அக்பர் அரசவையில் ஒரு நாள் விவாதமொன்று எழுந்தது; பூமியின் மையப் புள்ளி எதுவென. எவருக்கும் தெரியவில்லை, பீர்பாலும் அரசவையில் இல்லை அச்சமயம். பிறரெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர், பீர்பால் வசமாக மாட்டப் போகும் வினா இதுவென.
சற்றுத் தாமதமாக சபைக்கு வந்த பீர்பால் உள்ளே நுழைகையிலேயே கண்டுகொண்டார் ஏதோவொன்று தன்னை நோக்கி எய்யப்படுமென. கேள்வியும் அவரை நோக்கி வீசப்பட, சட்டென வெளியேறினார். விடை தெரியாமல் வெளியேறினார் என அனைவரும் ஆர்ப்பரித்திருக்க, மீண்டும் உள்ளே வந்தவர் வெளியே அழைத்தார் அரசரை.
தரையில் தான் ஆணியறைந்த ஒரு இடத்தைக் காட்டி, “ இதுதான் பூமியின் மையப்புள்ளி ” என்றார் அரசரிடம். திகைத்த அரசர் “எப்படி?” என வினவ.
“இல்லையென மற்றவர்களை நிரூபிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றார்.
இதைப் போலத்தான் இருக்கிறது, ஒரு திரைப்படத்தை ஆளாளுக்கு அலசிப் பிழிந்து காயப் போட்டிருப்பது. இதுதான் மையப்புள்ளி என அவரவருக்கு விருப்பமான இடத்தில் ஆணி அறைந்து கொண்டிருக்கிறார்கள். தமிழன் மலையாளி என்ற புது கோணத்தை யாரும் சிந்திக்கவில்லை என அறச்சீற்றம் கொண்டிருக்கிறார் ஆசிப்.
மொத்தத்தில் உ போ ஒருவன் சீரியஸ் படமாக இருக்குமென நினைத்தால் நல்ல காமெடிப் படமாக ஆகிவிட்டது.
***********************************************************************************
அழகிய பெரியவனின் நெரிக்கட்டு சிறுகதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. நல்ல மொழி நடையுடன் மூன்றாவது வரியில் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறார். கடலூர் பகுதிகளில் கண்மணி குணசேகரன், தங்கர் பச்சான் (குடி முந்திரி- படித்திருக்கிறீர்களா?) இருவரையும்தான் இதுவரை படித்திருக்கிறேன். அழகிய பெரியவன் எழுத்து என்னை ஈர்த்து விட்டது.
தான் காதலிக்கும் பெண்ணின் தாயார் கரகம் ஆடுபவள் என்பதால் கரகாட்டத்தைத் தவிர்க்கும் முகமாக வெளியூர் சென்றுவிடும் கதை நாயகன், திரு விழா முடிந்திருக்குமெனத் திரும்பி வர, அப்பொழுது ஏற்படும் களேபரத்தில் ரசாபாசமாகி விடுகிறது. மிச்சத்தை நீங்களே படியுங்கள் நல்ல வாசிப்பனுபவம்.
முன்பே வேறு சமயம் தலைப்புக் கதையான நெரிக்கட்டை வாசித்திருக்கிறேன். எனினும் மொத்தமாக வாசிக்கையில் எழுத்தாளரின் ஆளுமை வெளிப்படுகிற்து. யுனைட்டட் ரைட்டர்ஸ் வெளியீடான இச்சிறுகதைத் தொகுப்பின் விலை 50 ரூபாய் மட்டுமே.
**************************************************************************************
விகடனில் வந்த அந்நியன் கவிதைக்கு அழைத்துப் பாராட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி. அதைவிட மோசமான அனுபவம் சமீபத்தில். எனது பக்கத்து வீட்டை வாங்கியவர்கள் சென்னையில் இருக்கிறார்கள். வாங்கி மாதக்கணக்காக ஆகியும் கிரகப் பிரவேசம் நடத்தப்படாமலே இருந்தது. ஒரு நாள் இரவு 11.00 மணிக்கு பேச்சுச் சத்தம் கேட்கவே வெளியே சென்று பார்த்தால் வீட்டின் உரிமையாளரும் இன்னும் இருவருமிருந்தனர்.
”காலையில் கிரகப் பிரவேசம் செய்கிறோம்” என்றார்.
“பால், தண்ணி எது வேண்டுமானாலும் கேளுங்கள்” என்றேன்.
“இல்லை சார் எவ்வரிதிங் இஸ் கம்ப்லீட்லி அர்ரேன்ஜ்டு” என்றார்.
காலை 6 மணிக்குப் பார்த்தால் யாரையும் காணோம். 4 மணிக்கே பூஜை செய்து விட்டு 6:30 இண்டெர் சிட்டியைப் பிடித்துச் சென்னை சென்றுவிட்டார்களாம்.
அடப் பாவிகளா வீடு கிரகப் பிரவேசம் என்பது நண்பர்கள் உறவினர்கள் எல்லோரும் சேர்ந்திருந்து மகிழ வேண்டிய ஒரு விசேசமல்லவா? அவர்கள் வாழ்த்துக்களும் ஆசிகளும் வேண்டாமா?
**************************************************************************************
காமிக்ஸ் பிரியர்களால் இரும்புக்கை மாயாவியையும், சி ஐ டி லாரஸையும் ஜானி நீரோவையும் மறக்க முடியாது. அ கொ தீ க பற்றி உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? (கா கா தே கா இன்னும் இருக்கிறாதா மிஸ்டர் குமாரி ஆனந்தன்?)
காமிக்ஸ் பிரியர்களுக்கான வலைத்தளம் இதோ.
**************************************************************************************
நேசமித்ரனின் கவிதை ஒன்று இம்முறை.
வார்த்தைகளை வசக்கிப் போட்டுக் கவிதை நெய்து கொண்டிருக்கும் காலத்தில் வார்த்தைகள் தானக வந்து விழுந்தாற்போல நேர்த்தியா இருக்கிறது.
பிறை மீதேறி
உன் பெயர் சொல்லி தீக்குளிப்பேன் என்றவன்
நுரைக்க நுரைக்க கழிவறையில் ஆணுறை கழற்றிய போதே
மாற்றி விட்டான் அலைபேசி எண்ணை…
வருத்தம் எதுவும் இல்லை
உவந்து கொடுத்தேன்
தேவையாய் இருந்தது எனக்கும்
ஆனால் முத்தத்தை எச்சிலாக்கிய நொடி
விடைபெறுகையில் வேசி மகன்
வேறு பெயர் சொல்லி விளித்ததே...!
நேசமித்ரன்
You must be logged in to post a comment.