Month: January 2012

கோபிசெட்டிபாளையம்

சென்ற இரண்டு நாட்களாக கோபிசெட்டி பாளையத்தில் டேரா. நல்ல பச்சை பசேலென கண்ணைப் பறிக்கிறது ஊர். நல்ல தட்பவெட்பமும் சேர்ந்து ரம்மியமாக இருந்தது. கோடையில் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. நகர சந்தடிகள் ஏதுமற்ற சிறு நகரம்.  இச்சிறிய நகரத்தைச் சுற்றிஎப்படி இத்தனை கல்வி நிலையங்கள் வந்தன எனத் தெரியவில்லை. மாநில அளவில் ரேங்க் வாங்கும் பள்ளிகள் பெரும்பாலும்.

எமரால்டு லாட்ஜில்தான் தங்கல். நாங்கள் சென்ற போது ஏசி, டீலக்ஸ் அறை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டார்கள். சரி இருக்கும் அறையைக் கொடுங்கள் என்றது டபிள் ரூம் ஒன்றைக் கொடுத்தார்கள்.  “சோப்பு டவல் குடுப்பா” என்று சொன்னால் ரூம்பாய் சொன்னதைக்கேட்டதும் கடுப்புத்தான் வந்தது. “சார் அதெல்லாம் ஏசி ரூமில் தங்குபவர்களுக்கு மட்டும்தான்” அடப் பாவிகளா? இரவு 9.30 மணிக்கு அடைத்திருந்த கதவைத் திறக்கச் சொல்லி டவல் வாங்கினோம்.

லாட்ஜிற்கு எதிரில் அம்மன் மெஸ் இருக்கிறது. சுடச்சுட மதியச் சாப்பாடு வித் கறிக்குழம்பு, சிக்கன் குழம்பு மற்றும் மீன் குழம்புடன். நல்ல சுவையான உணவு. 40 ரூபாய்தான். மற்ற ஐட்டங்களும் விலை குறைவுதான். நான் தமிழ்நாட்டின் அனேக இடங்களுக்குச் சென்று சாப்பிட்டிருக்கிறேன். குடல் வருவல் இவர்கள் செய்த மாதிரி எங்கும் சாப்பிட்டதில்லை. ஹோட்டலின் உள்ளே அடித்திருக்கும் பெயிண்ட் தான் இண்டஸ்டிரியல் க்ரே கலர் எனவே ஒரு டல் லுக் இருக்கிறது. மற்றபடி சுவையான சாப்பாட்டிற்கு உத்திரவாதம்.

 

காஃபிர்களின் கதை என்ற தொகுப்பைத்தான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். தொகுத்தவர் கீரனூர் ராஜா. முஸ்லிம் அல்லாத எழுத்தாளர்கள் எழுதிய முஸ்லிம் கதைகள் என்ற அடிப்படையில் தொகுக்கப் பட்டிருக்கிறது. தமிழின் முக்கியமான புத்தகம். தவறாமல் வாசியுங்கள். 18 கதைகள் கொண்ட தொகுப்பில் பாரதி முதல் தமிழின் முக்கிய எழுத்தாளார்கள் எழுதிய கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

எனக்கு மிகவும் பிடித்த சு.ராவின் விகசிப்பு கதை புதிய அகத்திறப்பைக் கொடுத்தது மறு வாசிப்பில். நாஞ்சில் நாடன் வழக்கம் போல் நல்லதொரு சிறுகதை படைத்திருக்கிறார். அனேகமாக இது ஒன்றுதான் இந்தத் தொகுப்பிற்காகவென எழுதப் பட்டதாக இருக்க வேண்டும். மற்றதெல்லாம் ஏற்கனவே எழுதி வெளியான கதைகள் என நினைக்கிறேன்.

எஸ்.ராவின் ஹசர் தினார் அருமையான சிறுகதை. வழக்கம்போல புனைவிற்கும் வரலாற்றிற்கும் இடையில் சடுகுடு ஆடியிருக்கிறார். பிரபஞ்சனின் கதை சுமார்தான்.  இந்நூலினைப் பற்றி இங்கே ஒரு விமர்சனம் படியுங்கள்.

 

ரண்டு அப்பாயிண்ட்மெண்ட்களுக்கு இடையே 1 மணி நேரம் இடைவெளி இருந்தது, “செல்வக்குமார், பாரியூர் அம்மன் மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஒரு தடவை கூப்பிட்டிருந்தார்கள் பார்த்துவிடுவோமா? “ என்றேன்.

“சரி சார் பார்த்திடலாம்”

“உங்களுக்கு இடம் தெரியுமா?”

