உள்ள வரி. அப்படித்தான் நடக்கிறதா? சாதி முன்னெப்போதையும் விட வீறு கொண்டு இருக்கிறது. தன் மாயக்கரங்களை எங்கெங்கும் நீட்டி பரவுகிறது என்பது என் வாதம். சாதீய ஆதரவுக் குரல்களை எழுப்புவதும் நாம்தானே?

தென் தமிழகத்தின் ஆதிக்கச் சாதியினர், திருமணம் மற்றும் அனைத்துப் பத்திரிக்கைகளிலும் போஸ்டர்களிலும் தங்கள் பெயரைச் சாதியுடன் தான் எழுதுகிறார்கள். ஆனால் அவர்களே தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போது அதன் உட்பிரிவில் எதைக் கொடுத்தால் மிகப் பிற்படுத்தப்பட்ட் அல்லது சீர் மரபினர் வகையில் ஆதாயங்களைப் பெறமுடியும் எனப் பார்த்துத்தான் சேர்க்கிறார்கள்.

ஒரு முறை திருநெல்வேலியில் விடுதி அறை கிடைக்காமல் திண்டாடினேன். சுரண்டையில் இருக்கும் என் மச்சினனை அழைத்துச் சொன்னால், ஒரு குறிப்பிட்ட விடுதிக்குச் சென்று அங்கிருந்து அழைக்கச் சொன்னார். அழைத்தால் அந்த விடுதியில் இருப்பவரிடம் என்ன பேசினாரோ தெரியாது உடனே, “ஏங்க நீங்க அவரோட அத்தான்னு சொல்றதில்லையா? என்னங்க இது”ன்னு சொல்லி உடனே அறை கொடுத்தார். “என்னடே சொன்னே?” என்று கேட்டால், “அது எதுக்கு உமக்கு” என்று மழுப்புகிறான். சாதியின் பெயரால் ஆதிக்கம் அந்த அளவுக்கு. ஆனால் பள்ளிச் சான்றிதழில் ”சீர் மரபினர்”

இன்னும் சிலர் வாழும் இடம் வேறிடமாக இருந்தாலுல் தங்கள் சொந்த ஊரில் சான்றிதழ் வாங்கினால் அதிக பலனிருக்கும் என்பதால் அங்கு சென்று ஆட்களைப் பிடித்து வாங்கி விடுகிறார்கள். சரி அப்படித்தான் மிகவும் சிரமப்பட்டவர்கள், அவர்கள் குழந்தைகள் இந்தப் பயனை அனுபவிக்கட்டும் என்றால் அதுவும் இல்லை; நல்ல வசதியுடன் வாழ்கிறவர்கள்.

இதே போலத்தான் கோவையில் இருக்கும் ஒரு சாதியினர். தங்கள் வீடுகளுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை நுழைய அனுமதிப்பதில்லை. ஆனால் சாதி வழங்கும் அனுகூலங்களை மட்டும் பெறுகிறார்கள்.

ஒரே சாதிக்கு இரண்டு பெயர்கள் ஒன்று உயர்வாகத் தங்களைப் பற்றிப் பெருமை பேச ம்ற்றொன்று அதன் உட்பிரிவு மூலம் பலன்களை அனுபவிக்க என்ற நடைமுறை களைந்தால் நலம்.

இரட்டைக் குவளை முறை இன்னமும் இருக்கிறது. கொங்கு மண்டலத்தில்தான் அது அதிகம். வறியவர்கள் வறியவர்களாகவும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.

தறி முதலாளிகளில் சிலர் தன்னிடம் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள் படிப்பதை விரும்புவதில்லை. இரண்டு காரணங்கள் – ஒன்று இயல்பாகவே அந்தக் குழந்தைகள் நன்றாகப் படிப்பதும் தன் குழந்தை தேறாதவனாக இருப்பதும் சங்கடத்தில் ஆழ்த்துகிற்து. இரண்டு அந்தக் குழந்தைகள் படித்து வேறு வேலைக்குச் சென்றுவிட்டால் இவர்களுக்கு வேலைக்காரர்கள் கிடைப்பதரிது.

ஒரு கிடாவெட்டில் கூட அனைவரும் சமமாக அமர்ந்து உணவு உண்ணமுடியாது. இவர்களுக்குத் தனிப்பந்திதான். பாலியல் கொடுமைகள் பற்றி இங்கு பொது வெளியில் எழுத முடியாது.

