நகைச்சுவை

கதம்பம் – 25-12-09

.

நண்பர்களுக்கு இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

பைபிளில் எத்தனையோ வசனங்கள் இருந்தாலும் இந்த வசனம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

”நான் உன்னைக் கைவிடுவதுமில்லை உன்னை விட்டு விலகுவதுமில்லை”

கடவுள் உங்கள் கூடவே இருந்து உங்களை ஆசிர்வதிக்கட்டும்.

வேட்டைக் காரனை எல்லோரும் துவைத்துத் தொங்க விட்டிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்தது நர்சிம்மின் பதிவு. பதிவைப் பார்த்ததும் அவரை அழைத்துப் பேசினால் மனிதர் பொங்கி விட்டார். ”அண்ணாச்சி இன்னும் எழுதனும்னு நெனைச்சிருந்தேன். எவனாவது விஜய் ரசிகன் (கார்க்கி அல்ல) போட்டுத்தள்ளிடுவானோன்னு பயம் அதான் கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கேன்” என்றார். ஹும் அடக்கி வாசிச்சதே இவ்வளவுன்னா?

ஃப்ரெண்ட்ஸ் படத்தில் விஜய் ஸ்டார், சூர்யா அப்பொழுதுதான் நடிகராகி இருக்கிறார். அந்தப் படத்திலிருந்து துவங்கி எவ்வளவு உயரம் வந்து விட்டார் சூர்யா. விஜய் தேங்கி விட்டார். சூர்யாவிற்குச் சொல்லிக்கொள்ளும்படி காக்க காக்க, கஜினி பொன்ற படங்கள் இருக்கையில் விஜய்க்கு அப்படி ஏதும் இல்லை என்பது கொடுமை.

எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதின் நஷ்டம் இதுதான்.

நாலு நாள் ஊருக்குப் போகிறேன் என்னை யாரும் தேடாதீர்கள் என ஒரு மின்ன்ஞ்சல் அனுப்பினார் ஆதி. இவரை யாரும் தேடமாட்டார்கள் என்ற புரிதல் கூட இல்லாத அப்பாவி பாவம். அதற்கு வந்த பதில் மின்னஞ்சல் அதைவிட சிரிப்பு.

“நாலு நாள்தானா???? அவ்வ்வ்வ்வ்வ்”

“இந்த நாலு நாள் இனிய நாலு நாள்”

கேபிளின் பதில் உச்சம். “ என்னாது ஊருக்கு போறீங்களா. அப்ப திரும்ப வரும் போது குறும்படத்தோட இல்ல வருவீங்கா.. மக்கா.. எல்ல்லாரும் அலர்ட்டா இருங்கா….. ஓடுங்க.. பின்னாடி ஒரு படம் வருது.. (இங்கிலீஷ் த்மிழ் டப்பிங் பட வசனத்தில் படிக்கவும்)”

ஆனாலும் ரெம்பத்தான் ஓட்டுறாங்கப்பா.

மக்களின் பேராசை டுபாக்கூர் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறுவதில் வெளிப்படுகிறது. ஆறே மாதத்தில் பணம் இரண்டு மடங்கு என்பதை எப்படி ந்ம்புகிறார்கள் எனத் தெரியவில்லை. எந்தத் தொழிலும் இது சாத்தியமில்லை.

சமீபத்தில் பணம் இழந்தவர் கொடுத்த வாக்குமூலம், “ ஆல்ட்டோ கார் வாங்கலாம்னு 2.5 லட்சம் வச்சிருந்தேன். இரண்டு மடங்கா கிடைச்சா ஹோண்டா சிட்டி கார் வாங்கலாமேன்னு அதுல போட்டேன். இப்ப உள்ளதும் போச்சு” அடப் பாவிகளா ஆசைக்கு அளவில்லையா?

ரூ 5000 கட்டி மெம்பர் ஆன பின் விளம்பரங்களை க்ளிக் செய்தால் பணம் கிடைக்கும் எனச் சொல்லி ஒருவர் சுருட்டியிருக்கிறார். ஆளுக்கு 5000 என்பதற்கு பதிலாக குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை X 5000 எனக் கட்டியிருக்கிறார்கள். இவர்கள் கிளிக்கிய விளம்பர நிறுவனங்களிடமும் நல்ல பணம் பெற்றிருக்கிறான் சுருட்டியவன். சுருட்டிய பணம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? 200 கோடி.

இந்த மாத மணல்வீடு (ஆசிரியர் ஹரி கிருஷ்ணன், ஏர்வாடி, குட்டப்படி அஞ்சல் மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம். செல் : 9894605371) இதழிலிருந்து கார்த்திகேயனின் கவிதை

மொன்னை மனசு

முற்றத்தில்
மழைநீர் கொஞ்சம்
மிச்சமிருக்கிறது

கத்திக் கப்பல்
செய்துதாவென்றது
குழந்தை

கத்தி எதெற்கென்றேன்

முட்டும் மீனை
வெட்டுவதற்கு என்றது
விழிகள் விரிய

முனை கொஞ்சம்
மழுங்கலாகச்
செய்து கொடுத்தி விட்டேன்

தெலுங்கானா பிரச்சினை நாள்தோறும் புதிய ரூபம் எடுக்கிறது. தேன்கூட்டைக் கலைத்தவனின் நிலைதான் மத்திய அரசுக்கு. இருந்தாலும் கார்க்கி ஹைதையிலிருந்து கிளம்பிய உடனே இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததில் ஏதும் கனெக்சன் இருக்குமோ?

அது ஏன்?


1. என்னதான் தங்கமணி சொல்லுறதுக்கு நாம நோன்னு சொன்னாலும் கடைசில அவங்க சொல்லுறதுதான் நடக்குது. நாமும் அதைத்தான் செய்கிறோம். தெரிந்திருந்தும் உடனே நோ சொல்கிறோமே; அது ஏன்?

