உயிலின்படியே பாகம் பிரித்தாயிற்று. என்றாலும் பொதுவில் நிற்கும் மாமரத்தின் பலனை யார் அனுபவிப்பது என்பதில் சிக்கல்.
அப்பா, “எலேய் என்ன ரெண்டு பேரும் ஏம்லே எசலுதிய? ஊர்ல என்னல சொல்லுவானுவோவோ? பாண்டியண்ணாச்சி பசங்க அடிச்சிக்கிட்டு
பொரளுதானுவோன்னுதானே? உங்காமத் திங்காம உங்களுக்குன்னு சம்பாதிச்சு வச்சுட்டுப்போன உங்கப்பனுக்குக் கெட்ட பேர ஏம்லே உண்டாக்குதிய?” என்றும் சொல்லிப் பார்த்தார்.
கடைசியில் மரத்தை குத்தகைக்கு விட்டு பணத்தைச் சரிபாதியாக வைத்துக் கொள்வது என்று முடிவானது. பகை, நெருப்பு, கடன் மூன்றையும் மீதம் வைக்காமல் தீர்க்க வேண்டும் என்பது உண்மையாகி விட்டது.
தம்பியின் தொந்திரவு தாங்க முடியாமல், நிலத்தை விற்றுவிட்டு மாமனார் ஊரில் நிலம் வாங்கி பாடுபடுவதாகத் திட்டம், அண்ணனுக்கு. தம்பி நிலை ஆப்பசைத்த குரங்கு. சொந்த அண்ணனையே சகிக்க முடியாதவனா மாற்றானை சகிப்பான்? ஊர் முழுவதும் கடன் வாங்கி, தானே வாங்கி விட்டான். என்றாலும், விவசாயம் செய்யக் கை முதல் இல்லாமலும் வட்டி கட்ட முடியாமலும் நொடிந்து விட்டான். அண்ணனும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. புது இடவாகு புடிபடவில்லை. வேலையாட்களும் சரியாக அமையவில்லை.
இது தொன்றுதொட்டதுதான். நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் போரிட நேர்கையில், கோவூர் கிழார் பாடியதும் இதைத்தான்,
போர்க்களத்தில் நிற்பது, வேப்பமாலை அணிந்த பாண்டியனும் அல்லன், பனையிலை அணிந்த சேரனும் அல்லன். ஒரு பக்கம் ஆத்தி மாலை அணிந்த நீ. உன்னை எதிர்த்து ஆத்தி மாலை அணிந்த உன் சகோதரன்.
உங்கள் இருவரில் ஒருவர் தோற்றாலும் சோழன் குடி தோற்றதாக ஊர் பேசுமே? மாறாக இருவருமே வெற்றி கொள்ளும் வகையில் போரின் நியதியும் இல்லையே. நீங்கள் செய்வது உங்கள் குலத்திற்கு அழகில்லை.
உங்கள் அழிவை எதிர்பார்த்துத் தங்கள் தேர்களை அலங்கரித்துக் காத்திருக்கு இதர மன்னர்களுக்கு உங்கள் செயல் உடல் பூரிப்பை அளிக்கிறது.
இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே
ஒருவீர் தோற்பினும் தோற்பநும் குடியே
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்
குடிப்பொருள் அன்று நும் செய்தி கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே.
You must be logged in to post a comment.