மாருதி நிறுவனத்தின் லேட்டஸ்ட் விளம்பரங்கள் நன்றாக இருக்கின்றன. என்னதான் தொழில்நுட்பம், சிறப்பு என்று விளம்பரப்டுத்தினாலும் இந்தியர்கள் மைலேஜைத்தான் பார்ப்பார்கள் என சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
மற்ற விளம்பரங்கள் இங்கே
அவர்க்ள் மட்டுமல்ல பதிவுலகிலும் சிலர் சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். யாரை விமர்சித்தால் மைலேஜ் கிடைக்கும் என்று பார்த்துத்தான் அவதாரம் எடுக்கிறார்கள்; பெண்ணியக் காவலர்களாக, ஆணாதிக்க எதிர்ப்பாளராக, உடனடி நீதிபதியாக. அறச்சீற்றத்தோழர்களும், கொள்கைக்காக நட்பைத் துறந்த கோமானும் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை. யாரவது பார்த்தால் தகவல் சொல்லவும்.
எப்படியோ நான் சொல்லி வந்தது உண்மை என ஆகி விட்டது.
உண்மையை யாரும் நம்புவதில்லை. பசும்பாலிலிருந்து தயாரித்த மோரைத் விற்கத் தெருத்தெருவாக அலைய வேண்டி இருக்கிறது. கள் உட்கார்ந்த இடத்திலேயே விற்றுப் போய் விடுகிறது. -கபீர்தாசர்.
***************************************************************
கதவு சிறுகதைதான் நான் முதன் முதலில் படித்த கி ராவின் சிறுகதை. அந்தச் சிறுவர்கள் இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் மனதிலிருந்து மறையவில்லை. அதன் பிறகு தேடிப் படித்ததில் நாற்காலி மிகவும் பிடித்திருந்தது.
கரிசல் மண்ணை அதன் வாசத்தோடும் வீச்சத்த்தோடும் நம் முன்னே காட்டியவர்.
கரிசல் காட்டு வாழ்க்கையை கதைகளில் படம்பிடித்துப் பத்திரப்படுத்தியவர் அவர்.
அனைத்துச் சிறுகதைகளையும் அகரம் பதிப்பகம் ஒரே தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது. விலை 200 ரூபாய்.
கிராமத்துத் தென்றலை (சு)வாசிக்க நினைப்பவர்களுக்கு நல்ல தேர்வு இது. வாசித்துத்தான் பாருங்களேன்.
***************************************************************
ஆறாவது வனத்தின் தீராத ரணத்தை ஆற்ற அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய “நாலு பெண்கள்” பார்த்தேன். பத்மப்ரியா, காவ்யா மாதவன், நந்திதாதாஸ், கீது மோகந்தாஸ் என முன்ணனி நடிகைகள் சிறப்பாகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறார்கள்.
நான்கு குறுங்கதைகளை எடுத்துக் கோர்த்திருக்கிறார். நான்கும் நான்கு கதைக்களனைக் கொண்டிருந்தாலும் பெண்ணின் சிரமம் என்ற நூலெடுத்துக் கோர்த்திருக்கிறார்.
படம் பற்றிய காலச்சுவட்டில் சுகுமாரன் எழுதிய விமர்சனம்
***************************************************************
இம்மாத உயிர்மையில் மலேசியவாசுதேவன் பற்றி ஷாஜி எழுதுய மறதியில் கரைந்த மகத்தான பாடகன் என்ற கட்டுரை அற்புதமாக இருந்தது. மிக நீண்ட நல்ல அலசல். மலேசியாவின் ஆளுமையை உள்ளபடி எடுத்து வைத்த கட்டுரை.
அவர் கொடுத்திருந்த பட்டியல் எல்லாமே அருமையான பாடல்கள். வாசுதேவன் பாட்ல்கள் தொகுப்பு என ஒரு டிவிடி வாங்கிக் கேட்டேன். என்ன ஒரு வெர்சாட்டிலிட்டி.
எனக்குப் பிடித்த பாடல்களில் சில.
1. ஆகாய கங்கை பூந்தேன் மழை தூவி
2. கோடை காலக் காற்றே
3. பனி விழும் பூ நிலவில்
4. இளம் வயசுப் பொண்ணை வசியம் செய்யும் வளைவிக்காரி
5. ஏ ராசாத்தி ராசாத்தி
***************************************************************
இவ்வாரக் கவிதை.
உள்ளதிலேயே
சிறந்த புகைப் படத்தைத்தான்
பெண் வீட்டிற்கு அனுப்பினேன்.
வந்ததிலேயே
சிறந்த புகைப் படத்தை
தேர்வு செய்திருப்பார்கள் போல.
பதில் இல்லை.
– பா.ராஜாராம் – ஆனந்த விகடனில்