2. என்னதான் நாம் பார்த்துப் பார்த்து செலக்ட் செய்தாலும் அது தங்கமனியிடம் இருக்கும் கலராகவோ அல்லது டிசைனாகவோ அமைந்து விடுகிறதே; அது ஏன்?

3. தங்கமணியின் பெற்றோர் வரும் நாள் பார்த்து அலுவலகத்தில் அதிக வேலையும் வீட்டுக்குத் தாமதமாக வரும்படி அமைகிறதே; அது ஏன்?

4. அலுவலகத்தில் சூப்பராகப் பொய் சொல்லி சமாளிக்கும் நாம் தங்கமணியிடம் சொல்லும் பொய்யின் சாயம் மட்டும் உடனே வெளுத்து விடுகிறதே; அது ஏன்?

5. சாதாரணமா தங்கமணி சொல்லும் 10 பொருட்களை வாங்கி வருகிறோம். ஆனா மறக்காம வாங்கிட்டு வாங்கன்னு சொல்லுறது மட்டும் மறந்து போயிடுதே; அது ஏன்.

6. நல்ல பசியோட வரும் அன்னைக்குப் பாத்து முடியலைங்கன்னு ஏதாவது சுலபமான ஐட்டம் சமைச்சு வக்கிறாங்க. ஆனா நல்லா ஒரு பிடி பிடிச்சுட்டு வர்ர அன்னைக்கு சூப்பரா சமைச்சு வைக்கிறாங்களே; அது ஏன்.

7. ஒவ்வொரு திருமண நாளன்றும், இனிமே தங்மணி எதிர்பார்க்கிற மாதிரி நல்ல ரங்கம்ணியா நடந்துக்கணும்னு சபதம் எல்லாம் எடுத்துட்டு, அடுத்த நாளே ஆகப்பெரிய பல்பு வாங்குறோமே; அது ஏன்?

8. தங்கமணி கையில இருக்க வரைக்கும் சமத்தா இருக்கிற நம்ம குட்டிமணிகள் நம்ம கைக்கு வந்ததும் கரெக்டா ஒன் பாத்ரூம் போறாங்களே; அது ஏன்?

9. ஒரு ப்ரண்ட அவாய்ட் பண்ணனும்னு நினைச்சுகிட்டு இருப்போம். அவன் வந்து கூப்பிட்டது, டக்குன்னு சட்டைய மாட்டிக்கிட்டு கிளம்பிடறமே; அது ஏன்.

10. அரைமணி நேரம் பதிவப் படிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டு பதிவப் படிக்க ஆரம்பிச்சா இன்னும் அரைமணி நேரம்னு நீட்டிட்டே போயி தங்கம்ணிகிட்ட திட்டு வாங்குறோமே: அது ஏன்?

.
.

கதம்பம் – 24-09-09

அக்பர் அரசவையில் ஒரு நாள் விவாதமொன்று எழுந்தது; பூமியின் மையப் புள்ளி எதுவென. எவருக்கும் தெரியவில்லை, பீர்பாலும் அரசவையில் இல்லை அச்சமயம். பிறரெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர், பீர்பால் வசமாக மாட்டப் போகும் வினா இதுவென.

சற்றுத் தாமதமாக சபைக்கு வந்த பீர்பால் உள்ளே நுழைகையிலேயே கண்டுகொண்டார் ஏதோவொன்று தன்னை நோக்கி எய்யப்படுமென. கேள்வியும் அவரை நோக்கி வீசப்பட, சட்டென வெளியேறினார். விடை தெரியாமல் வெளியேறினார் என அனைவரும் ஆர்ப்பரித்திருக்க, மீண்டும் உள்ளே வந்தவர் வெளியே அழைத்தார் அரசரை.

தரையில் தான் ஆணியறைந்த ஒரு இடத்தைக் காட்டி, “ இதுதான் பூமியின் மையப்புள்ளி ” என்றார் அரசரிடம். திகைத்த அரசர் “எப்படி?” என வினவ.

“இல்லையென மற்றவர்களை நிரூபிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றார்.

இதைப் போலத்தான் இருக்கிறது, ஒரு திரைப்படத்தை ஆளாளுக்கு அலசிப் பிழிந்து காயப் போட்டிருப்பது. இதுதான் மையப்புள்ளி என அவரவருக்கு விருப்பமான இடத்தில் ஆணி அறைந்து கொண்டிருக்கிறார்கள். தமிழன் மலையாளி என்ற புது கோணத்தை யாரும் சிந்திக்கவில்லை என அறச்சீற்றம் கொண்டிருக்கிறார் ஆசிப்.

மொத்தத்தில் உ போ ஒருவன் சீரியஸ் படமாக இருக்குமென நினைத்தால் நல்ல காமெடிப் படமாக ஆகிவிட்டது.

***********************************************************************************

அழகிய பெரியவனின் நெரிக்கட்டு சிறுகதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. நல்ல மொழி நடையுடன் மூன்றாவது வரியில் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறார். கடலூர் பகுதிகளில் கண்மணி குணசேகரன், தங்கர் பச்சான் (குடி முந்திரி- படித்திருக்கிறீர்களா?) இருவரையும்தான் இதுவரை படித்திருக்கிறேன். அழகிய பெரியவன் எழுத்து என்னை ஈர்த்து விட்டது.

தான் காதலிக்கும் பெண்ணின் தாயார் கரகம் ஆடுபவள் என்பதால் கரகாட்டத்தைத் தவிர்க்கும் முகமாக வெளியூர் சென்றுவிடும் கதை நாயகன், திரு விழா முடிந்திருக்குமெனத் திரும்பி வர, அப்பொழுது ஏற்படும் களேபரத்தில் ரசாபாசமாகி விடுகிறது. மிச்சத்தை நீங்களே படியுங்கள் நல்ல வாசிப்பனுபவம்.

