உருவு கண்டு எள்ளாமை

kullan

”ஜப்பான் எங்க? இன்னும் வரலையா?”ன்னு கேட்டப்ப எனக்கு எதுவும் புரியவில்லை. கேட்டது அப்பாவின் மேலாளர். நான் அப்பாவைக் காண அவரது அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன்.

”இப்ப வந்திருவாப்டி”ன்னு அப்பா சொல்லும்போது இன்னும் குழப்பம்.

சிறிது நேரத்தில் வந்து சேர்ந்த மனிதர் 4 அடிக்கும் குறைவாகவே இருந்தார். நல்ல சிவப்பு. குறுகிய கண்கள். என்னுடன் படிக்கும் வசந்தியின்  அப்பா.

கடகடவென்று அவருக்கு ஏப்பித்திருந்த வேலைகளைச் செய்து முடித்தவிதத்ததையும், இனிச் செய்ய வேண்டியவைகளையும் சொன்னார். சிறிது நேரம் சென்ற பின், “இவருக்கு ஏன் ஜப்பான்னு பேரு?” என அப்பாவிடம் கேட்க, “ஆளு குள்ளமா இருக்காருல்ல, அதான்”

எனக்கு வருத்தமாகவே இருந்தது. வசந்தி நல்ல உயரம், அவள் அம்மா மாதிரி எனப் பின்னாளில் இருவரையும் ஒரு சேரப் பார்த்தபோது தெரிந்தது.

எட்டாம் வகுப்பில் சாந்தி டீச்சர் மாறுதலில் வந்து சேர, எங்கள் படிப்பு சற்று உருப்பட்டுவிடுமென்ற நம்பிக்கை வந்தது. ஒரு நாள் வகுப்பில், ”யார் உங்கள் ரோல் மாடல்?” எனக் கேட்க ஆளாளுக்கு ”ஜெய்சங்கர், முத்துராமன்” என சினிமா நடிகர்கள் பெயரைச் சொல்ல, வசந்தி, ”எனக்கு எங்கப்பாதான் ரோல் மாடல் டீச்சர்” என்றாள்

“குட், அவருகிட்ட என்ன பிடிக்கும்?”

”டீச்சர், அவரு குள்ள உருவம், அத வச்சு மத்தவங்க கிண்டல் பண்ணுவாங்க. ஏன் என்னைக்கூட இவனுக எல்லாம், அதச் சொல்லிக் கிண்டல் பண்ணுவாங்க. ஆனா அவரு அது பத்தி ஒரு நாள்கூட வருத்தப் படமாட்டாரு. கேட்டா, நம்ம வேலையக் கரெக்டா செஞ்சா உருவம் என்னடா செய்யும்? என்னைவிட உயரமா ஒண்ணுமே செய்யாம இருக்கதவிட நான் எவ்வளவோ பரவாயில்லை அப்படின்னு சொல்லுவாரு. எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்”

 மடல்பெரிது தாழை; மகிழினிது கந்தம்

உடல்சிறியா ரென்றிருக்க வேண்டா – கடல்பெரிது

மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல்

உண்ணீரு மாகி விடும்.

-மூதுரை(12) – அவ்வை

 தாழை மடல் மிகப் பெரியது, ஆனால் அதனுடன் ஒப்பிடும்போது, மிக மிகச் சிறியதாக இருக்கும் மகிழம்பூ, நல்ல வாசம் வீசுகிறது. அதைப் போலவே கடல் மிகப் பெரியது என்றாலும் அதன் நீரைக் குடித்துத் தாகம் தீர்க்க இயலாது. அதே சமயம், கடற்கரையோரம் சிறு ஊற்றில் கிடைக்கும் நீரோ தாகம் தீர்க்கவல்லது.

உடலின் அளவை வைத்து ஒருவரைப் பெரியவர், சிறியவர் எனப் பாகுபடுத்துதல் வேண்டாமே.

ஐந்து சுந்தரிகள் என்ற மலையாளப் படத்தில் வரும் குள்ளனும் மனைவியும் பகுதியைப் பார்க்கும்போது ஜப்பான் இல்லை இல்லை ஆறுமுகம் சார் ஞாபகம் வந்தது.

2 comments

Leave a comment