”பாரியூர் அம்மன் கோவில் இங்கே இருந்து 3 கிமீதான் சார். அங்கே சென்று விசாரித்துக் கொள்ளலாம்”என்றார்.

கோவிலருகில், அப்படி ஒரு பள்ளி இருப்பதற்கான அறிகுறியே இல்லை. யாருக்கும் தெரியவில்லை. என்கொயரி நோட்டைப் பார்த்து அழைத்தால், “சார் நீங்க இருக்கும் இடத்தில் இருந்து 20 கிமி வரணும். பங்களாப் புதூர் எனக் கேட்டு வாருங்கள்” என்றார்.

“செல்வா ஒண்ணு நிச்சயம்”

“என்ன சார்”

”சிங்கப்பூர் ஹார்டுவேர்ஸ்க்கு எப்படிப் போகணும்னு உங்ககிட்ட வழி கேட்கமாட்டேன்”

 

 

 

 
 

கையெழுத்து

சண்முக நதி தாண்டியதும் ஓரத்தில் இருக்கும் தோப்பில் சைக்கிளை நிறுத்தினான் வெங்கடேஷ்.  நாங்களும் நிறுத்தினோம்(நான், சுரேஷ், பார்த்திபன்).

”ஏண்டா”

”டேய் நல்லாக் கேட்டுக்குங்க. இப்ப நாம செய்யப் போற காரியம் நம்ம நாலு பேருக்கு மட்டும்தான் தெரியும். லீக்காச்சு, நான் பொல்லாதவனாகிடுவேன்”னு மிரட்டினான்.  அவன் அடிக்கடி “கர்லாக் கட்டை” “டம்பள்ஸ்” “பெஞ்ச் ப்ரஸ்” என்றெல்லாம் பயமுறுத்துவான். எனவே இயல்பாகவே அவன் மீது ஒரு பயம்.

“சரிடா சொல்லு”

“டேய் நீங்க எல்லாம் ப்ரொக்ரஸ் கார்டு கையெழுத்து வாங்கிக் கொடுத்திட்டீங்க. நான் இன்னும் கொடுக்கலை. இன்னைக்குத்தான் கடைசி நாள். அதுக்குத்தான் ஒரு ஐடியா பண்ணி இருக்கேன்”

”என்னடா அது?”

”எங்க அண்ணன் ஹேண்ட் ரைட்டிங்கும் ராஜாவோட(நான்) ஹேண்ட் ரைடிங்கும் ஒரே மாதிரி இருக்கும். எங்க அண்ணன் பாலசுப்ரமணியன்ன்னு சேர்த்து எழுதுவாரு அதுதான் அவரது கையெழுத்து.  இப்ப ராஜாவும் அதே மாதிரிப் ப்ராக்டிஸ் பண்ணி போடப் போறான்.”

“டேய் என்ன மாட்டி விடாதடா. நாஞ்செய்ய மாட்டேண்டா”

“வேற வழி இல்லை நீதான் செஞ்சாகணும்”

“சரி அப்பா கையெழுத்துக்குப் பதிலா ஏன் அண்ணன் கையெழுத்துன்னு கேட்டா என்ன பண்ணுவே?”

”அது என்னோட ப்ராப்ளம், அப்பாவும் அம்மாவும் ஊருக்குப் போயிட்டாங்கன்னு சொல்லி சமாளிச்சிடுவேன்.”

வேற வழி இல்லாமல் நான் நாலைந்து விதங்களில் கையெழுத்துப் போட்டுக் காட்ட, சின்னச் சின்னத் திருத்தங்களுக்குப் பிறகு ஒன்றை ப்ரக்ரஸ் கார்டில் போட்டுத் தொலைத்தேன். ஆனாலும் அடி வயிற்றில் ஒரு பயம் இருந்துகொண்டே இருந்தது. இந்த ஒரு கையெழுத்துடன் இது ஓய்ந்திடும்னு என நினைத்தது எவ்வளவு முட்டள்தனம்.

ராஜாராம் வாத்தியார் நல்ல ஆஜானுபாகுவான தோற்றமுள்ளவர். தொழிலதிபர், ஒரு ஆத்ம திருப்திக்காக வேலைக்கு வருபவர். பையன்கள் படிப்பைவிட ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பவர். எங்கள் வகுப்பு ஆசிரியர்.

”யாரெல்லாம் இன்னும் ப்ரக்ரஸ் கார்டு திரும்பத் தரல?”

”எல்லோரும் குடுத்தாச்சு சார்”னு கோரஸாகச் சொன்னோம்.