முன்பே வேறு சமயம் தலைப்புக் கதையான நெரிக்கட்டை வாசித்திருக்கிறேன். எனினும் மொத்தமாக வாசிக்கையில் எழுத்தாளரின் ஆளுமை வெளிப்படுகிற்து. யுனைட்டட் ரைட்டர்ஸ் வெளியீடான இச்சிறுகதைத் தொகுப்பின் விலை 50 ரூபாய் மட்டுமே.

**************************************************************************************

விகடனில் வந்த அந்நியன் கவிதைக்கு அழைத்துப் பாராட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி. அதைவிட மோசமான அனுபவம் சமீபத்தில். எனது பக்கத்து வீட்டை வாங்கியவர்கள் சென்னையில் இருக்கிறார்கள். வாங்கி மாதக்கணக்காக ஆகியும் கிரகப் பிரவேசம் நடத்தப்படாமலே இருந்தது. ஒரு நாள் இரவு 11.00 மணிக்கு பேச்சுச் சத்தம் கேட்கவே வெளியே சென்று பார்த்தால் வீட்டின் உரிமையாளரும் இன்னும் இருவருமிருந்தனர்.

”காலையில் கிரகப் பிரவேசம் செய்கிறோம்” என்றார்.

“பால், தண்ணி எது வேண்டுமானாலும் கேளுங்கள்” என்றேன்.

“இல்லை சார் எவ்வரிதிங் இஸ் கம்ப்லீட்லி அர்ரேன்ஜ்டு” என்றார்.

காலை 6 மணிக்குப் பார்த்தால் யாரையும் காணோம். 4 மணிக்கே பூஜை செய்து விட்டு 6:30 இண்டெர் சிட்டியைப் பிடித்துச் சென்னை சென்றுவிட்டார்களாம்.

அடப் பாவிகளா வீடு கிரகப் பிரவேசம் என்பது நண்பர்கள் உறவினர்கள் எல்லோரும் சேர்ந்திருந்து மகிழ வேண்டிய ஒரு விசேசமல்லவா? அவர்கள் வாழ்த்துக்களும் ஆசிகளும் வேண்டாமா?

**************************************************************************************

காமிக்ஸ் பிரியர்களால் இரும்புக்கை மாயாவியையும், சி ஐ டி லாரஸையும் ஜானி நீரோவையும் மறக்க முடியாது. அ கொ தீ க பற்றி உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? (கா கா தே கா இன்னும் இருக்கிறாதா மிஸ்டர் குமாரி ஆனந்தன்?)

காமிக்ஸ் பிரியர்களுக்கான வலைத்தளம் இதோ.

**************************************************************************************

நேசமித்ரனின் கவிதை ஒன்று இம்முறை.

வார்த்தைகளை வசக்கிப் போட்டுக் கவிதை நெய்து கொண்டிருக்கும் காலத்தில் வார்த்தைகள் தானக வந்து விழுந்தாற்போல நேர்த்தியா இருக்கிறது.

பிறை மீதேறி
உன் பெயர் சொல்லி தீக்குளிப்பேன் என்றவன்
நுரைக்க நுரைக்க கழிவறையில் ஆணுறை கழற்றிய போதே
மாற்றி விட்டான் அலைபேசி எண்ணை…
வருத்தம் எதுவும் இல்லை
உவந்து கொடுத்தேன்
தேவையாய் இருந்தது எனக்கும்
ஆனால் முத்தத்தை எச்சிலாக்கிய நொடி
விடைபெறுகையில் வேசி மகன்
வேறு பெயர் சொல்லி விளித்ததே...!

நேசமித்ரன்

நூற்றி ஆறு புள்ளி நாலு


சிடியில் பாட்டுக் கேட்பதை விட எஃப் எம்மில் கேட்க எனக்குப் பிடிக்கும். சிடியில் கேட்கும்போது அடுத்து என்ன பாட்டு என்பது தெரிந்து விடுகிறது. என்னதான் ரேண்டம் ஆப்சன் வைத்திருந்தாலும் எஃப் எம்தான் பெஸ்ட். எஃப் எம்மில் எதிர்பார்க்காத பாட்டு வந்து விழும்போது அதையொட்டிய ஞாபகங்களைத் தட்டி எழுப்பும். சமீபத்தில் கேட்ட “ஒரு சின்னப் பறவை அன்னையைத் தேடி வானில் பறக்கிறது “ என்ற பாட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபன வர்த்தக சேவையை ஞாபகப்படுத்தியது.

ஒரு கட்டத்தில் தொ கா வின் ஆதிக்கமும் கேசட்/சிடி ப்ளேயர்கள் ஆதிக்கம் ரேடியோவின் புகழை மங்கச் செய்தாலும் அதற்கான வசீகரம் குறையவில்லை. ரேடியோவின் மறு அவதாரமாக பண்பலை வந்திருக்கிறது.

மார்ச் மாதம் 2002 ல்தான் பண்பலை வானொலி கோவைக்கு வந்தது. முதலில் சூரியன் எஃப் எம் தான். அதன் பிறகு ஒவ்வொன்றாக. சூரியன் லான்ச்சுக்கு செய்திருந்த விளம்பரம் நன்றாக இருந்தது; ஆவலைத் தூண்டும் விதமாக இருந்தது. கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க என்ற வாசகம் மட்டும் பின் புலத்தில் கல்லுரி மாணவி, குடும்பத்தலைவி, இளைஞர், வியாபாரி என யாராவது ஒருவர் படம் இருக்கும். என்ன விளம்பரம் எதைப் பற்றி என்ற ஆவலை எல்லோரிடமும் விதைத்தது.

