Month: February 2014

நித்ரா

சித்தார்த் பரதன் இயக்கி நடித்திருக்கும் நித்ரா திரைப்படம், அவரது தந்தை இயக்கத்தில் அதே பெயரைக் கொண்டு வெளியானதின் நவீன வடிவம். 

கச்சிதமான திரைக்கதை, கண்ணுக்கினிய காட்சியமைப்பு, நேர்த்தியான இயக்கம், நடித்தவர்களின் நிறைவான பங்களிப்பு எனத் தவறவிடக்கூடாத படம்.Image

அடையாளமின்றித் தவித்தல் ஒருவித அவஸ்தை எனில் தவறான அடையாளத்துடன் வாழநேர்வது கொடுமை. தன் வாழ்வில் நேர்ந்த அதிர்ச்சி ஒன்றின் காரணமாக மனநிலை தவறி வாழ நேர்கிறது சித்தார்த்துக்கு, இரண்டு வருடங்கள் மட்டுமே. அதன் பின் அதிலிருந்து மீண்டு மற்றவர்கள்போல் வாழ அவர் எடுக்கும் பிரயத்னங்களும், அதற்கு முட்டுக்கட்டையாக வரும் மற்றவர்களின், குத்தல் பேச்சும், சுட்டிக் காட்டுதலும் எனத் தன்னை மீட்கப் போராடுவதே கதை.

தான் காதலித்தவளையே கைபிடித்தாலும், எதுவும் சுலபமாக இல்லை அவருக்கு. ஒரு கட்டத்தில் எல்லோரும் தன்னையே கவனிக்கிறார்கள், தன்னைக் குறித்தே பேசுகிறார்கள், ஏளனம் செய்கிறார்கள் என்ற பிம்பத்தைத் தன்னுள்ளே ஏற்படுத்திக் கொண்டு மேலும் மேலும் சிக்கலை ஏற்படுத்திக் கொள்கிறார். 

எப்படி மீள்கிறார் என்பதே கதை. 

சித்தார்த், ரிமா கலிங்கல், ஜிஸ்னு, தலைவாசல் விஜய், கேபிசிஏ லலிதா என முக்கிய நடிகர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

சாலக்குடி வனப்பகுதியைக் கேமிரா அள்ளி அள்ளிப் பருக்கத் தருகிறது. ஒளிப்பதிவாளர் தாகிருக்கு ஒரு சல்யூட்.

மலையாளத்திரையுலகின் புது அலை  ,வினீத் ஸ்ரீனிவாசன், கோபி முரளி, சித்தார்த் பரதன் போன்ற வாரிசுகளின் பங்களிப்பால் செறிவுறுகிறது.
 

அம்மருந்து போல்வாரும் உண்டு

பரோடாவில், இரண்டு நாள் பயிலரங்கு; 12 பேர் பங்கேற்றோம். ஆரம்பம் முதலே அந்தப் பெண் வெகு ஈடுபாட்டுடனும் பங்கேற்றார். 32 அல்லது 33 வயதிருக்கக்கூடும். தனது துறையின் தேவைகள் மற்றும் சிரமங்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார்.

மதிய உணவின் போது அவரருகே அமர்ந்து மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன். வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் இந்தியக் கிளையில் பணி, வேலை நேரமும் அவர்களை அனுசரித்து மதியம் 2 மணியில் இருந்து இரவு 10 மணி வரை.

அவரது பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அடுத்ததாக,

“எத்தனை குழந்தைகள்?” என்றேன்

“மூன்று”

“என்ன படிக்கிறாங்க?”

“பெரியவ ஒன்பது, அடுத்தவ அஞ்சு சின்னவ ரெண்டு”

”வேலைக்குப் போயிட்டா குழந்தைகளை யார் பாத்துப்பா?”

காலையில் குழந்தைகளைத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு இரவு நேரச் சாப்பட்டையும் தயார் செய்து வைத்துவிடுவாராம், குழந்தைகள் மாலை வந்து தாங்களே தயாராகி உணவையும் உண்டு அம்மாவுக்காகக் காத்திருப்பார்களாம்.

“உங்க வீட்டுக்காரர் என்ன பண்றார்?, இதுல எல்லாம் உதவியா இருக்க மாட்டாரா?”

“அவர் இல்லைங்க இறந்து இரண்டு வருடங்கள் ஆச்சு”

“அய்யோ சாரிங்க. எப்படி பெண் குழந்தைகளைத் தனியாக விட்டுட்டு? கூடத் துணைக்கு யாரும் இல்லையா?”

