.
அன்புள்ள செல்வராகவன்,
எதுக்கய்யா இப்படி ஒரு படத்தை எடுத்தீர்கள்? ஆளாளுக்குப் பிரிச்சு மேய்கிறார்கள். கொஞ்ச நாளாக டல்லடித்துக் கொண்டிருந்த பதிவுலகிற்கு நல்ல வேட்டை.
சென்ற வருடம் மொத்தம் 99 தமிழ்ப் படங்கள் வெளியாகி உள்ளனவாம். ஒன்றைக் கூடவா நீங்கள் பார்க்கவில்லை. அந்தப் படங்கள் அனைத்திலும் நிறைந்து வழிந்த லாஜிக் என்ற வஸ்து உங்கள் படத்தில் ஒரு இடத்தில்கூடத் தென்படவில்லையே? அது ஏனய்யா? குறைந்த பட்சம் லாஜிக் என்ற வார்த்தையைக் கூட ஒரு பாத்திரமும் பேசவில்லையே. அது ஏன்?
அது ஏனய்யா வியட்னாமுக்கு விமானத்தில் செல்லாமல் கப்பலில் செல்கிறாகள். விமானத்தில் செல்லலாமே? என்ன மூன்று மடங்கு செல்வாகும் என்று யோசிக்கிறீர்களா? அதுதான் புனைவுன்னு முதலிலேயே கார்டு போட்டாச்சே. அமெரிக்காவில் இருந்து ராணுவ விமானங்களை வாடகைக்கு பிடித்துப் போனார்கள் எனக் காட்ட வேண்டியதுதானே?
காரின் ஜன்னல் வழியாக கார்த்தி இறங்க வேண்டிய அவசியம் என்ன? கார் கதவு ரிப்பேர் என எங்காவது கார்டு போட்டீரா? இல்லை கதாபாத்திரம்தான் எங்காவது சொல்லுகிறதா? 35 கோடி செலவில் படம் எடுத்தும் அவருக்கு ஒரு சட்டை வாங்கித் தர மனதில்லையே உமக்கு? என்ன ஆளய்யா நீர்?
கடலுக்குள்ளிருந்து மனிதர்களைக் கவ்விப்பிடிப்பது என்ன என கார்டு போட்டீரா? என்ன என நாங்களே முடிவு செய்து கொள்ள வேண்டும் அவ்வளவுதானே?
பாம்பு வரும்னு ஆண்ட்ரியாவுக்கு எப்படித் தெரியும்? அவங்க என்ன படிச்சிருக்காங்க? எங்க படிச்சாங்க? எதையுமே சொல்லவில்லை. காலேஜ் அட்மாஸ்பியரில் ஒரு குத்துப் பாட்டு வைத்திருக்கலாம்? வடை போச்சே!
பாம்புங்க எல்லாம் ஏன் மொத்தமா வருது? தனித்தனியா வந்து ஹீரொகிட்ட அடிவாங்குற வில்லன் அடியாட்கள் மாதிரி ஒண்ணொன்னா அனுப்பியிருக்கலாமே?
தண்ணிக்குள்ளே விழுந்தவங்க எப்படி 3 பேரும் ஒண்ணா ஒரே இடத்துல இருக்காங்க? குறைந்தது 10 மீ இடைவெளி வேணும்னு அரசுப் பேருந்துகளின் பின்புறம் எழுதியிருப்பதைப் படித்ததில்லையா?
புதைகுழி மேல் நிழல் விழுந்தால் புதைகுழி ஃப்யூசாகிடும்னு எந்த புத்தகத்தில் இருக்கு? நீங்க சொன்னா நாங்க நம்பனுமா?
அவ்வளவு பெரிய கல்லை எப்படி உருட்டினார்கள்? அதுவும் பசியுடன் இருக்கும் மூவரும்? இதெல்லாம் ஆங்கில படத்தில் ஓக்கே. தமிழ்ப் படத்தில் செய்தால் நாங்க கேள்வி கேப்பம்ல?