சூரியன் எஃப் எம் ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. நிகழ்ச்சிகளில் வித்தியாசமும் இருந்தது. கிட்டு மாமா- சூசி மாமி, ப்ளேடு நம்பர் ஒன், சின்னத் தம்பி பெரிய தம்பி சில குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய நிகழ்ச்சிகள். இரவின் மடியில் என்ற ஆர் ஜி லக்ஷ்மி நாராயணன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியும் நன்றாகத்தான் இருந்தது. நாளாக நாளாக ஒரே பார்மேட்டில் வருவதால் போரடித்து விட்டது. இடையில் வேறு சில எஃப் எம்களும் வந்து விட்டதால் நல்ல ஆர் ஜேக்களும் வெளியேறி விட்டனர்.

புதிதாக வந்த எஃப் எம்களில் ஹலோ எஃப் எம் நன்றாகச் செய்கிறார்கள். வித்தியாசமான நிகழ்ச்சிகள் மற்றும் இளவயது ஆர் ஜேக்கள் என களை கட்டுகிறது.

சி ஐ டி செங்கல் என ஒரு நிகழ்ச்சி. தமிழ் பாட்டு ஒன்றை பாடச் செய்து அது எந்தப் பாட்டிலிருந்து காப்பி செய்யப் பட்டது என மூலப் பாட்டையும் போட்டு இசையமைப்பாளர்கள் மானத்தை வாங்குகிறார்கள்.

வேஸ்ட் விளம்பரம், கவிஞர் கஸ்மால், கப்சா டெலி நெட்நொர்க், அஞ்சலி அப்பர்ட்மெண்ட் (மேனேஜர் மாதவன்), கூர்க்கா குருசிங் என வித்தியாசமான நிகழ்ச்சிகளுடன் அவர்கள்தான் இப்பொழுது முன்னிலை.

சமையல் சகீலா என்றொரு நிகழ்ச்சி. சமையல் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பது.

“மேடம் வறுத்த மீன் எப்படி செய்யுறது?”

“கடையில மீன் ஃப்ரை வாங்குங்க. உங்க வாழ்க்கையில நடந்த வருத்தமான சம்பவத்தை நினைச்சுக்குங்க. இப்ப சாப்பிடுங்க. அதுதான் வருத்த மீன்.”

ஆர்ஜேக்களின் மொழியும் அவர்கள் பொது அறிவும் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை மாலை நேர நிகழ்ச்சி ஒன்றில் ஒரு டன் என்றால் 100 கிலோ எனச் சொன்னார். உடனே நான் அழைத்து ஒரு டன் என்றால் ஆயிரம் கிலோ என விளக்கமளித்ததும், ஒலிபரப்பிக் கொண்டிருந்த பாடல் முடிந்தவுடன் மன்னிப்பும் கேட்டு திருத்தமும் சொன்னார்.

அதே போல போலிஸ் கமிஷனருக்கும், கலெக்டருக்கும் இன்னும் சில உயர் அதிகாரிகளுக்கும் அவர்கள் அட்வைஸ் செய்வது காமெடியாக இருக்கும். இன்னும் கலைஞருக்கு மட்டும்தான் சொல்லவில்லை; ஸ்டாலினுக்கு துணை முதல்வரானதுக்கு வாழ்த்துச் சொல்லி எப்படி நாட்டை நிர்வாகிக்க வேண்டுமென சில அறிவுரைகளையும் சொன்னார்கள். இது போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் அளிப்பார்கள்.

அவரகள் வாங்கும் சம்பளம் மிகக் குறைவே. சமீபத்தில் ஒரு ஆர்ஜே நமது செல்வேந்திரனை அணுகி ஏதும் வேலை கிடைக்குமா எனக் கேட்டிருக்கிறார். ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு கிடைக்கும் எனக் கேட்ட செல்வேந்திரனுக்குக் கிடைத்த பதிலால் இன்னும் புலம்பிக் கொண்டிருக்கிறார்; அவ்வளவு குறைவு.

மாரியம்மன் கோவில் திருவிழா மேடையில் திடீரென ஏற்றப் பட்டவர் எப்படிப் பேசுவாரோ அதே போலப் பேசவும் செய்கின்றனர் சிலர். வந்து என்ற வார்த்தை அவர்கள் வாயில் அடிக்கடி வந்து மாட்டிக் கொள்கிறது.

”வெளிநாட்டுல இருக்க நம்ம ஆளுங்கல்லாம் வந்து அவங்க அப்பா அம்மாவுக்கெல்லாம் வந்து பணம் அனுப்புவாங்க. அதுக்கு வந்து நம்ம அஞ்சல் துறை வந்து ஈசியா ஒரு வழி வந்து பண்ணியிருக்காங்க.”

இதுக்கு அவர் வெளிநாட்டில் இருந்து நேரடியாகவே வந்து கொடுத்துவிட்டு ப் போய் விடலாம்.

படம் உதவி : http://www.gjmedia.co.uk.

.

கதம்பம் – 09-09-09 09:09

சென்ற வார வெள்ளிக் கிழமை கமலும் காதலும் நிகழ்ச்சிக்கு விவிஐபி பாஸில் அழைத்துச் சென்றார் செல்வேந்திரன். எஸ் பி பி, சித்ரா போன்ற சீனியர்களுடன் ஹரிச்சரன், கார்த்திக், மதுமதி, ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி போன்றோரும் வந்திருந்தனர். நிகழ்ச்சி சிறப்பாகவே நடந்ததெனினும் திருஷ்டிப் பரிகாரமாக அமைந்தது அர்ச்சனாவின் தொகுத்து வழங்கலும் ஸ்ரீராம் பார்த்தசாரதி கொலை செய்த ஜேசுதாஸின் அண்ணாவின் நல்ல பாடல்களும்.