“சரி இன்னைக்குக் குடுத்தவன் மட்டும் எந்திரி”ன்னாரு

வெங்கடேஷ் எந்திரிச்சு நின்னான்.

“ஏண்டா இவ்வளவு லேட்டு?”

“சார் அப்பாவும் அம்மாவும் ஊருக்குப் போயிருக்காங்க. வந்திருவாங்கன்னு பார்த்தேன். வரலை. அதான் அண்ணங்கிட்டக் கையெழுத்து வாங்கி வந்தேன்”

“என்னது அண்ணங்கிட்டயா? யாருகிட்டக் கேட்டு அப்படிச் செஞ்சே? எங்கிட்டக் கேட்டிருக்கணுமில்ல?”

“இல்ல சார் அப்பா இருந்திருந்தாக்கூட அண்ணஞ் சொன்னாத்தான் போடுவாரு”

கார்டை எடுத்துப் பார்த்ததும் அவருக்கு என்ன சந்தேகம் தோன்றியதோ தெரியவில்லை, “டேய் உண்மையைச் சொல்லு இது உங்க அண்ணன் கையெழுத்துத்தானா?”  எனக்கு பயத்தில் யூரின் வந்திடும் போல இருந்தது. பார்த்தியும் சுரேஷும் என்னையே குறுகுறுன்னு பார்த்தார்கள்.

“ஆமா சார்”னு கொஞ்சங்கூடப் பயப்படாமல் சொன்னான் வெங்கடேஷ்.

“அப்படின்னா ஒண்ணு செய், இது உங்க அண்ணன் கையெழுத்துத்தான்னு நாளைக்கு அவர்கிட்ட இருந்து ஒரு லெட்டர் வாங்கிட்டு வா”

“சரி சார்”

சண்முக நதி தாண்டியதும் ஓரத்தில் இருக்கும் தோப்பில் சைக்கிளை நிறுத்தினான் வெங்கடேஷ் ; மறுநாள். நாங்களும் நிறுத்தினோம்.

ப்ரக்ரஸ் கார்டில் கையெப்பமிட்டது தான்தான் என அவன் அண்ணன் எழுதியது போல் ஒரு லெட்டர் எழுதி எடுத்து வந்திருந்தான்.

அதில் நான் பாலசுப்ரமணியன் எனக் கையெழுத்திட்டேன்.

இந்த பஸ்ஸு சிங்காநல்லூர் போவுமோ?

 

”இந்த பஸ்ஸு சிங்காநல்லூர் போவுமோ?” என்ற குரல் கேட்டுத் திரும்பினான் ரகு.

”இது போவாது, நீ தின்னேலியா?” என்றான்

”ஆமா அண்ணாச்சி, பக்கத்துல கோவில்பட்டி”

“கோவில்பட்டில எங்கடே? நான் லட்சுமி மில் கோட்டர்ஸ்” ஆவலாகக் கேட்டான் ரகு

“ஸ்ரீனிவாச நகர் அண்ணாச்சி”

“அங்க யாரு மகண்டே நீ?”

“ராமையா இருக்காவள்லா அவுக மகன்.”

”சின்னவனாடே? உங்க அண்ணன் கஸ்தூரி நல்லா இருக்கானா? இப்ப எங்க இருக்கான்?”

“ஆமா.  அண்ணேம் இப்ப கொவைத்துல இருக்கான்”

“சரிடே இங்க எங்க வந்த ? மணி 10 ஆச்சு இப்ப”

”நீலிக் கோணாம் பாளையம் போகணும் அண்ணாச்சி. அங்கன எங்க அப்பாவுக்கு ஒரு ஃப்ரண்டு இருக்காவ, அவுக வேலை வாங்கித் தாரேம்னு சொல்லி இருக்காக”

”கடேசி பஸ்ஸு இப்பத்தாம் போகுது 10 நிமிஷம் ஆச்சு. சரி நீ ஒண்ணு பண்ணு ஏங்கூட வந்து ராத்தங்கிட்டு காலேல போ, நானே பஸ் ஏத்தி விடுறேன்”

இரவு எஸார்கேபி மெஸ்ஸில் நல்ல உணவும் வாங்கிக் கொடுத்து அவன் நன்றாக உறங்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறான்.

