கொங்கு வட்டார வழக்கில் எழுதுவதில் பெருமாள் முருகன், மணல்வீடு ஹரிகிருஷ்ணன் வரிசையில் வைத்துப் பாராட்டத் தக்கவர் என்.ஸ்ரீராம்.
கொங்கு வட்டார வழக்கு என்றாலும் கோவைப் பகுதியில் பேசுவதும், ஈரோட்டுப் பக்கம் பேசுவதும் சற்று வித்தியாசமாக இருக்கும். இவர் தாராபுரத்துக்காரர் என்பதால், அந்தப் பகுதி கொங்கு வட்டார வழக்கு இவரது கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.
14 கதைகள் கொண்ட இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் அனைத்தும் கணையாழி, தீராநதி, படித்துறை போன்ற சிற்றிழிதழ்களில் ஏற்கனவே வெளியானவை. அதில் சில பரிசு பெற்ற கதைகள்.
தலைப்புக் கதையான வெளிவாங்கும் கதை, தன் அப்பாவிற்கெதிராக மகன் எடுக்கவிழையும் ஆயுதம் பற்றியது. நம் எல்லோருக்குள்ளும் அத்தகைய வெறுப்பு அப்பா மீதிருந்ததும் பின்பு அது நீர்த்துப் போனதையும் வெளிக்காட்டும் கதை.
என்றாலும் எனக்குப் பிடித்த கதை நெட்டுக்கட்டு வீடுதான். வேலைக்காரர்களிடம் நாம் வரம்பற்று, நம்மை மீறிப் பேசிவிடுவதும் அதன் பின்விளைவும். செல்லியக் கவுண்டர்களையும், ராமையாக் கம்மாளனையும் நம் தினவாழ்வில் எதிர்கொள்கிறோம், வேறுவேறு விதங்களில்.
கோழி திருடுபவன் பற்றிய “ஆதாயவாதிகள்” சிறுகதை என் பால்யவயதில் நான் பார்த்துப் பிரமித்த பண்டாரப் பெரியப்பாவை ஞாபகமூட்டியது. தலையாரி வேலை பார்த்தவர். என்றாலும், கோழி திருடுவது அவரது பிறவிக் குணம். ஈரச்சாக்கைப் போட்டுத் தொழுவத்தில் இருக்கும் கோழியைச் சத்தமில்லாமல் லவட்டுவதில் சூரர்.
கவுண்டர்களுக்கும் தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கும் இடையே காலகாலமாக ஓடிக் கொண்டிருக்கும் பகை, சிறுகதைகளின் அடிநாதமாக வெளிப்படுகிறது. ”என்னைக்கும் எரும மேல ஏறினா சவாரி, எஜமாங்க மேல ஏறின ஒப்பாரி, இனிமேலவது புரிஞ்சு நடந்துங்கடா” என்ற வரிகளில் தெறிக்கும் வன்மமும் குரோதமும் விவரிக்க இயலாதது. உன்மையில், இந்த ஏற்றத் தாழ்வுகளில் இருந்து அவர்களை விடுவிக்காதவரை சமஉரிம, சமூகநீதி என்பதெல்லாம் வெறுமனே பெயரளவில்தான்.
நகரவாழ்வின் தினசரி நெருக்கடிகளிலிருந்து, ஓய்வெட்டுத்து ஆசுவாசப்படுத்த சொந்த ஊருக்குப் போவது போன்ற அனுபவத்தைத் தருகிறது இக்கதைகள். அந்த மண்ணும் மக்களும் அச்சு அசலாய் நம் கண்முன்னே. தாமரை நாச்சி, சிவபாலக் கவுண்டர், தரகுக்காரன், முனி போன்றவர்களையும் தாராபுரம் மண்ணையும் தரிசித்து வரலாம்.
You must be logged in to post a comment.