தான் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமலேயே பேசிக்(பினாத்திக்? ) கொண்டிருந்தார் அர்ச்சனா. அர்ச்சனா டவுன் டவுன் என்ற பேரோசை அவர் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.

கண்ணே கலைமானே போன்ற நல்ல பாடலையெல்லாம் தேவையில்லாத சங்கதிகளைப் போட்டு கடித்துத் துப்பினார் ஸ்ரீராம். ஒரே ஆறுதல் ஹரிச்சரனும், கார்த்திக்கும். இருவரும் எஸ்பிபியுடன் இணைந்து பாடினார்கள். நிறைவாகவே செய்தனர் இருவரும். அதிலும் இளமை இதோ இதோ பாடலை ஹை பிட்ச்சிலும் நன்றாகப் பாடினார் ஹரிச்சரன். சொர்க்கம் மதுவிலே பாடலை கார்த்திக் அபாரமாகப் பாடினார். அவரது உடல் மொழி – வீட்டுக்கு அடங்காத பிள்ளை என்ற தோற்றத்தைத் தந்தாலும் எஸ் பி பியிடம் அவர் காட்டிய மரியாதை மெச்சத்தகுந்தது.

ஒரு பாட்டுக்கு சைந்தவி மேடைக்கு வர அவரிடம் எஸ் பி பி , “ இந்தப் பாடலை நான் பாடிய போது நீ பிறந்திருக்கக்கூட மாட்டே. ஆனாலும் உன்னை மாதிரி இளைய பாடகருடன் பாட சந்தர்ப்பம் கிடைத்தது நான் செய்த பாக்கியம் ”என்றார். அநியாயத்துக்கு மாடஸ்டா இருக்கார். அதனால்தான் இத்தனை இளைஞர்கள் பாட வந்தாலும் அவர் கொடி பறக்குது போல.

************************************************************************************

வந்தணா என்ற பெண் பள்ளிக் கட்டிடத்தின் மூன்றாம் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். பரிட்சையில் காப்பி அடித்து மாட்டிக் கொண்டார். பெற்றோரை அழைத்து வரச் சொன்னதால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாராம். எல்லோரும் பள்ளியில் கொடுமை செய்கிறார்கள் எனப் பேசிக் கொண்டிருக்க என் மனைவியின் தரப்பு (ஆசிரியை) வேறு விதமாக இருக்கிறது.

இதெல்லாம் மாணவரை ஆசிரியர் அடிக்கக் கூடாது என்ற சட்டத்தால் வந்ததுதான். முன்பெல்லாம் ஆசிரியர் மாணவரை அடிப்பதும் திட்டுவதும் சகஜமாக இருந்தது. நாலு பேருக்கு முன்னால் திட்டினாரே எனப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இப்பொழுதெல்லாம் ஆசிரியர்கள் திட்டவே பயப் படுகின்றனர். எனவே கொஞ்சம் சத்தமாகப் பேசினாலும் திட்டுவதாக நினைத்துக் கொண்டு அதி தீவிர முடிவுக்கு ஆளாகின்றனர்.

அது சரி காப்பி அடித்தது சரியா?

************************************************************************************

மதிலுகள் என்ற அடூர் கோபால கிருஷ்ணன் திரைப் படத்தை உங்களில் சிலர் பார்த்திருக்கக் கூடும். அது பற்றிய புத்தகம் ஒன்றை வாசிக்கக் கிடைத்தது. காலச்சுவடு வெளியீடு.

வைக்கம் முகமது பஷீர் எழுதிய மதிலுகள் நாவலை விட, நாவல் எந்தச் சூழ்நிலையில் எழுதப் பட்டது என்ற ராஜவிள ரமேசனின் கட்டுரை சுவாரஸ்யமாக இருக்கிறது.

அந்நாவல் திரைப்படமாக்கப் பட்ட விதம் பற்றிய அடூரின் கட்டுரையும் முகியமான ஒன்று. மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்திருப்பவர் கவிஞர் சுகுமாரன். அவரை 13ஆம் தேதி நடக்கவிருக்கும் சிறுகதைப் பட்டறையில் சந்திக்கலாம்.

மீண்டும் அப்படத்தைப் பார்க்கும் ஆவல் எழுகிறது.

*************************************************************************************

இசை என சிற்றிதழ் பரப்பில் அறியப்படும் சத்திய மூர்த்தி கோவைக்காரர். பார்ப்பது மருந்தாளுநர் உத்தியோகம் என்றாலும் கொள்ளை கொள்வது கவி மனங்களை. பழகுவதற்கு இனிய இவரை சமீபத்தில் வ உ சி பூங்காவில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தது ஒரு இனிய அனுபவம். உறுமீன்களற்ற நதி என்ற கவிதைத் தொகுதி காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளியாகி இருக்கிறது.

கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறது

கர்த்தர் வருகிறார்
அவர் நமக்காய் கொண்டு வரும்
புளித்த அப்பங்கள்
ரொம்பவே புளித்து விட்டன
ஆனால், கர்த்தர் வருகிறார்

உங்கள் அன்பில்
நண்பர்களுக்கு சலிப்பேறி விடலாம்
உங்கள் காதலியை
புத்திசாலிகள் களவாடிக் கொள்ளலாம்
கர்த்தர் வருகிறார்

பாதி வழியில் அவர் வாகனம்
பழுதாகி நின்று விட,
அவர் நடந்து வருகிறார்
ஆனாலும் கர்த்தர் வருகிறார்

இன்னுமொரு தேர்தல் முடியட்டும்
இன்னொரு மக்களாட்சி மலரட்டும்
கர்த்தர் வருகிறார்

எப்போதும் மிரட்டிக் கொண்டிருப்போர்
இன்னும் கொஞ்சம் மிரட்டட்டும்
எப்போதும் இறைஞ்சிக் கொண்டிருப்போர்
இன்னும் கொஞ்சம் இறைஞ்சட்டும்
இரட்சிப்பின் நாயகர் வருகிறார்

கர்த்தர் ஒருவரே
அவருக்கு உதவியாளர்கள் யாருமில்லை
அவரே எல்லா இடங்களுக்கும்
வர வேண்டி இருக்கிறது
ஆனாலும் அவர் வருகிறார்

நீதியின் மீது பசிதாகமுடையோருக்கு
இன்னும் கொஞ்சம் பசிக்கட்டும்
வெகு காலம் பற்கடிப்பில் உள்ளோர்
இன்னும் கொஞ்சம் கடிக்கட்டும்
கர்த்தாதி கர்த்தர் வருகிறார்
இன்னும் கொஞ்சம் எரிகணைகள் வீழட்டும்
இன்னும் கொஞ்சம் ஓலங்கள் கூடட்டும்
கர்த்தர் வருகிறார்

பயப்படாதே சிறு மந்தையே!
கர்த்தர் on the way.

இசை (சத்ய மூர்த்தி)

************************************************************************************

புதுசா எழுத வந்தவர்களில் என்னைக் கவர்ந்தவர் ரமேஷ் விஜய். தமிழ் நகைச்சுவை என்ற இவரது வலைத்தளத்தை நீங்களும் பாருங்களேன். நல்ல நகைச்சுவைக்கு உத்திரவாதம்; யோசிக்கவும் வைக்கிறார் சில பதிவுகளில்.

************************************************************************************

பிறந்தாளுக்கு வாழ்த்துச் சொன்னதும், ”அண்ணாச்சி நெஞ்சத் தொடுறா மாதிரி எதாவது சொல்லுங்க”ன்னார் சஞ்சய்.

“பனியன்” அப்படின்னேன் நான். அதுக்கப்புறம் லைன்ல வரவேயில்லை.

.

பயோடேட்டா – பரிசல்காரன்


பெயர் : ”பரிசல்”காரன்

இயற்பெயர் : கிருஷ்ணகுமார்

இதரப் பெயர்கள் : ஓடக்கார மாரிமுத்து, 24 X 7, Bond, Trend Setter, அனந்த்பாலா

சமீபத்திய பெயர் : கார்க்காரன்

வயது : காதலிக்கும் வயதல்ல

தொழில் : பதிவெழுதி பிறர் எதிர்ப்பதிவு எழுத விஷய தானம் செய்வது

உப தொழில் : ஏற்றுமதி நிறுவனத்தின் ஆல் இன் ஆல் அழகு ராஜா

நண்பர்கள் : பகிரங்கக் கடிதம் எழுதாதவர்கள்

எதிரிகள் : ஊருக்குள் இல்லை

சிறு வயது ஆசை : எழுத்தாளராக (வீட்டுப்பாடம் தவிர்த்து)

தற்போதைய ஆசை : பத்திரிக்கையில் பெயர் வர (திருமணப்பத்திரிக்கை அல்ல)

சமீபத்திய ஏமாற்றம் : குசும்பனின் தமிழ்மண மெயில்.

ஏக்கம் : அழகிய யுவதிகளை சைட் அடிக்க

துக்கம் : அவர்கள் அங்கிள் என அழைப்பது.

ஆசைப்பட்டது : சினிமாவில் கதாநாயகனாக

ஆனது : உமாவின் நாயகனாக

கலக்க நினைத்தது : விளம்பரத்துறையில்

கலக்கிக் கொண்டிருப்பது : மீராவுக்கும் மேகாவுக்கும் ஹார்லிக்ஸ்

சமீபத்திய எரிச்சல் : நட்சத்திர வாரத்தில் எழுத நேரம் கிடைக்காமல் போனது

நீண்ட நாள் எரிச்சல் : அட்வைஸ் ஆறுமுகத்தின் எதிர்ப்பதிவு

சமீபத்திய சாதனை : குறுகியகாலத்தில் 2.5 லட்சம் ஹிட்டும் 425 பாலோயரும்

நீண்ட நாள் சாதனை : 93 லிருந்து எழுத்தாளராக ஏமாற்றிக் கொண்டிருப்பது

அப்படியே இங்க ஒரு வாழ்த்தையும் சொல்லிட்டுப் போங்க.

.

கதம்பம் – 20-08-09



இரு சக்கர வாகனங்களில் ஒரு குடும்பமே பயணம் செய்கையில் மனம் பதைபதைக்கும் அதிலும் பின் சீட்டில் கடைசியாக இருக்கும் பெண் (பெரும்பாலும் குடும்பத்தலைவி) பாதி சீட்டிலும் மீதிக் கம்பியிலும் அமர்ந்து சாகசம் செய்வது பயமுறுத்தும். சற்றுப் பருமனான பெண்மணிகளின் நிலை வருத்தமுறச் செய்யும்.

அடர்மழை பெய்யும் நாளொன்றில் நான் கண்ட காட்சி இது. இரண்டாவதாக அமர்ந்திருக்கும் பெண்மணியின் இருகைகளிலும் தூக்க முடியாத அளவுக்கு பைகளை வைத்துக் கொண்டு எந்தப் பிடிமானமும் இல்லமல் பயணிப்பதைப் பாருங்கள். எதற்கிந்த சாகசம்?

************************************************************************************

வாராந்திர இதழ்களைப் படிக்கும்போது சில விஷயங்கள் சட்டென மனதில் பதிந்துவிடும். அப்படிப் படித்த ஒன்று இங்கே.