ரகு வழக்கமாகக் காலையில் 7.30 மணிக்குத்தான் எந்திரிப்பான். அன்றைக்கும் அதே மாதிரித்தான், ஆனால் அறை மட்டும் வித்தியாசமாக இருந்திருக்கிறது. வழக்கமாக ஹேங்கரில் தொங்கும் சட்டை பேண்ட்களைக் காணவில்லை.  இடதுபுறம் இருந்த இரு சூட்கேசுகளில் ஒன்றைக் காணவில்லை. அலறி அடித்து என்னென்ன காணமற்போயிற்று என லிஸ்ட் எடுத்திருக்கிறான். வாட்ச், மோதிரம், பர்ஸில் இருந்த பணத்தில் 300 குறைந்திருக்கிறது. பேண்ட் சர்ட்களில் நல்லவைகளாகப் பார்த்து எடுத்துச் சென்றிருக்கிறான். அதிக விலை கொடுத்து வாங்கிய ஜீன்ஸ் இரண்டும் கோவிந்தா.

என்னை அழைத்தான் போனில். சுருக்கமாக நடந்ததைச் சொன்னான். ”இரு வருகிறேன்” எனச் சொல்லி அரை நாள் லீவு சொல்லிவிட்டு அவன் அறைக்குச் சென்றேன்.

”முதல்ல உங்க அப்பாவுக்கு போனப் போட்டு ஸ்ரீனிவாசா நகர்ல ராமையாவப் பார்க்கச் சொல்லு” என்றேன்

”பார்த்து?”

”பார்த்து அவரோட மகன் சின்னவன எங்கன்னு கேட்கச் சொல்லுடா. அதுக்கப்புறம் மத்த விவரங்களைச் சொல்லலாம்” என்றேன். அவன் அப்பாவிடம் நானே பேசினேன், “அப்பா ஒரு சின்ன ஹெல்ப், நம்ம ஸ்ரீனிவாசா நகர் ராமையா மகன் சின்னவன் எங்க கம்பெனில வேலை கேட்டு வந்திருக்கான்.  காசு புழங்கும் வேலை. கொஞ்சம் பையன் எப்படின்னு விசாரிச்சுச் சொனீங்கன்னா நல்லா இருக்கும்.”

“சரிப்பா”

“முடிஞ்சா அவங்க வீட்டுல போன் இருந்தா என்னைக் கூப்பிடச் சொல்லுங்களேன் மத்தியானமா.”

“சரிப்பா, போன் இருந்தாக் கூப்பிடச் சொல்றேன் “

மதியம் இரண்டு மணிக்கு ராமையா அழைத்தார். “வணக்கங்க நான் ராமையா பேசுறேன்”

“வணக்கங்க. உங்க பையன் அங்க வந்தாரா?”

“இல்லையே அவம் வேலை தேடி அங்கதான வந்திருக்கான்”

”வேலை தேடி வந்ததெல்லாம் உண்மைதாங்க. வந்த இடத்துல ராத்திரி லேட்டாச்சுன்னு எம்ஃப்ரண்டு ரூம்ல தங்க வச்சிருக்கான். அவன் கொஞ்சம் காசையும் டிரஸ், வாட்ச் எல்லாம எடுத்துட்டுப் போயிட்டான்.  எங்க போயிருப்பான்னு தெரியுமா?”

“அய்யோ பாதரவே. இந்த முடிவானோட இதே எழவாப் போச்சே”என்றார். எனில் பையன் இதே வேலையாத்தான் திரிஞ்சிருக்கான். “போனக் கொஞ்சம் அவருகிட்டக் கொடுங்க” என்றேன்.

“அப்பா இவரு பையன் வேலை தேடி கோயமுத்தூருக்கு வந்திருக்கான். வந்த இடத்துல நம்ம ரகுவைப் பாத்து அவம் ரூம்ல ராத்தங்கி இருக்கான். காலேல பார்த்தா கொஞ்சம் டிரஸ், வாட்ச், காசு எல்லாம் எடுத்துட்டுப் போயிட்டான். அவரு பையனுக்கு இதே வேலதாம் போல அவரே சொல்லுதாரு அதை. நீங்க அங்கனயே இருங்க மொத்தம் எம்புட்டு ஆச்சுன்னு நானும் ரகுவும் கால்குலேட் பண்ணிச் சொல்றோம்”

“இந்தப் பயலுக்கு ஏம் இந்த வேண்டா வேலை, வெறுவாக்கெட்டவன்”

“விடுங்க நடந்தது நடந்து போச்சு. இனி ஆக வேண்டியதைப் பார்ர்ப்போம்”

மொத்தத் தொகையக் கணக்குப் பண்ணி அதில் கொஞ்சம் குறைத்து அவரிடம் வாங்கி விட்டோம்.

இது நடந்து 20 வருஷம் ஆச்சு. இப்பவும் நான் ரகுவுக்குப் போன் பண்ணினா ஹலோ சொல்லுவதற்குப் பதிலாக “இந்த பஸ்ஸு சிங்க நல்லூர் போவுமோ?”

