Month: January 2018

முதல் சமூக நீதிப் போராளி

தன் சீடனின் திறமையின் மீதான அதீத நம்பிக்கையில் துரோணர் சொன்னார், “இச்சபையில் இவனை வெல்ல எவரும் உண்டோ?” திறமையில் சற்றும் குறையாத கர்ணன் சொன்னான் “உள்ளேன் அய்யா”
 
பரஸ்பர நிதி நிறுவனங்கள்கூட யாரும் படித்துவிடமுடியாத 5 அளவு எழுத்தில் “சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை” எனப் பொறுப்புத் துறப்புக் குடுக்கின்றன. துரோணர் அப்படியெல்லாம் சொல்லவில்லை. “வெல்ல, அரசவம்சத்தினன் உளனோ?” எனக் கேட்டிருந்தால் நியாயம்.
 
“யார் நீ? எத்தேச அரசன்?” கர்ணன் நிலைகுலைகிறான். உடுக்கை உழந்தவன் இடுக்கையைக் களைய, துரியோதனன் சபையேறிச் சொன்னான், ”ஒன்றே சாதி”
 
கற்றவர்க்கும் நலன் நிறைந்த கன்னியர்க்கும் வண்மைகை
உற்றவர்க்கும் வீரரென்று உயர்ந்தவர்க்கும் வாழ்வுடைக்
கொற்றவர்க்கும் உண்மையான கோதின்ஞானசரிதராம்
நற்றவர்க்கும் ஒன்றுசாதி நன்மைதீமைய இல்லையால்.
 
அ.சொ.பொருள்
நலன் நிறைந்த = நலம் நிறைந்த
வண்மை கை உற்றவர்க்கும் = கொடை வழங்கும் கைகளை கொண்டவர்களுக்கும்
வாழ்வுடைக் கொற்றவர்க்கும் = உயர்ந்த வாழ்வை உடைய அரசர்களுக்கும்
கோதின்ஞானசரிதராம் = குற்றமற்ற ஞானம் அடைந்து அதன் படி வாழ்பவர்களுக்கும்
நற்றவர்க்கும் = நல்ல தவம் செய்தவர்களுக்கும்
நன்மைதீமை இல்லையால் = அதில் உயர்வு தாழ்வு இல்லை
 
உடுக்கை இழந்தான் கைபோல என்ற குறளை, எங்கள் தமிழய்யா ராமச்சந்திரன் நடத்திக் கேட்க வேண்டும். “டேய் உடுக்கை இழந்தவன் என்றால் அடிக்கிற உடுக்கு இல்லடா, போட்டிருக்கிற துணி. அதுகூட அவுந்துபோய் அம்மனமாகி நிக்கிம்போது வந்து தோள்ல இருக்க துண்ட எடுத்துக் கட்டி விடுறது இல்லைடா. அது அவிழும் முன்பே உதவுறது. உதாரணமா நீ பள்ளிக்கூடப் பைய ஒரு கைலயும் சாப்பாட்டுப் பைய இன்னொரு கைலயும் எடுத்துட்டுப் போறே திடீர்னு உன் கால்சட்டை கழறுதுன்னு வச்சுக்கோ என்ன செய்வே? டபக்னு உன் முழங்கையால இடுக்கிக்கிட்டு ரெண்டு பையையும் கீழ வச்சிட்டு சரி பண்ணிக்குவ இல்ல, அது மாதிரித்தான். எப்படி முழங்கை அனிச்சையாக உடனே உதவுதோ அது போல உதவுவதுதான் நல்ல நட்பு.”
 
நல்ல தமிழய்யா அமைவது, ஊழ்வினை.

நட்பெனப்படுவது யாதெனில்

நல்ல துவக்கமாக அமைந்திருக்கிறது இப்புத்தாண்டு.

விருதுநகர் சென்று வெயிலானைச் சந்தித்தேன்.  பகல் பொழுது, அவரது அலுவலகத்தில். நான் சென்றதும் தொழில் நிமித்தமாகத்தான். என்றாலும் கேலியும் கிண்டலுமாகக் கழிந்தது பொழுது.

வெயிலான் போன்றொருவருடன் நட்பு பாராட்டுவது மிக எளிது. அவரைச் சந்தித்து கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இருக்கும். அப்படி ஏதும் தெரியாவண்ணம் ஏதோ நேற்று இரவுதான் பேசிப் பிரிந்தாற்போல தொடரும் விதமான இயல்பு அவருடையது. A true friend is one with whom you can maintain silence, yet continue the relationship.

உண்மையில் வெயிலான் கல்லூரி ஆசிரியராயிருக்க வேண்டும். பொதுவாக ஒரு நல்ல ஆசிரியருக்குண்டான குனமான, ”தேடித் தெளிதலும் தெளிந்ததைத் பகிர்தலும்” அவரது இயல்பு.

அவரது அலுவலகச் சுவற்றிற்குள் இருந்து கொண்டே மத்திய மாநில அரசுகளின் வலத்தளங்களில் அலைந்து திரிந்து அனுபவங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். கடினச் செயல்முறைகளுக்கு எளிய வழிமுறையும், அத்தளங்களில் நிலவும் போதாமையும் அவருக்கு அத்துப்படி. ஆற்று நீரில் அள்ளிய ஒரு குவளை நீரைப் போல் நானும் கொஞ்சம் கற்று வந்தேன்.

விருதுநகரில் கமாலியா உணவகம் பெயர் பெற்றது. இவர் அவர்களது செல்ல வாடிக்கையாளர் போலிருக்கிறது. உடல் இளைக்க அவனவன் சாப்பிடாமல் விரதமிருக்க, இவர் கமாலியாவில் சாபிட்டே இளைத்திருக்கிறார், 20 கிலோ. கேட்டால் பேலியோ என்கிறார். அவர் ஒரு மட்டன் சுக்கா போதுமென்க, நான், சாப்பாடும் அயிரைமீன் குழம்பும், ஈரல் பொறியலும் சாப்பிட்டு அவருக்குத் துணையிருந்தேன்.

மாலை கோவில்பட்டியில் குருநாதன் இல்லத்தில் கழிந்தது. குருவை 1983 ஆகஸ்டில் முதன் முதலில் பார்க்கும்போது அப்போதைய சூப்பர்ஸ்டார் சுதாகர் போலிருந்தான். அதே உயரம், முன்பக்கம் வளைந்த நடை, சுருட்டைத்தலை என.

அடிப்படையில் உள்வயமாக யோசிப்பவன், வீட்டிலிருந்து வெகுதொலைவு விலகாதவன், அதனால் யாரிடமும் எளிதில் பழகாதவன் என்றே எல்லோரும் என்னிடம் சொல்லியிருக்க, ஏனோ என்னிடம் உடனே ஒட்டிக் கொண்டான். நான் நெல்லைக்காரன் என்பதால்கூட இருந்திருக்கலாம்.

அன்று முகிழ்த்த நட்பு 35 வருடங்களாகத் தொடர்கிறது. இடையில் வாழ்க்கை தன் கரங்களால எங்களை வேறு வேறு பக்கத்தில் வீசி எறிந்த போதும், தொடர்பில் இருக்கிறோம். என் மகளை மடியில் அமர்த்தி மொட்டையிட்டு காதுகுத்தித் தாய்மாமனாகியவன்.

பைநிறையக் கடலை மிட்டாயையும், கை நிறைய இஞ்சி மரப்பாவையும் மனசு நிறைய குரு&விஜி இருவரின் அன்பையும் சேகரித்து வீடு வந்து சேர்ந்தேன்.