**********************************************************************************

மனிகண்டன் சென்னையிலிருக்கும் மென்பொருள் வல்லுனர். மெரினாக் கடற்கரையில் நண்பர்கள் சிலருடன் மாதம் ஒரு நாள் கூடி நல்ல கவிதைகள் படிக்கிறார்கள். அவர் எழுதியதில் இது எனக்குப் பிடித்த ஒன்று

***********************************************************************************

பயணங்கள் எபோதும் தன்னுள் ஆச்சர்யத்தைப் பொதிந்து வைத்திருக்கும். கற்றுக்கொள்ள விஷயங்களைக் கல்பதருவாகத் தந்தவண்ணமே இருக்கும். அப்படியான ஒரு மும்பை நோக்கிய பயணத்தில் எடுத்த படம் இது. பெற்றோர் இருவருக்கும் வயது 45 க்கு மேல் இருக்கும். சிகிட்சை மேற்கொண்டு பிறந்த குழந்தை. குழந்தையின் கண்களைப் பாருங்கள். என்ன ஒரு எக்ஸ்பிரஸிவ் கண்கள்.

*************************************************************************************
அவள் விகடனில் சில சமயம் நல்ல கவிதைகள் வரும்.


************************************************************************************

பிரபல பதிவரின் அக்காள் மகள் இந்தக் குழந்தை. யாரெண்று தெரிகிறதா? கண்களைப் பார்த்தால் சொல்லி விடலாம்.

மருதமலையில் மொட்டையடித்தபின் சூப்பராகக் கொடுத்த போஸ் இது.

***********************************************************************************

பரிசல்காரனின் பெயர்க்காரணம் புரிகிறதா?

கிரி வீட்டுத் திண்ணையில் அமர்ந்து படகோட்டும்போது கிளிக்கியது

டிஸ்கி : எல்லாமே என்னுடைய K750i செல் போனில் எடுத்த படங்கள். பிக்காஸோவில் கொஞ்சம் நகாசு வேலைகள் செய்திருக்கிறேன். எழுத ஒன்றும் மேட்டர் இல்லை என்றால் இப்படித்தான் பெரிய எடுத்தாளர்(ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) ஆகணும்.
.

பயோடேட்டா – அனுஜன்யா

பெயர் : யூத்

உண்மைப் பெயர் : அனுஜன்யா

வயது : கல்லூரிக்குப் போகும் வயது அல்ல

தொழில் : கவிதை எழுதி டெரராக்குவது

உப தொழில் : 8 மணி நேர வங்கி வேலைக்கு 7 மணி நேரம் பிரயாணம் செய்வது

பிடித்தது : ஐ பாடில் பாட்டுக் கேட்க

பிடிக்காதது : தங்கமணியிடம் பாட்டுக் கேட்க

எழுத முடிந்தது : சிற்றிதழ்களில் கவிதை

எழுத முடியாதது : எல்லோருக்கும் புரியும் கவிதை

சமீபத்திய ஆசை : சிறுகதைப் பட்டறையில் கலந்து கொள்ள

நெடுநாள் ஆசை : பதிவர்களுடன் சுற்றுலா செல்ல

சமீபத்திய சாதனை : நவீன விருட்சத்தில் கதை

நீண்ட கால சாதனை : யூத் போல பாவ்லா

சமீபத்திய ஏமற்றம் : உரையாடல் 20ல் இல்லாதது

நீண்டகால ஏமாற்றம் : யூத் என எவரும் நம்பாதது

.

கதம்பம் – 13-08-09

நவீன விருட்சம் இந்த இதழ் புதுக்கவிதை தொடங்கி 50 ஆவது வருட இதழாக மலர்ந்திருக்கிறது. அடியேனின் கவிதை – தக்கைகள் அறியா நீரின் ஆழம் – அதில் பிரசுரமாகி இருக்கிறது. எனவே எனக்கும் ஒரு பிரதி அனுப்பியிருக்கிறார் அழகிய சிங்கர்.

இரண்டாம் பக்கத்தில் முதல் படைப்பாக பிரசுரமாகி இருப்பது அனுஜன்யாவின் பிக்பாக்கட் கதை. மிக மகிழ்ச்சியாக இருந்தது. அச்சில் வாசிக்க மிக நன்றாக இருந்தது. வலையில் வாசிக்கும்போது ஏதோ ஒன்றை இழந்தாற்போலத்தான் இருக்கிறது.

ஜெ மோ வலையில் எழுதுவதை தொகுப்பாக தற்பொழுது நிகழ்தல் என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். புத்தகமாக வாசிக்க அருமையான அனுபவம்.

*********************************************************************************

சென்றவாரம் குடும்பத்துடன் கொச்சி, குருவாயூர் ஒரு அவசரச் சுற்றுலா சென்றிருந்தேன். கொச்சியின் தட்பவெட்ப நிலை பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். 2 மணிக்கு நல்ல வெயில் 2.05க்கு பலத்த மழை சாலையில் நடமாட்டமே இல்லை. 2.10 சுத்தமாக வெறித்து விட்டது வெயிலும் அடிக்கிறது. ஸ்விட்ச் போட்டாற்போல சாலையில் ஜன நடமாட்டம்.

மேரி, ஆனி, ஜார்ஜ், எலிசி, விக்டோரியா, டோமினி, ரெஜினா, அன்னி, ஜோய், ராபர்ட் என பத்துக் குழந்தைகள் பெற்று வளர்த்தும் என்னை எடுத்து வளர்த்த ரோசம்மா விதைத்த விதைதான் மலையாளக் கரையோரம் ஒதுங்கச் சொல்கிறதோ என்னவோ?

