ஞாயிறு காலை 6.00 மணி இருக்கும் படித்துக் கொண்டிருந்த பேப்பரில் நிழலாடியது.
”அண்ணாச்சி சொகமா இருக்கியளா?
”நல்லா இருக்கம்லே. என்ன ஏம்பக்கமாக் காத்து வீசுது?”
”சும்மா உங்களப் பார்த்துட்டுப் போலாம்னுதாம் ”
”எலேய் என்னமாது வார்த்தை பேசிடப் போறேன். போன வட்டம் வந்து ஆஸ்பத்திரிச் செலவு இழுத்து விட்டுட்ட இப்ப எந்தத் தேர இழுத்துத் தெருவில விடப் போறீயோ.”
”எப்பப்பாத்தாலும் என்ன இடக்குப் பண்ணுறதே சோலியாப் போச்சு உங்களுக்கு. ”
”அப்படித்தாம்ல நீயும் நடந்துக்கிடுதே. சரி சரி வந்த சோலி என்ன அதச் சொல்லு முதல்ல.”
“எனக்கும் வயசு ஆச்சு பாத்துக்கிடுங்க. அம்மை எனக்கு ஒரு பொண்ணயும் பாக்குற மாதிரித் தெரியல”
”எலேய் உனக்கு சோறுபோடுததே வத்துன மாட்டுக்கு வைக்கப் பில்லு வைக்க கணக்கு. இதுல உனக்குச் சோடிதாங் கேடு”
“அதாம் பாத்தேன் நானே ஒரு புள்ளையக் கரக்ட் பண்ணீட்டேன்”
“அடப் பாதரவே, யாருல அந்தப் பாவப்பட்ட சென்மம்”
“நம்ம படிக்கல் பண்ணை பேத்தி.”
“ ஏலே அவுகளுக்கு 7 பையன் 6 பொண்ணுல்லா. எந்தப் பேத்தி?”
“அவுக கடைக்குட்டி ராசா இருக்ககள்ள அவுக மகதான்”
“எலே அந்தப் புள்ளைக்கு கண்ணா அவிஞ்சு போச்சு உன்ன பாத்து சொக்குனா?”
“போங்க அண்ணாச்சி இதுதான் எதையும் உங்ககிட்டச் சொல்லக் கூடாதுங்கது. மதினி இல்லியா”
“மதினி உழவர் சந்தைக்கு போயிருக்கா. சரி அந்தப் பொண்ணப் பாத்த பழகுன ஆனா அவ உன்னத்தா விரும்புறாளாலே?”
“இல்லன்னா எங்கூடக் கிளம்பி வருவாளா?”
“எலே என்ன சொல்லுத? அந்தப் புள்ளையக் கூட்டீட்டு வந்திட்டியா? புள்ளைய எங்கல?”
“இங்கனதாம் வெளிய நிக்கா”
“வெறுவாக்கெட்டவனே, வயசுப்ப்புள்ளைய இப்படியா தெருவில நிறுத்துவ? கூப்புடுல உள்ள”
பயந்த படியே உள்ள வந்த பொண்ணுக்கு 18க்குள்தான் இருக்கும் வயசு. கிராமத்து அழகு. இரவு பயணம் வந்தக் களைப்பு முகத்தில். கலைந்த கேசம், உடை என இருந்தாலும் லட்சனமாக இருந்தாள். என் முகம் பார்த்துப் பேசத் தயங்கினாள்.
“உங்கப்பனும் நானும் ஒம்பதுல ஒண்ணாப் படிச்சிருக்கோம் தெரியுமா?”
“அப்பா சொல்லியிருக்காக”
“தெரிஞ்சுமா இங்க வந்த?”
“இவுக மெட்ராஸ் போலாம்னுதான் என்னக் கூப்பிட்டாக. கார்சாண்டுல வச்சு கோயமுத்தூர் போலாம்னாக எனக்கு வேற வழி தெரியல”
“வச்சு காப்பாத்துவான்னு நம்பி இவங்கூட வந்த உன்னை எதால அடிக்க. காக்காசு சம்பாரிக்கத் துப்பு இருக்கா இவனுக்கு?”
”மெட்ராஸ்ல சேக்காளி இருக்கான். நோக்கியாக் கம்பேனியில. அங்க வேல ரெடியா இருக்குன்னாக”
“ஆமா தட்டுல வச்சுகிட்டு தொர வரக் காத்திருக்காக. அவஞ்சொன்னானாம் இவ நம்ம்புனாளாம். சரி சரி இப்பம் அவ வந்துருவா. இனி அவ என்ன சாமியாடப் போறாளோ தெரியல. நீ முதல்ல குளிச்சு துணி மாத்து.”
பாத்ரூமைக் காட்டிவிட்டு துண்டு மற்றும் சோப்பு எடுத்துக் குடுத்தேன். ஹாலில் மனைவி அதற்குள் வந்திருந்தாள்
“யாருங்க பொம்பளச் செருப்பு இருக்கு ஆளக் காணோம்?”
“உங்கொழுந்தன் பண்ணுன காரியத்த அவங்கிட்டவே கேட்டுக்கோ?”
நல்ல வேளை அவளுக்குத்தான் சொந்தக்காரன். என் தலை தப்பிச்சது. அவங்களுக்குள்ள பேசி முடிவுக்கு வரட்டும்னு வெளியே கிளம்பினேன்.