அதே போலத்தான் தலைவர்களைச் சாதிச் சங்கங்கள் கேவலப்படுத்துவதும். சொத்து சுகம் நாடார் / சொந்தந்தனை நாடார் / பொன்னென்றும் நாடார் / பொருள் நாடார் /தான்பிறந்த அன்னையையும் நாடார் /ஆசைதனை நாடார் /நாடொன்றே நாடித் – தன் /நலமொன்றும் நாடாத /நாடாரை நாடென்றார். கண்ணதாசன் இத்தனைமுறை நாடார் என்றதாலோ என்னவோ நாடார் சங்கப் போஸ்டர்களில், காலண்டர்களில் வலம் வருகிறார் பெருந்தலைவர் காமராசர். வ உ சியையும் விடவில்லை இவர்கள். நடிகர் கார்த்திக்கை வைத்துச் செய்த கோமாளித்தனம் இன்னும் பிரபலம்.

அரசியல் கட்சிகள் சாதிவாரியாக வேட்பாளர்களை நிறுத்துவதும் சாதிச்சங்கங்களை ஆதரிப்பதும் வேறென்ன?

உலக மக்களே ஒன்றுபடுங்கள் எனக்கூவும் தோழர்களும் தங்கள் குழந்தைதையைச் சேர்க்கும்போதும் இதே நெறிமுறையைக் கடைபிடிக்கிறார்கள்.

அந்த இந்த இசங்களை, ஈயங்களை, துவாக்களை ஒழிப்பதைவிட்டு முதலில் மாற்றங்களை நம்மிடமிருந்தே நாம் தொடங்கவேண்டும்.

சமீபத்தில் என்னுடைய பிரிண்டிங் மெஷினை விற்கும்போது புரோக்கர் சொன்னது, “சார் 50,000 ரூபாய் குறைச்சுன்னாலும் நம்ம ஆளுகளுக்குக் கொடுங்க சார்”.

அது சரி.

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.

கலைஞர் உரை:

சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.

.

கலைடாஸ்கோப் – 17-07-2010

.

இன்றைய (அ)லட்சியம் நாளைய (ஏ)மாற்றம்.

திருச்சியில் ஒரு ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்த வாசகம். இரண்டுமே சரிதானே?

*******************************************************************

திருச்சியில் இருக்கும் எங்கள் நிறுவன எக்ஸிக்யூட்டிவின் பைக் ரிப்பேராகி விட்டது. ஆனால் இரண்டு நாட்கள் தொடர் அலைச்சல் இருந்தது. ஆட்டோ பேசினால் கட்டுபடி ஆகவில்லை.

என்ன செய்யலாம் என மேன்சன்காரர்களிடம் பேசியதில் சுலபமான தீர்வு கிட்டியது.

சைக்கிள் கடை ஒன்றில் டிவிஎஸ் எக்ஸ் எல் வண்டி வாடகைக்குத் தருகிறார்கள். தெரிந்தவர்கள் உறுதி சொல்ல வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் மட்டுமே. பெட்ரோல் அவர்களே போட்டுத் தருகிறார்கள். இடையில் நின்றால் பெட்ரோல் போட வேண்டியது நமது வேலை.

*******************************************************************

”வாங்க உட்காருங்க”
“நன்றி சார்”
“என்ன படிச்சிருக்கீங்க?”
“பி ஏ”
“பி ஏல என்ன மேஜர்?”
“மேஜர்லாம் இல்ல சார்”
“அதெப்படி? சரி மொழி தவிர வேற என்ன பாடம் படிச்சீங்க?”
” ஜியாக்ரபி”
“பி ஏ ஜியாக்ரபியா?”
“இருங்க சார் நான் இன்னும் சொல்லி முடிக்கலை”
“சொல்லுங்க”
“ஜியாக்ரபி, ஸ்டேட்டிஸ்டிக்ஸ், ஹிந்தி”
“என்னது இதெல்லாம்?”
“நான் பி ஏவில் படித்த பாடங்கள்”
எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதெப்படி ஒருவர் இளங்கலையில் இம்முன்றையும் ஒருசேரப் படிக்க முடியும். ஜியாக்ரபி படிக்கவும், ஸ்டேட்டிஸ்டிக்ஸ் படிக்கவும் வேறு வேறு மனநிலை தேவை. கூடவே இந்தி படிக்க முற்றிலும் வேறு மனநிலை தேவை.

