Month: August 2010

கலைடாஸ்கோப் – 29-08-10

மாருதி நிறுவனத்தின் லேட்டஸ்ட் விளம்பரங்கள் நன்றாக இருக்கின்றன. என்னதான் தொழில்நுட்பம், சிறப்பு என்று விளம்பரப்டுத்தினாலும் இந்தியர்கள் மைலேஜைத்தான் பார்ப்பார்கள் என சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

மற்ற விளம்பரங்கள் இங்கே

அவர்க்ள் மட்டுமல்ல பதிவுலகிலும் சிலர் சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். யாரை விமர்சித்தால் மைலேஜ் கிடைக்கும் என்று பார்த்துத்தான் அவதாரம் எடுக்கிறார்கள்; பெண்ணியக் காவலர்களாக, ஆணாதிக்க எதிர்ப்பாளராக, உடனடி நீதிபதியாக. அறச்சீற்றத்தோழர்களும், கொள்கைக்காக நட்பைத் துறந்த கோமானும் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை. யாரவது பார்த்தால் தகவல் சொல்லவும்.

எப்படியோ நான் சொல்லி வந்தது உண்மை என ஆகி விட்டது.

உண்மையை யாரும் நம்புவதில்லை. பசும்பாலிலிருந்து தயாரித்த மோரைத் விற்கத் தெருத்தெருவாக அலைய வேண்டி இருக்கிறது. கள் உட்கார்ந்த இடத்திலேயே விற்றுப் போய் விடுகிறது. -கபீர்தாசர்.

***************************************************************

கதவு சிறுகதைதான் நான் முதன் முதலில் படித்த கி ராவின் சிறுகதை. அந்தச் சிறுவர்கள் இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் மனதிலிருந்து மறையவில்லை. அதன் பிறகு தேடிப் படித்ததில் நாற்காலி மிகவும் பிடித்திருந்தது.

கரிசல் மண்ணை அதன் வாசத்தோடும் வீச்சத்த்தோடும் நம் முன்னே காட்டியவர்.
கரிசல் காட்டு வாழ்க்கையை கதைகளில் படம்பிடித்துப் பத்திரப்படுத்தியவர் அவர்.

அனைத்துச் சிறுகதைகளையும் அகரம் பதிப்பகம் ஒரே தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது. விலை 200 ரூபாய்.

கிராமத்துத் தென்றலை (சு)வாசிக்க நினைப்பவர்களுக்கு நல்ல தேர்வு இது. வாசித்துத்தான் பாருங்களேன்.

***************************************************************

ஆறாவது வனத்தின் தீராத ரணத்தை ஆற்ற அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய “நாலு பெண்கள்” பார்த்தேன். பத்மப்ரியா, காவ்யா மாதவன், நந்திதாதாஸ், கீது மோகந்தாஸ் என முன்ணனி நடிகைகள் சிறப்பாகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறார்கள்.

நான்கு குறுங்கதைகளை எடுத்துக் கோர்த்திருக்கிறார். நான்கும் நான்கு கதைக்களனைக் கொண்டிருந்தாலும் பெண்ணின் சிரமம் என்ற நூலெடுத்துக் கோர்த்திருக்கிறார்.

படம் பற்றிய காலச்சுவட்டில் சுகுமாரன் எழுதிய விமர்சனம்

***************************************************************

இம்மாத உயிர்மையில் மலேசியவாசுதேவன் பற்றி ஷாஜி எழுதுய மறதியில் கரைந்த மகத்தான பாடகன் என்ற கட்டுரை அற்புதமாக இருந்தது. மிக நீண்ட நல்ல அலசல். மலேசியாவின் ஆளுமையை உள்ளபடி எடுத்து வைத்த கட்டுரை.

அவர் கொடுத்திருந்த பட்டியல் எல்லாமே அருமையான பாடல்கள். வாசுதேவன் பாட்ல்கள் தொகுப்பு என ஒரு டிவிடி வாங்கிக் கேட்டேன். என்ன ஒரு வெர்சாட்டிலிட்டி.

எனக்குப் பிடித்த பாடல்களில் சில.
1. ஆகாய கங்கை பூந்தேன் மழை தூவி
2. கோடை காலக் காற்றே
3. பனி விழும் பூ நிலவில்
4. இளம் வயசுப் பொண்ணை வசியம் செய்யும் வளைவிக்காரி
5. ஏ ராசாத்தி ராசாத்தி

***************************************************************

இவ்வாரக் கவிதை.

உள்ளதிலேயே
சிறந்த புகைப் படத்தைத்தான்
பெண் வீட்டிற்கு அனுப்பினேன்.

வந்ததிலேயே
சிறந்த புகைப் படத்தை
தேர்வு செய்திருப்பார்கள் போல.

பதில் இல்லை.

– பா.ராஜாராம் – ஆனந்த விகடனில்

பேசாத பேச்செல்லாம்

பிரம்பு வாத்தியார் கந்தசாமி,
பாட்டு டீச்சர் சரஸ்வதி,
இடிந்து விழுந்த ஏழாப்புக் கட்டிடம்
தோத்து அழுத கபடிப் போட்டி
மயங்கி விழுந்த சுதந்திர தின மார்ச்
மாற்றலாகிப் போன சாந்தி டீச்சர்
எட்டாப்பில் திருமணமாகிய புனிதா
என
பேச எவ்வளவோ இருந்தும்
அவனைப் பற்றியே
அரை மணிநேரம் பேசிச் சென்றான்
எதிர்பாராத தருணமொன்றில்
சந்திக்க நேர்ந்த
பள்ளித் தோழன்.

