அன்பின் நர்சிம்,
ஒரு கை நிறைய வேர்க்கடலை அள்ளி சாப்பிடும்போது ஒன்றிரண்டு சொத்தை வருகிறது என்பதால் மொத்தக் கடலையையும் நாம் ஒதுக்கி விடுவதில்லை அல்லவா? அதுபோலத்தான் ஒரு பதிவு இடறி விட்டது என்பதற்காக எழுதாமல் இருப்பது என்பது சரியில்லை.
மேலும் உன்னை ரசித்து வாசித்த/வாசிக்கும் என்னைப் போன்ற சிலருக்காவது நீ மீண்டும் எழுதத்தான் வேண்டும். அந்தந்த நேர உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு முடிவுகள் எடுப்பதும் பின் அதற்காக வருந்துவதும் மனித இயல்பு. இதற்கு ஆட்படாத மனிதனே இல்லை எனலாம்.
ஒரு கொலைக் குற்றவாளிக்குகூட இந்த சமுதாயம் வாய்ப்புக்களை வழங்குகிறது என்றபோது நீ எழுதாமல் இருப்பது என்னவோ போலிருக்கிறது. மேலும் இனி நீ எழுதும்போது முன்னிலும் சிறந்த படைப்புக்களை தருவாய் என நம்புகிறேன்.
செய்த தவறுகளிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களினால் தன்னைச் செதுக்கிக் கொண்டு முன்னேறும் சிறப்பு மனிதனுக்கே உண்டு.
மீண்டு(ம்) வா.
தோழமையுடன்
பி கு : நிச்சயமாக இந்தப் பதிவுக்கு எதிர்ப்புகளும் கண்டனங்களும் வரும். அதிகப்பிரசங்கி நாட்டாமை, உருவத்தில் பெரியவன் அறிவில் சிறியவன், நல்லவன் போல் நடிப்பவன், தகரடப்பா, நசுங்கிய சொம்பு, நாதாரி போன்ற நாகரீக வார்த்தைகளில் தொடங்கி, தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளைத் தாங்கி வரும் என எனக்குத் தெரியும். இருந்தும் இதை இங்கே நான் பதிப்பிக்கக் காரணங்கள் பின் வருவன.
1. தவறு செய்த ஒரு மனிதனுக்குக் கொடுக்கப்படும் அதிகப்பட்சத் தண்டனை அவனைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவதே. நாம் அனைவருமே நர்சிம்மின் அந்தப் பதிவிற்கு உடன்படவில்லை என்பதைச் சொல்லி நர்சிம்மைத் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டோம். அவரும் தனது தவறை உணர்ந்துவிட்டார்.
2. நான் சந்திக்கும், பேசும் அல்லது மின்னரட்டையில் ஈடுபடும் பெரும்பாலோர் நர்சிம் மீண்டும் எழுத வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார்கள். ஆனால் இதைபோல ஒரு பதிவை எழுதத் தயங்குகிறார்கள். காரணம் அவதூறுக்கு பயப்பதே.
3. இந்தப் பிரச்சினைக்கிடையிலும் நர்சிம்மைத் தொடர்வோர்(555) குறையவே இல்லை. அதன் அர்த்தம் நர்சிமின் இந்தப் பதிவைக் கண்டித்து இனித் தரப்போகும் நல்ல பதிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதே.
4. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.
You must be logged in to post a comment.