இப்படி அடுக்கடுக்கா கேள்வி கேட்க இடம் கொடுத்து ஒரு படத்தை எடுத்த உங்களை என்ன செய்ய?
அடுத்த படம் பாகம் இரண்டு எனச் சொல்லி இருக்கிறீர்கள். நான் சொல்லுவது போல் நடந்தால் நீங்களும், உங்கள் படமும் தப்பிக்கலாம்.
1. ஸ்க்ரிப்டை எழுதி எங்களிடம் கொடுக்க வேண்டும். எங்களிடமுள்ள பதிவர்களில் சிலரைக் கொண்ட வலைக்கமிட்டி அமைத்து, அதில் லாஜிக் உள்ளதா எனத் தரப் பரிசோதனை செய்து தேர்ந்தெடுக்கப்பட்டால் நீங்கள் அதைத் திரைப் படமாக எடுக்கலாம்.
2. படம் எடுக்க எவ்வளவு கால அவகாசம் எனச் சொல்ல வேண்டும். அதிலிருந்து தாமதமாகும் நாள் ஒவ்வொன்றிற்கும் 36% வட்டி வசூலிக்கப்படும். 12% நிர்வாகச் செலவுகளுக்கு வைத்துக் கொண்டும் மீதி 24% தயாரிப்பாளருக்கு வழங்கப் படும். தவறும் பட்சத்தில் உங்களுக்கு வழங்கப் படும் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வலைக் கமிட்டியாருக்கு அதிகாரம் உண்டு.
3. தயாரிப்பாளர் தரும் பணம் எவ்வளவு? என்ன வகையில் அதைச் செலவு செய்தீர்கள் என நாளதுவாரியாக கணக்கை எங்களிடம் காண்பிக்க வேண்டியது, அதைக் வலைக் கமிட்டியார் ஆய்வு செய்து தனிக்கை செய்தபின் அடுத்த கட்டப் பணம் வழங்கப் பரிந்துரைக்கப் படும்.
4. ஒரு(வழியாகப்) படம் எடுத்து முடிந்ததும் வலைக் கமிட்டியிடம் திரையிட்டுக் காட்ட வேண்டியது. வலைக் கமிட்டியார் அதிருப்தி தெரிவிக்கும் பட்சத்தில் வெளியிடத் தடை விதிக்கப் படும்.
5. வலைக் கமிட்டியார் ஒரு வேளை திருத்தங்கள் ஏதேனும் பரிந்துரைத்தால் அதை உம் சொந்தச் செல்வில் எடுக்க வேண்டும். வலைக் கமிட்டியோ அல்லது தயாரிப்பாளரோ பொறுப்பேற்கமாட்டார்கள்.
6. திரைப்படம் வெளியாகி அதிருப்தியைச் சம்பாதிக்கும் பட்சத்தில், வலைக் கமிட்டி ஒன்று கூடி நீங்கள் மேலும் திரைப்படம் எடுக்கலாமா, அதற்கு உங்களுக்குத் தகுதி இருக்கிறதா என விவாதித்து முடிவு செய்யும்.
குறிப்பு : இந்தக கட்டுப்பாடுகள் நீங்கள் எடுக்கும் படத்திற்கு மட்டும்தான். பிறர் எடுக்கும் படத்தைப் பற்றி கவலைப் பட மாட்டோம். முடிந்தால் ஆங்கிலத்தில் எடுத்துத் தமிழ் சப் டைட்டிலுடன் வெளியிடுங்கள் அப்பொழுது லாஜிக் பார்க்க மாட்டோம். கேமரூனெல்லாம் எங்களிடம் ஸ்கிரிப்ட்டைக் காட்டினார் தெரியுமா? வரவு செலவுக் கணக்கெல்லாம் நாங்கள்தான் ஆடிட் செய்தோம்.
…………………………………………………………. வேலனின் கடிதம் தொடரும்
.