தீராத ரணம்



பைக்கை ஸ்டண்டில் விடும்போதே சிக்னலைக் கவனித்திருக்க வேண்டும். ஏமாந்து விட்டேன்.

“செந்திலா? குமரனா?”

“ஆறாவது வனம்”

“அஙக போடுங்க” என்று சொல்லி ஒரு பார்வை பார்த்தார். அங்கே மொத்தமே 10 வண்டிகள்தான் இருந்தன. சரி நல்ல படத்துக்குக் கூட்டம் குறைவாக வருவது சகஜம்தானே என்று நினைத்துக் கொண்டேன்.

கோடம்பாக்கத்தில் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு நல்ல கதை கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கையில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நல்ல கதையைச் சிரமப்பட்டு மிக மோசமாக எடுத்திருக்கிறார்கள்.

இண்டெர்வெல் பிளாக்கில் நல்ல திருப்பமும், க்ளைமேக்ஸில் அதிரடியான முடிவும் கொண்ட ஒரு கதையை இதற்கு மேலும் யாராலும் சொதப்ப முடியாது என்பது போலச் சொதப்பி இருக்கிறார்கள்.

கதாநாயகனாக நடிப்பது மிகச் சுலபம் என்றும் இயல்பாக நடிப்பது எப்படி என்றும் நடித்துக் காட்டி இருக்கிறார் கதாநாயகன். மொத்தப் படத்துக்கும் ஒரே முகபாவம். இந்தப் படத்துக்கு இது போதும் என்று நினைத்திருப்பார் போலும். சில காட்சிகளில் கருப்பாக இருக்கிறார். அடுத்த காட்சிகளில் நல்ல சிவப்பாக இருக்கிறார். கண்டினியூட்டி என்பதுதான் டைரக்சனின் பாலபாடம். இயக்குனர் அதில் நன்றாகக் கோட்டை விட்டிருக்கிறார்.

“மலர், நாளைக்கு நாம சென்னை போறோம்”

“எதுக்கு மாமா?”

“போலிஸ் ஸ்டேசன்ல வரச்சொல்லி இருக்காங்க”

அடுத்த காட்சி போலிஸ் ஸ்டேசன். 3 வயதுக் குழந்தைகூடச் சொல்லி விடும் அது சென்னையிலுள்ள ஒரு போலிஸ் ஸ்டேசன் என்று. இயக்குனர் மிகப் பொறுப்பாகக் கார்டு போடுகிறார் “CHENNAI POLICE STATION”. யாருக்காக இந்தக் கார்டு என்பது அவருக்கே வெளிச்சம். சி கிளாஸ் ஆடியன்சுக்கு என்றால் தமிழில் அல்லவா போட வேண்டும். ஒரு வேளை ஆஸ்கரைக்(!?) குறி வைத்தோ?

இண்டெர்வெல் பிளாக்கில் வரும் திருப்பம் கதைக்கு முக்கியமான ஒன்று. ஆனால் அதை ஏதோ சாதாரண ஒன்று என்பதாகக் காட்டி இருக்கிறார்கள். நாயகன் கையில் இறந்துவிட்ட நாயகியின் அஸ்தி. நாயகியின் சொந்த ஊரில் கரைக்க வேண்டும் என்பதற்காக அஙே வருகிறார். ஆனால் நாயகியை அவள் மாமனுடன் கோவிலில் பார்க்கிறான் நாயகன். நாயகன் முகத்தில் அதிர்ச்சியைக் காட்ட எந்த விதமான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை இயக்குனர். இந்தக் காட்சியை அமைத்த விதம் மிக மிக மோசம். ரீ ரிக்கார்டிங்கும் ஆகச் சிறந்த சொதப்பல். இசையமைப்பாளர் இன்னும் என்பதுகளிலிருந்து வெளியே வரவில்லை.

காட்சியமைப்பில் ஒன்றைச் சொல்லுவார்கள். ஒரு காட்சியின் முடிவில் ஒரு லின்க் வைக்க வேண்டும் சிறிது நேரம் கழித்து அடுத்த காட்சி வரும்போது இந்தக் காட்சியுடன் தொடர்பு படுத்தவும், விட்ட இடத்திலிருந்து தொடரவும் அது உதவ வேண்டும். அதே போல ஒரு காட்சியின் தொடக்கம் அதற்கு முன் விட்ட இடத்திலிருந்து எந்தத் தொய்வுமில்லாது தொடங்க வேண்டும். அப்படி எல்லாம் இல்லாமல் ஒரு பின் நவீனத்துவத் திரைப்படம் போல் எடுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் எடிட்டரைச் சந்தித்து ஒரே ஒரு கேள்விதான் கேட்கவேண்டும். “எப்படிங்க?”. அசாத்தியத் திறமை இருக்கும் ஒருவரால்தான் இதைத் தொகுத்திருக்கவே முடியும்; பாவம் அவர்.

விஸ்காம் படிக்கும் இளைஞர்களே சிறந்த குறும்படங்களை படைத்துக் கொண்டிருக்கையில் , தொழில்நுட்பத்தையும் தேவையான பணத்தையும் கைவசம் வைத்துக் கொண்டு விழலுக்கிறைத்துவிட்டார்கள்.

பொதுவாக ஒரு படைப்பிற்குப் பின் உள்ள உழைப்பை மதிக்க வேண்டும் என்றே நான் வாதிட்டு வந்திருக்கிறேன்; இதுவரை. இந்தப் படம் ஒரு விதிவிலக்கு.

ஆறாவது வனம் – தீராத ரணம்.