பி எஸ் சியில் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி & மேத்ஸ் மூன்றையும் ஒரு சேரப் படிக்கிறார்கள். குல்பர்காவில் மட்டுமல்ல; மொத்த கர்னாடகாவிலும் இதே நிலைதான். ஒருவேளை எம் ஏ அல்லது எம் எஸ்சியில் தனிப்பாடமாகப் படிப்பார்களோ?

*******************************************************************

வித்தியாசமான விளம்பரங்கள் செய்வதில் மெக் டொனால்டு காரர்கள் பிரபலமானவர்கள். அவரகளது கடைகளில் இலவசமாக காப்பி தருவதை இப்படி விளம்பரித்திருக்கிறார்கள்.


விளம்பரத்துக்கு விளம்பரமும் ஆச்சு விளக்குக் கம்பமாகவும் ஆச்சு. இதைத்தான் கிராமங்களில் ஆடு மேச்சமாதிரியும் ஆச்சு அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு என்பார்கள்.

*******************************************************************

இந்த வாரம் ஜீவ்ஸின் கவிதை; குழுமத்தில் பகிரப்பட்ட ஒன்று.

தவறுகள்..

அலுவலகத்தின் பிரச்சினை
அகத்தின் பிரச்சினை
அனைத்தும் சேர்ந்திருக்க
அப்பாவென்று அழைத்து
கை பிடித்து விளையாட
அழைக்கும் குழந்தையிடம்
உரத்தக் குரலெழுப்பி
கை உயர்த்தி நிற்கையில்
செய்யாத தவறுக்கெல்லாம்
அப்பாவும் அம்மாவும் அடித்த
வலி சுரீரென எழுகிறது

கவிதையின் இறுதியில் ”உள்ளங்கையில்” என்ற வார்த்தை இருக்கிறது. அது இல்லாமலேயே செறிவாக இருப்பதாகத் தோன்றியதால் நீக்கியிருக்கிறேன்.
அவரின் சிறுகதை அகநாழிகை இதழில் வெளியாகி இருக்கிறது.

வேட்ப மொழிவதாம் சொல்

”அப்பா”

“சொல்லுப்பா”

“பாலு அங்கிள் ரெம்பப் பெரியவராப்பா?”

“ஏன் கேக்குறே?”

“இல்ல போன வாரம் அவர் வீட்டுக்குப் போயிருந்தம்ல அப்ப பார்த்தேன் பெரிய பெரிய புத்தகங்கள் எல்லாம் வச்சிருந்தாரு. அதெல்லாம் அவரு படிப்பாராப்பா?”

“ஆமாச் செல்லம்”

“அவரு எழுத்தாளர்னு கேள்விப்பட்டேம்பா உண்மையா?”

“ஆமாப்பா புத்தகம் எல்லாம் எழுதி வெளியிட்டிருக்கார். பெரிய பெரிய எழுத்தாளர்களோட பழகுறவர் அவருப்பா”

“சரிப்பா,நீங்க ரெண்டு பேரும் ஆர்க்யூ பண்ணும்போது அவரு உங்களை நாயின்னாரே உங்களுக்குக் கோவம் வரலையா?”

“தம்பி, அவரும் நானும் ஒரு விஷயம் குறித்துப் பேசினோம், என் சைடுல ஸ்ட்ராங்கா நிறையப் பாயிண்ட்ஸ் இருந்துச்சு அவருகிட்ட இருந்த பாயிண்ட்டுக்கெல்லாம் நான் பதில் சொல்லிட்டேன். என்னை மடக்க வழி தெரியாமல் அவரு அப்படிச் சொல்லிட்டாரு. உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சம் நிதானமிழந்துட்டாரு”

“உங்களுக்குக் கோவம் வரலையா?”

“எதுக்குக் கோபப்டணும்? இப்ப உனக்குப் பிடிச்ச சாக்லேட் ஒரு கையிலயும் பிடிக்காத சாக்லேட் ஒரு கையிலேயும் வச்சா நீ எத எடுத்துக்குவே?”

“எனக்குப் பிடிச்ச சாக்லேட்ட”

“அதுமாதிரித்தான் நானும் அந்த அங்கிள்கிட்ட இருக்க நல்லத மட்டும் எடுத்துக்கிட்டு மிச்சத்த அந்த அங்கிள்கிட்டயே விட்டுட்டேன்”

”சரிப்பா, எப்படிப் பேசக்கூடாதுன்னு புரிஞ்சுக்கிட்டேன்”

”எப்படிப் பேசணும்னும் தெரிஞ்சுக்கோ”

“எப்படிப்பா?”

”கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.”

“என்ன அர்த்தம்ப்பா?”

கலைஞர் தாத்தா சொல்றாரு, “ கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்”.

சாலமன் பாப்பையா சொல்றாரு, “ நண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும் கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு கேட்டவர் மீண்டும் கேட்க, இதுவரை கேளாதவரும் விரும்பிக் கேட்கப் பேசுவது என்றும் கூறலாம்)”

நன்றி : திருக்குறள்.காம்

.

கொன்றன்ன இன்னா செயினும்

குறள் 101:

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

கலைஞர் உரை:

வாராது வந்த மாமணி ( என்பதுபோல், செய்யாமற் செய்த உதவி) என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.

குறள் 102:

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

கலைஞர் உரை:

தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.

குறள் 103:

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

கலைஞர் உரை:

என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.

சாலமன் பாப்பையா உரை:

இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.

குறள் 104:

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

கலைஞர் உரை:

ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.

சாலமன் பாப்பையா உரை:

தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.

குறள் 105:

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

கலைஞர் உரை:

உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.

குறள் 106:

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

கலைஞர் உரை:

மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:

உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.

குறள் 107:

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

கலைஞர் உரை:

ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.

சாலமன் பாப்பையா உரை:

தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்.

குறள் 108:

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

கலைஞர் உரை:

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.

குறள் 109:

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

கலைஞர் உரை:

ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.

சாலமன் பாப்பையா உரை:

முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.

குறள் 110:

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

கலைஞர் உரை:

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

சாலமன் பாப்பையா உரை:

எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

நன்றி : திருக்குறள்.காம்

.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தல்

பெங்களூர் ராமன், நண்பனின் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான் . தெருவில் இரண்டு பேர் சரமாரியாக மாறி மாறித் திட்டிக் கொண்டிருந்தனர். இவன் பாட்டுக்குச் சிவனே என்று போய்க் கொண்டிருந்தான்.

திடீரென இவன் பெயர் அடிபடுவதைக் கேட்ட்டான். சரி வேறு யாரோ ராமன் போலிருக்கிறது என்று சும்மா இருந்தான். ஆனால் திட்டியவன் ஊர் பெயர் உட்பட ”பெங்களூர் ராமன் அயோக்கியன் ” என மீண்டும் அழுத்தம் திருத்தமாககச் சொன்னான்.

ராமன் எட்டி அவன் சட்டையைப் பிடித்து கேட்டான், “எலேய் ஏண்டா அப்படிச் சொன்னே?”.

திட்டியவன் ஏதும் பதில் சொல்லவில்லை. அது கூடப் பரவாயில்லை, “சட்டை நல்லா இருக்கில்ல? லூயி பிலிப் , கசக்காதே “ என நக்கல் அடித்தான்.

பொறுமை இழந்த ராமன், “ நீ ஒரு அப்பனுக்குப் பிறந்தவனா இருந்தா, என்னை திட்டினதுக்குக் காரணம் சொல்லுடா” என்றான்.

இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அய்யப்பன் வந்து, “ஏண்டா அவன் சட்டையைப் பிடிக்கிறே? ” என்று சத்தம் போட்டார்.

“என்ன நடந்ததுன்னு கேளுங்க சார்” என்றான் ராமன்.

“என்ன நடந்தாலும் பரவாயில்லை அவன் சட்டையைப் பிடித்தது தவறு ” என்றார் மீண்டும் அய்யப்பன்.

“நல்லா இருக்குய்யா உங்க ஞாயம் ” என்று நொந்து கொண்டே கிளம்பினான் ராமன்.

அய்யப்பன் அண்ணன் பையன் கேட்டான் , ”ஏஞ்சித்தப்பா, என்ன நடந்ததுன்னு கேக்காமச் சண்டைய விலக்கி விடுறீங்களே? எனக்கு இது சரியாப் படலையே?”

“அடப்போடா லூசு திட்டுனவன் நம்ம ஆளுடா அவனுக்குச் சப்போர்ட் பண்ணாம எவனோ ரோட்டுல போறவனுக்கா சப்போர்ட் பண்ண?” என்றார் அய்யப்பன்.

.