12 சிறுகதைகள். ஒவ்வொன்றிலும் கதாசிரியன் ஏதோ ஒரு பாத்திரத்தில். சிலதில் முக்கியமானவராக சிலதில் சாதாரணமானவராக, சிலதில் வந்து போகிறவராக. தொடர்ச்சியாக வாசிக்கையில் ஒரு நாவலாக விரியும் இப்படைப்பின் பிற்பகுதியில் இன்னொரு நுட்பம் இருக்கிறது.
சிறுகதைகளின் முடிவு குறித்து வாசகனுக்கு வேறு விதமான கருத்து இருப்பது உண்மை. இந்தச் சிறுகதைகளுக்கு ஒன்றிற்கு மேல் சாத்தியப்பட்ட முடிவுகளையும் கொடுக்கிறார். சில முடிவுகளை நம்மைக் கற்பனை செய்துகொள்ளச் செய்கிறார்.
நாவலாகப் பார்த்தால் நாவல். சிறுகதைகளாகப் பார்த்தால் சிறுகதைகள். என்றாலும் இதில் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் ஆச்சர்யமானவை. உங்களுக்குத் தேவையான சாத்தியக்கூறுகளை எடுத்துக் கொண்டு நீங்களே ஒரு நாவலைக் கட்டமைக்க முடியும்.
க்யூபிஸம் என்ற முறையில் சொல்லப்பட்ட இந்த நாவலில் வெளிப்படும் அங்கதத்தை நான் மிகவும் ரசித்தேன்.
நாவலின் தலைப்பு “அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்” ஆசிரியர் எம் ஜி சுரேஷ்.
எம்.ஜி சுரேஷ் பற்றி மேலும் அறிந்து கொள்ள.
ஆசிரியரின் மற்றொரு நாவல் சிலந்தி. பொதுவாக எழுத்தாளர் தன்மை ஒருமையில் எழுதுவார்கள் அல்லது அவன் அவள் என ஒருமையில் அழைத்து எழுதுவார்கள். இவர் ஒரு வித்தியாசமாக நீங்கள் என நம்மை அழைத்து எழுதியிருக்கும் நாவல் இது.
ஒரு வித்தியாசமான கண்ணாமுச்சி விளையாட்டு இந்நாவலைப் படிப்பது. ஆசிரியர்தான் கொலைக் குற்றம் செய்தவர். நாம் அதைக் கண்டுபிடிக்கும் துப்பறிவாளர். வழக்கமான அங்கதம் இக்கதையிலும் விரவியிருக்கிறது.
அதிலும் ஆசிரியர் சொல்லும் நீங்கள் ஒரு ஆணாக இருந்தால் அல்லது பெண்ணாக இருந்தால் என இரு சாத்தியப்பாட்டிலும் கதை பயனிக்கிறது. இந்நாவல் விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற அடிப்படையில் எழுதப்பட்ட நாவல். வாசிக்கும் நாமே வாசிக்கும் கதையில் ஒரு கதாபாத்திரமாக மாறும் விந்தை.
இவ்விரு நாவல்களையும் தேடி வாசிக்கத் தூண்டியது சாருவின் கீழ்கண்ட ஒரு பத்தி ( தாந்தேயின் சிறுகதை என்ற பதிவில் )
// எழுத்தாளர்களல்லாத எழுத்தாளர்களைக்கூட(தமிழவன், பெருமாள் முருகன், யுவன் சந்திர சேகர்) என்னால் சகித்துக் கொள்ள முடியும், ஆனால் எம் ஜி சுரேஷ் போன்ற விபத்துக்கள் தமிழ்சூழலில் மட்டுமே சாத்தியம்//
சுரேசும், யுவனும் சம்பிரதாயக் கதைசொல்லலிருந்து விலகி மொழியின் பல்வேறு பட்ட சாத்தியங்களை முயற்சித்திருக்கிறார்கள். நவீன இலக்கியத்திற்கு தன்னை விட்டால் வேறெவரும் அத்தரிட்டி இல்லை என முழங்கிவரும் சாரு இவர்களை வெறுப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் ஏன் பெருமாள் முருகன்?
ஏறு வெயில் மற்றும் கங்கணம் மாதிரியான நாவல்கள் மூலம் திருச்செங்கோட்டு வாழ்க்கை முறைகளையும் அந்த மக்களை அவர்கள் வேர்வை வீச்சத்துடனும் உழைப்பின் உவர்ப்புடனும் கண்முன்னே நடமாடவிட்டவர் பெருமாள் முருகன்.
ஒரு எழுத்தாளரை இப்படி மொத்தமாகப் புறக்கனிக்க என்ன காரணம்?
எப்படி இருந்தாலும் தேடி வாசிக்கத் தூண்டிய சாருவிற்கு நன்றி.
.