கொச்சியிலிருந்து குருவாயூர் சென்று திரும்பினோம். குருவாயூரில் அருமையான தரிசனம். குழந்தைக் கிருஷ்ணனைப் பார்த்தாலே மனதுக்கு ஒரு தெம்பு வந்து விடுகிறது. கேரளாவில் செட்டில் ஆக வேண்டுமென்ற ஆவல் வெறியாக மாறிக் கொண்டிருக்கிறது.

*********************************************************************************

ஏர்டெல்லின் விளம்பரங்கள் எப்போதும் தரமிக்கவையாகவும் கற்பனைவளமிக்கதாகவும் இருக்கும். காகிதக் கப்பலை மழையில் நனையாமல் காப்பாற்றும் குழந்தைகள் விளம்பரம் நல்ல கவிதை.

அதே போல டாடா டோகோமோவின் விளம்பரங்களும் நன்றாக இருக்கிறது. கோல் போட்டவன் குதூகலம் சங்காக மாறுவது நல்ல நகைச்சுவை.

உடனே ஒரு லோக்கல் விளம்பரம் வந்து கழுத்தறுப்பதுதான், சென்னைவாசிகளின் பாஷையில், படா பேஜாராக் கீது மாமே.

*********************************************************************************

யாத்ரா, வாசு, நந்தா, சேரல், ரெஜோ, முகுந்த், முத்துவேல் போன்றோர்கள் நல்ல கவிதைகள் படைத்துவரும் அதே நேரத்தில் கவனிப்பையும் பெற்றுவிட்டார்கள். அவர்களைபோலவே நல்ல கவிதைகள் எழுதிவரும் கார்த்தி (அல்லது கார்ட்டின்?) எழுதிய இக்கவிதை என்னைக் கவர்ந்த்த்து.

வீட்டில் அலமாரி நிறையப் புத்தகங்கள் இருந்தாலும் மேஜை நிறைய வார, மாத இதழ்கள் இருந்தாலும் சுண்டல் அல்லது வேர்க்கடலை மடித்திருந்த காகிதத்தைத் திருப்பித் திருப்பிப் படிப்பது ஒரு சுகம். அதைத்தான் பேசுகிறது இக்கவிதை.


கூம்புகளுக்குள்

நீங்கள்
பாலிதீன் பைகளைப்
புறக்கணித்து விட
இன்னுமொரு காரணம்
இந்த வேர்கடலைப் பேப்பர்கள்

கூம்புகளைப் பிரிப்பதில்
மட்டும் கவனமிருக்கட்டும்

கவிதையோ
கதை போன்றவொன்றோ
இருக்கலாம்
இரண்டு பக்கங்களுக்குள்

தீக்குளித்து
என்றோ செய்தியானவன்
எண்ணெய்த் தீற்றலோடு
தென்படலாம்

கடைசி வார்த்தை மட்டும்
யாருக்கோ சிக்காத
குறுக்கெழுத்துப் புதிரொன்றும்
சிக்கிக் கொள்ளலாம்

ஆகவே
அடுத்த முறையேனும்
வீசியெறியாமல்
விரித்துப் பார்த்துவிடுங்கள்

கெட்டியான பேப்பரென்றால்
அட்டைப் பட நாயகிக்கும்
அதிர்ஷ்டமுண்டு..
பின்பக்கத்தில்
சொப்பனஸ்கலிதம் தீர்க்கும்
விளம்பரம் இல்லாதிருப்பது உத்தமம்.

– கார்த்தி என்

*********************************************************************************

கேரளாவைச் சேர்ந்த ஜோய் செஸ்ட்நட் வசிப்பது அமெரிக்காவில். அங்கு நடந்த ஒரு போட்டியில் 10 நிமிடத்தில் 38 ஹாட் டாக் சாப்பிட்டு முதல் பரிசைப் பெற்றார்.

கேரளாவில் அதைச் செய்தியாக வெளியிடும்போது 10 நிமிடத்தில் 38 நாய்களைச் சாப்பிட்டார் என மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். செய்தியை வெளியிட்டது கம்யூனிஸ்ட் தோழர்களின் அதிகாரப்பூர்வப் பத்திரிக்கை.

.

ஆதி பயோடேட்டா


பெயர் : ஆதி
பழைய பெயர் : தாமிரா
வயது : தொப்பை போடும் வயது அல்ல
தொழில் : பதிவு எழுதுவது
உபதொழில் : மற்ற நேரங்களில் அலுவலகம் செல்வது
நண்பர்கள் : பாலோயர்ஸ், பின்னூட்டம் இடுபவர்கள்
எதிரிகள் : பின்னூட்டம் இடாதவர்கள்
பிடித்த வேலை : தங்கமணி பதிவு எழுதுவது

பிடிக்காத வேலை : மேலதிகாரி செய்யச் சொல்லுவது

பிடித்த உணவு : ரமா சமைப்பது (வேறு வழியில்லாததால்)

பிடிக்காத உணவு : இனிமேல்தான் கண்டுபிடிக்கணும் (தொப்பையே சாட்சி)
விரும்புவது : நண்பர்களுடன் அரைட்டை அடிக்க
விரும்பாதது : ரமா கடைக்குப் போகச் சொல்லுவது

புரிந்தது : திருமணத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பது
புரியாதது : எப்படித்தான் மத்தவனெல்லாம் சமாளிக்கிறான் என்பது
சமீபத்திய எரிச்சல் : சுபாவை சமாளிக்க முடியாதது
நீண்டகால எரிச்சல் : ரமாவிடம் பல்பு வாங்குவது(அடிக்கடி)
சமீபத்திய சாதனை : கார்க்கியை வைத்து குறும்படம்
நீண்டகால சாதனை : கேமராவை வைத்துப் படம் காட்டுவது

டிஸ்கி : இதையும், இதையும் படிங்க.