அரைமணி கழித்து வரும்போது வீடு அசாதாரண அமைதியில் இருந்தது. அந்தப் பெண் விசும்பும் ஒலியைத் தவிர வேறெதுவும் இல்லை.
“ஏங்க ஒரே பேச்சுத்தான். டிபனச் சாப்பிட்டுட்டு நீங்க கெளம்பி இவளக் கூட்டீட்டுப் போய் அவங்க வீட்டுல விட்டுட்டு வந்திடுங்க. அம்புட்டுத்தான்”
“ஏம்பா ராத்திரி அவங்கூட வந்திருக்கா. ஏதும் ஏடாகூடாமா”
“அதெல்லாம் ஒன்னுமில்ல. நான் விசாரிச்சுட்டேன்”
“சரி அப்படியே செய்யிறேன். முதல்ல எல்லோரும் சாப்பிடுவோம்”
இட்லியும் கொஞ்சம் சட்னியும் எடுத்து வைத்துக் கொண்டே கேட்டேன் அந்தப் பெண்ணிடம், ”ஏமா உங்க அப்பா இப்ப என்ன வேல பாக்குறான்.”
“மத்த பெரியப்பா மாமா எல்லாம் நல்லா செட்டில் ஆகிட்டாங்க. அப்பாவுக்குத்தான் ஒன்னும் அமையல். விவசாயம்தான். அதுல என்ன வருது? கொஞ்சம்தான்”
“சரி வீட்டுல போன் இருக்கா”
“அப்பா கிட்ட செல் இருக்கு”
டிபனை முடித்து விட்டு ராசவை அழைத்தேன், “ ராசா நல்லா இருக்கியா?”
“யாரு இது?”
“ஏ உங்கூட ஒம்பதாங்கிளாஸ்ல் படிச்சேனே பாதியில் கோயமுத்தூருக்கு வந்திட்டேனே? ”
“அட மில்லுக்காரர் மகனா? நீ எப்படி இருக்கே?”
“நல்லா இருக்கேன். சரி ஒம்பொண்ணக் காங்கலியா? வருத்தப் படாத அவ இங்கதான் இருக்கா.”
“அங்க எப்படி வந்தா? “
”வீரையா இருக்காம்லா அவங்கூட வந்தா”
“செறுக்கிவிள்ளைய என்ன செய்ய?”
”ஒன்னுஞ்செய்ய வேண்டாம். உங்க அக்கா ஒருத்தி திருப்பூர்ல இருக்காள்லா அவ நம்பரக் கொடு அங்கன கொண்டு போய் விடுதேன். படிக்கச் சொன்னதுக்குக் கோவிச்சுகிட்டு அத்த வீட்டுக்குப் போய்ட்டான்னு ஊர்ல மத்தவங்க்கிட்டச் சொல்லு. என்ன?”
“சரிப்பா இப்பத்தான் எனக்கு உயிரே வந்தது. நம்பர எழுதிக்கோ. நானும் அக்ககிட்டச் சொல்லுதேன். திருப்பூருக்கு வந்து அவளப் பாத்துட்டு உன்னப் பாக்க வாரேன்”
போனை வைத்ததும் நிமிர்ந்து பார்த்தேன் அந்தப் பெண்ணை. உடன்பாடு இல்லை என்பது முகத்தில் தெரிந்தது.
“உங்க அப்பா பாவம்மா. ஏற்கனவே உங்க பெரியப்பா அத்தைகள் எல்லாம் அவன உண்டு இல்லைன்னு ஆக்கீட்டாங்க. நல்லா வெளையுற நெம்மேனி வயல அவங்க பங்குக்கு வச்சுகிட்டு. ஆலமரத்து வயல உங்க அப்பனுக்கு எழுதி துரோகம் பண்ணீட்டாங்க. அதுக்கு மேல உங்கம்மா. எங்கருந்துதா உங்க தாத்தா அவளப் புடிச்சிட்டு வந்தாங்களோ? வேற யாரும் அவனுக்கு வாக்கப்பட்டிருந்தா இவ்வளவு சீரழிஞ்சிருக்க மாட்டான். இதுக்கு மேல நீயும் இப்படிப் பண்ணினா அவந்தாங்க மாட்டான். சரி ஒரு வேலையில இருக்கவனாப் பாத்துத்தான் ஆசப்பட்டியானா அதுவும் இல்லை. படிப்பும் இல்ல. பணமும் இல்ல. எத நம்பி அவங்கூட நீ வீடு விட்டன்னு இதுவரைக்கும் எனக்குப் புரியல. நாங்க சொல்லுதது இன்னைக்கு உனக்குக் கஷ்டமா இருக்கும் ரெண்டு மூனு வருசம் கழிச்சாப் புரியுமோ என்னவோ. இதுக்கு மேலயும் உனக்குப் புரியறாப்ல சொல்ல எனக்கு ஏலல.”
மனைவியைப் பார்த்தேன். ஆமோதித்துத் தலையாட்டினாள்.
ஏனோ ஹாஸ்டலில் இருக்கும் மகள் ஞாபகம் வந்தது.
***************************************************************************
You must be logged in to post a comment.