நவீன விருட்சம் இந்த இதழ் புதுக்கவிதை தொடங்கி 50 ஆவது வருட இதழாக மலர்ந்திருக்கிறது. அடியேனின் கவிதை – தக்கைகள் அறியா நீரின் ஆழம் – அதில் பிரசுரமாகி இருக்கிறது. எனவே எனக்கும் ஒரு பிரதி அனுப்பியிருக்கிறார் அழகிய சிங்கர்.
இரண்டாம் பக்கத்தில் முதல் படைப்பாக பிரசுரமாகி இருப்பது அனுஜன்யாவின் பிக்பாக்கட் கதை. மிக மகிழ்ச்சியாக இருந்தது. அச்சில் வாசிக்க மிக நன்றாக இருந்தது. வலையில் வாசிக்கும்போது ஏதோ ஒன்றை இழந்தாற்போலத்தான் இருக்கிறது.
ஜெ மோ வலையில் எழுதுவதை தொகுப்பாக தற்பொழுது நிகழ்தல் என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். புத்தகமாக வாசிக்க அருமையான அனுபவம்.
*********************************************************************************
சென்றவாரம் குடும்பத்துடன் கொச்சி, குருவாயூர் ஒரு அவசரச் சுற்றுலா சென்றிருந்தேன். கொச்சியின் தட்பவெட்ப நிலை பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். 2 மணிக்கு நல்ல வெயில் 2.05க்கு பலத்த மழை சாலையில் நடமாட்டமே இல்லை. 2.10 சுத்தமாக வெறித்து விட்டது வெயிலும் அடிக்கிறது. ஸ்விட்ச் போட்டாற்போல சாலையில் ஜன நடமாட்டம்.
மேரி, ஆனி, ஜார்ஜ், எலிசி, விக்டோரியா, டோமினி, ரெஜினா, அன்னி, ஜோய், ராபர்ட் என பத்துக் குழந்தைகள் பெற்று வளர்த்தும் என்னை எடுத்து வளர்த்த ரோசம்மா விதைத்த விதைதான் மலையாளக் கரையோரம் ஒதுங்கச் சொல்கிறதோ என்னவோ?
கொச்சியிலிருந்து குருவாயூர் சென்று திரும்பினோம். குருவாயூரில் அருமையான தரிசனம். குழந்தைக் கிருஷ்ணனைப் பார்த்தாலே மனதுக்கு ஒரு தெம்பு வந்து விடுகிறது. கேரளாவில் செட்டில் ஆக வேண்டுமென்ற ஆவல் வெறியாக மாறிக் கொண்டிருக்கிறது.
*********************************************************************************
ஏர்டெல்லின் விளம்பரங்கள் எப்போதும் தரமிக்கவையாகவும் கற்பனைவளமிக்கதாகவும் இருக்கும். காகிதக் கப்பலை மழையில் நனையாமல் காப்பாற்றும் குழந்தைகள் விளம்பரம் நல்ல கவிதை.
அதே போல டாடா டோகோமோவின் விளம்பரங்களும் நன்றாக இருக்கிறது. கோல் போட்டவன் குதூகலம் சங்காக மாறுவது நல்ல நகைச்சுவை.
உடனே ஒரு லோக்கல் விளம்பரம் வந்து கழுத்தறுப்பதுதான், சென்னைவாசிகளின் பாஷையில், படா பேஜாராக் கீது மாமே.
*********************************************************************************
யாத்ரா, வாசு, நந்தா, சேரல், ரெஜோ, முகுந்த், முத்துவேல் போன்றோர்கள் நல்ல கவிதைகள் படைத்துவரும் அதே நேரத்தில் கவனிப்பையும் பெற்றுவிட்டார்கள். அவர்களைபோலவே நல்ல கவிதைகள் எழுதிவரும் கார்த்தி (அல்லது கார்ட்டின்?) எழுதிய இக்கவிதை என்னைக் கவர்ந்த்த்து.
வீட்டில் அலமாரி நிறையப் புத்தகங்கள் இருந்தாலும் மேஜை நிறைய வார, மாத இதழ்கள் இருந்தாலும் சுண்டல் அல்லது வேர்க்கடலை மடித்திருந்த காகிதத்தைத் திருப்பித் திருப்பிப் படிப்பது ஒரு சுகம். அதைத்தான் பேசுகிறது இக்கவிதை.
கூம்புகளுக்குள்
நீங்கள்
பாலிதீன் பைகளைப்
புறக்கணித்து விட
இன்னுமொரு காரணம்
இந்த வேர்கடலைப் பேப்பர்கள்
கூம்புகளைப் பிரிப்பதில்
மட்டும் கவனமிருக்கட்டும்
கவிதையோ
கதை போன்றவொன்றோ
இருக்கலாம்
இரண்டு பக்கங்களுக்குள்
தீக்குளித்து
என்றோ செய்தியானவன்
எண்ணெய்த் தீற்றலோடு
தென்படலாம்
கடைசி வார்த்தை மட்டும்
யாருக்கோ சிக்காத
குறுக்கெழுத்துப் புதிரொன்றும்
சிக்கிக் கொள்ளலாம்
ஆகவே
அடுத்த முறையேனும்
வீசியெறியாமல்
விரித்துப் பார்த்துவிடுங்கள்
கெட்டியான பேப்பரென்றால்
அட்டைப் பட நாயகிக்கும்
அதிர்ஷ்டமுண்டு..
பின்பக்கத்தில்
சொப்பனஸ்கலிதம் தீர்க்கும்
விளம்பரம் இல்லாதிருப்பது உத்தமம்.
– கார்த்தி என்
*********************************************************************************
கேரளாவைச் சேர்ந்த ஜோய் செஸ்ட்நட் வசிப்பது அமெரிக்காவில். அங்கு நடந்த ஒரு போட்டியில் 10 நிமிடத்தில் 38 ஹாட் டாக் சாப்பிட்டு முதல் பரிசைப் பெற்றார்.
கேரளாவில் அதைச் செய்தியாக வெளியிடும்போது 10 நிமிடத்தில் 38 நாய்களைச் சாப்பிட்டார் என மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். செய்தியை வெளியிட்டது கம்யூனிஸ்ட் தோழர்களின் அதிகாரப்பூர்வப் பத்திரிக்கை.
.