1999-2001 வரை உடுமலையில் இருந்து கோவைக்கு வேலைக்கு வந்து திரும்புவேன். 6.45 ராமேஸ்வரம்-பாலக்காடு வண்டியைப் பிடித்துப் பொள்ளாச்சியில் இறங்கி, 7.45 பொள்ளாச்சி கோவை ஷட்டிலில். திரும்ப மாலை 6.00 மணி ஷட்டிலைப் பிடித்து இரவு 7.45 பாலக்காடு ராமேஸ்வரத்தில்.
மொத்தம் 5 மணி நேரப் பயணம். எவ்வளவு நேரம்தான் புத்தகமே வாசிப்பது. ஷட்டிலில் சில இளைஞர்கள், தாளம்தட்டிப் பாடிக்கொண்டு வருவார்கள். மெல்ல அவர்களுடன் ஐக்கியமானேன். அதன் பிறகு பயண தூரமே தெரியவில்லை.
ட்ரிப்பிள்ஸ், பேங்கோஸ், மிருந்தங்கம் எனச் சிலவற்றைச் வாங்கிக் கொண்டு பெரிய ஜமாவாகச் சேர்ந்துவிட்டோம். இது பிடிக்காத பெருசுகள், போத்தனூர் ரயில்வே போலீசிடம் எங்களைப் பற்றிப் புகாரளித்ததெல்லாம் உபகதை.
அடுத்த கட்டமாக, டிரம்ஸ், கீபோர்டு என மேலும் சிலவற்றைச் சேர்த்து ஒரு இசைக்குழுவாகவே இயங்கத் தொடங்கினோம். கோவில் திருவிழா, நண்பர்கள்-உறவினர் வீட்டுத் திருமணம் எங்கு நடந்தாலும் எங்களது இலவச இசைக் கச்சேரி நடக்கும்.
எந்தவிதக் பொருளாதாரப் பலனையும் எதிர்பாராமல் ஒரு குழுவை நடத்துவதிலேயே ஆயிரம் சிரமங்கள் என்றால், முழுக்கவே வாழ்வாதார நோக்கில் நடத்தப்படும் இசைக்குழுக்களில் நடக்கும் அல்லாடல்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார் ஜான்.
இந்த இசைக்குழுக் கலைஞர்களுக்கு நகலிசைக் கலைஞர்கள் என்ற பெயர் எத்தனைப் பொருத்தம்! என்னதான் அசலை விட ஒரு இழை தூக்கலாகச் செய்தாலும்கூட “அட டிஎம்எஸ் மாதிரியே பாடினானப்பா” எனத்தான் சொல்வார்கள். “அந்த ப்ளூட் பீஸ் வாச்சிச்சான் பாரு அப்படியே ராஜா பாட்டுல இருக்க மாதிரி” எனப் போற்றுதல் விழலுக்கிறைத்தவாறு.
பாடகர்களையும், இசைக்கலைஞர்களையும் ஒருங்கிணைத்து குறித்த நேரத்திற்கு அரங்கிற்குச் சென்று நிகழ்ச்சியை நடத்தி முடித்ததும், ஏற்பாடு செய்தவரிடமிருந்து மீதிப் பணத்தை வாங்குவது பிரம்மப்பிரயத்தனம். அவர் எங்காவது மது அருந்தி மட்டையாகி இருப்பார்.
இந்த அனுபவக்கடுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ராமேட்டன், டேனியல், பைரவர் போன்ற அநேகக் கலைஞர்களைப் பற்றி ஏதும் எழுதாமல் தவிர்க்கிறேன். ஏனெனில் வாசிக்கும் போது அதன் நேரடித் தாக்கம் உங்களுக்கு கிட்டாமல் போய்விடக்கூடும்.
உதாரணமாக, ”ஓ மை லார்ட் கேன்சல் மை ப்ரேயர்” என்பதன் பின்னுள்ளதை விவரித்து எழுதினால், அதன் சுவாரஸ்யத்தை இழந்து விடுவீர்கள்.
மற்றபடி டிலைட் ஆர்க்கெஸ்ட்ரா, சேரன் இன்னிசைக் குழு, மல்லிசேரி போன்ற குழுக்களைப் பற்றி எழுதிய ஜான் ஏன் ”திண்டுக்கல் அங்கிங்கு” பற்றி எதும் குறிப்பிடவில்லை எனத் தெரியவில்லை.
வெறுமனே கலைஞர்களைப் பற்றி மட்டுமல்லமல் சில பாடல்களை ஜான் விதந்தோதியிருப்பது அப்பாடல்களைப் பற்றிப் புதுத்திறப்பும்கூட.
இசையைக் கேட்பதோடு மட்டும் நில்லாது, அவ்விசை தந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்யும் ஸ்ரீனீவசன் சின்னச்சாமி, நாடோடி இலக்கியன், விஸ்வா கோவை போன்றவர்களுக்கு மிகவும் பிடிக்கக்கூடும்.
நன்றி ஜான், சிலவாண்டுகள் பின்னோக்கிச் செல்ல வைத்ததற்கும், வெங்கி(காதலென்னும் தேர்வெழுதி), காளிமுத்து(ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்), கார்த்தி (குல்மொஹர் மலரே குல்மொஹர் மலரே), வக்கீல் பாஸ்கர் (மூக்குத்தி முத்தழகு), தாமஸ்(கீ போர்டு) போன்றோரது ஞாபகங்களை மீட்டுத் தந்ததற்கும்.
You must be logged in to post a comment.