எழுத்துலகில் முத்திரை பதித்த எழுத்தாளர்களின்(ஜெயகாந்தன், சுஜாதா) பாதிப்போடு எழுதவந்து பின் தங்களுக்கான தனி நடையைக் கைகொண்டு வெற்றி பெற்றவர்கள் ஏராளம். வா மு கோமு தனக்கெனத் தனி எழுத்துவகை மூலம் (பெரும்பாலும் பாலியல் சார்ந்த) தனி இடத்தைப் பிடித்தவர். அவரது கள்ளி நாவலும் சிறுகதைத் தொகுப்பும் சொல்லத் தக்க படைப்புக்கள்.
ஆனால் எல்லாப் பிரபலங்களுக்கும் நேரும் விபத்து அவருக்கும் நேர்கிறது. ஏற்கனவே எழுதப்பட்ட ஜீரோ டிகிரியை அசலாகக் கொண்டு இவர் ஒரு நகல் படைக்க முயன்றிருக்கிறார். ஏமாற்றமே மிஞ்சுகிறது.
”இந்த நாவலைப் படிக்கும் நீங்கள்” என்று சாரு ஒரு லிஸ்ட் கொடுத்திருப்பார், அதே லிஸ்ட் இந்தப் படைப்பிலும் வேறு தலைப்பில்.என்னதான் சாரு இவரைத் தன் வாரிசாக(இவர் விருமபாவிட்டாலும்) அறிவித்தாலும் அப்படியே காப்பி என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். கற்பனை வறட்சியா?
ஜாங்கிரி, லட்டு, பாதுசா, மிக்சர், முருக்கு, பக்கோடா போன்ற இனிப்பு மற்றும் காரங்களை ஒன்றாகக் கலக்கி சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்நாவல். ஒரு வேளை அந்த சுவை பிடித்தவர்களுக்குப் பிடிக்கலாம்.
முன்பே வெளியான சாந்தமானியும் இன்ன பிற காதல் கதைகளும் படைப்பே ஒரு அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த ஒன்று. அதன் நீட்சி இந்தப் படைப்பிலும் உண்டு. இதை விட்டு வெளியே வாருங்கள் கோமு. நீங்கள் சார்ந்திருக்கும் சமுதாயம் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது இதுவல்ல. வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்புக்களைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இப்படி வலையிலிருந்து தரவிறக்கம் செய்தவைகளை அல்ல.
நாவலின் ஒரு அத்தியாயம்கூட நாவலின் இரண்டாம் தலைப்பான “நாவலல்ல கொண்டாட்டம் ” என்பதற்கு நேர்மையாக இல்லை. ஒருவேளை இரண்டாம் தலைப்பின் முதல் வார்த்தைதான் தாங்கள் சொல்லவந்ததோ?அல்லது லேஅவுட் டிசைன் செய்தவர் எழுத்துபிழையாக திண்ட்டாட்டம் என்பதைக் கொண்டாட்டம் என எழுதிவிட்டாரோ?
நாவலாசிரியர்கள் பதிபாளர்களைக் கெடுக்கிறார்களா அல்லது பதிப்பாளர்கள் நாவலாசிரியர்களைக் கெடுக்கிறார்களா தெரியவில்லை. இரண்டுமே அபாயம்தான். என்ன தைரியத்தில் இப்படி ஒரு முயற்சி செய்தீர்கள் என்பதை வேறெங்காவது தெரியப்படுத்தினால் நலம்.
உயிர்மை வெளியீடான இந்நாவல் 246 பக்கங்கள் கொண்டது விரயம் ரூ 150
நாவலல்ல திண்டாட்டம்