*&^%$#@#$%^&*

 

 

அன்னமிட்ட கைகள் – 1.

86ல் ஒரு எலெக்ட்ரிக்கல் காண்ட்ராக்டரிடம் கொத்தடிமையாக வேலை பார்த்தேன். மாதம் 150 ரூபாய் சம்பளம. அதையும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அழுது மன்றாடினால்தான் தருவார். அறைத் தோழன் குரு ஒரு பம்ப் செட் கம்பெனியில் அப்ரசண்டியாக 400 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வந்தான். அறை வாடகையே ரூ.125.00 மிச்சக் காசில்தான் ஜீவனம். இருவரின் பெற்றோரும் உதவும் நிலையில் இல்லை. முதல் 10நாட்கள் 3 வேளை சாப்பிடுவோம். மதிய உணவு கூடுமானவரை அவரவர் அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்கள் சாப்பாட்டைப் பங்கிட்டுக் கொள்வாதாக இருக்கும். காலையும் மாலையும் மெஸ்ஸில்.  11-20 ஒரு நேரம் மட்டும் மெஸ். 25க்கு மேல் மதிய உண்வில்தான் காலம் தள்ளியதே. ஞாயிறு அல்லது விடுமுறை வந்தால் அதற்கும் வேட்டுத்தான்.

ஒரு ஞாயிறு மாலை சீனு வந்தான் அறைக்கு. இன்னொரு கொத்தடிமை,  ஆனால் வேலை செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லாத அளவுக்கு வசதியானவன். காண்ட்ராகடரிடம் ஒரு வருடம் வேலை பார்த்து அவர் சான்றளித்தால்தான் சி சர்டிஃபிகேட் என்ற அங்கீகார்ம கிடைக்கும் அதற்காகத்தான் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்வது.

வந்தவன் இளையராஜ பாட்டு கமலஹாசன் திரைப்படம் என உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தான். எங்கள் இருவரிடமிருந்தும் சுரத்தான பதில் வரவில்லை என்றதும் “ராஜ் பேண்டை மாட்டிட்டு எங்கூட வாடா.” என்றான்.

”எங்கடா?”

”நீ வாடா” என என்னை அவனது டிவிஎஸ் 50ல் அழைத்துச் சென்றான்.

வீட்டிற்குள்,  அவனது அறைக்கு அழைத்துச் சென்றவன் அமரச் செய்துவிட்டு அவனது அம்மாவிடம் ஏதோ பேசினான். பின் என்னுடன் வந்து புதிதாக வந்திருந்த இளையராஜா கேசட்டைக் காட்டி, “பாட்டுக் கேட்கலாமா?” என்றான். சரியெனச் சொல்ல பாடலை ஓடவிட்டான். 10 நிமிடத்தில் அவனது அம்மா வந்தழைக்க, “வாடா ” என டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றான்.

சுடச்சுட இட்லி , சட்னி சாம்பாருடன் காத்திருந்தது.

”இல்லை சீனு, குரு அங்க பசியோட இருப்பான். நான் மட்டும் எப்படி சாப்பிட?” என்றேன்.

”சாப்பிடு ராஜ், அவனுக்கும் கப்பில் போட்டுத்தரச் சொல்லி இருக்கேன் அம்மாவிடம்” என்றான்.

சங்கோஜத்துடன் சாப்பிட அமர்ந்தேன். என் சங்கோஜத்தைப் பசி வென்றுஎன்னைத் தின்றது.

பரிமாறும் கையை மட்டுமே பார்த்தவாறு சாப்பிட்டு முடித்தேன். கிட்டத் தட்ட 12 இட்லிகள். இப்பொழுது கடைகளில் கிடைக்கிறதே அது போன்ற ஜீரோ சைஸ் இட்லிகள் அல்ல. நல்ல வெங்கலப் பானையில் வார்க்கப் பட்டவை. கிட்டத்தட்ட 3 இட்லிகளுக்குச் சமம்.

அதன் பிறகு வாழ்க்கையில் எத்தனையோ முறை வேறு வேறு சுவைகளில், இடங்களில். சூழ்நிலைகளில் இட்லி சாப்பிட்டிருந்தாலும் அந்த 12 இட்லியை மறக்கவே முடியாது.

ஒரு கேரியரில் குருவுக்கும் 12 இட்லிகள், சட்னி சாம்பார் அனைத்தையும் வைத்து ஒரு வயர் கூடையில் வைத்து “ஆட்டாமல் கொண்டு போ சாமீ” என்று அவனது அம்மா சொல்லி அனுப்பிய காட்சி காலத்தில் உறைந்து இன்னும் கண்முன்னால் நிற்கிறது.