“அம்மா, தங்கச்சி கூட இருக்காங்க, அவளுக்கு முடியலை. அப்பா இல்லை, அவர் போனதுக்கப்புறமா அவங்க சைடு சப்போர்ட்டும் இல்லை”

“எப்படி சமாளிக்கிறீங்க?”

“எங்க வீட்டு உரிமையாளர் குடும்பம் ரொம்ப நல்ல மாதிரிங்க. என் குழந்தைகளை அவங்க பேரக்குழந்தைகள் மாதிரிப் பாத்துக்கிடுவாங்க. அவங்க இல்லைன்னா நான் மிகவும் சிரமப் பட்டிருப்பேன்”

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன்பிறவா
மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரு முண்டு

மூதுரை – 20

முதல் வரியில், உடன்பிறந்தார் மட்டுமே சுற்றத்தார் என்றிருக்க வேண்டாம் என்று மாற்றிவிட்டு, வரிகளைக் கொஞ்சம் மாத்திப் போட்டுப் படிக்கலாம்.

நம்முடன் பிறந்தே கொல்லும் வியாதிக்கு மருந்து நம்முடன் பிறக்காத மலையில் வளருகிற மூலிகைகளாகும். அதைப் போலவே, நமக்குச் சுற்றத்தார் என்றால் உடன் பிறந்தவர்கள் மட்டுமல்ல. நம்முடன் பிறந்தவர் அல்ல என்றாலும், தூரத்து மலையில் வளரும், பிணி தீர்க்கும் மருந்தைப் போன்றவர்களும் உண்டு.

உருவு கண்டு எள்ளாமை

kullan

”ஜப்பான் எங்க? இன்னும் வரலையா?”ன்னு கேட்டப்ப எனக்கு எதுவும் புரியவில்லை. கேட்டது அப்பாவின் மேலாளர். நான் அப்பாவைக் காண அவரது அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன்.

”இப்ப வந்திருவாப்டி”ன்னு அப்பா சொல்லும்போது இன்னும் குழப்பம்.

சிறிது நேரத்தில் வந்து சேர்ந்த மனிதர் 4 அடிக்கும் குறைவாகவே இருந்தார். நல்ல சிவப்பு. குறுகிய கண்கள். என்னுடன் படிக்கும் வசந்தியின்  அப்பா.

கடகடவென்று அவருக்கு ஏப்பித்திருந்த வேலைகளைச் செய்து முடித்தவிதத்ததையும், இனிச் செய்ய வேண்டியவைகளையும் சொன்னார். சிறிது நேரம் சென்ற பின், “இவருக்கு ஏன் ஜப்பான்னு பேரு?” என அப்பாவிடம் கேட்க, “ஆளு குள்ளமா இருக்காருல்ல, அதான்”

எனக்கு வருத்தமாகவே இருந்தது. வசந்தி நல்ல உயரம், அவள் அம்மா மாதிரி எனப் பின்னாளில் இருவரையும் ஒரு சேரப் பார்த்தபோது தெரிந்தது.

எட்டாம் வகுப்பில் சாந்தி டீச்சர் மாறுதலில் வந்து சேர, எங்கள் படிப்பு சற்று உருப்பட்டுவிடுமென்ற நம்பிக்கை வந்தது. ஒரு நாள் வகுப்பில், ”யார் உங்கள் ரோல் மாடல்?” எனக் கேட்க ஆளாளுக்கு ”ஜெய்சங்கர், முத்துராமன்” என சினிமா நடிகர்கள் பெயரைச் சொல்ல, வசந்தி, ”எனக்கு எங்கப்பாதான் ரோல் மாடல் டீச்சர்” என்றாள்

“குட், அவருகிட்ட என்ன பிடிக்கும்?”

”டீச்சர், அவரு குள்ள உருவம், அத வச்சு மத்தவங்க கிண்டல் பண்ணுவாங்க. ஏன் என்னைக்கூட இவனுக எல்லாம், அதச் சொல்லிக் கிண்டல் பண்ணுவாங்க. ஆனா அவரு அது பத்தி ஒரு நாள்கூட வருத்தப் படமாட்டாரு. கேட்டா, நம்ம வேலையக் கரெக்டா செஞ்சா உருவம் என்னடா செய்யும்? என்னைவிட உயரமா ஒண்ணுமே செய்யாம இருக்கதவிட நான் எவ்வளவோ பரவாயில்லை அப்படின்னு சொல்லுவாரு. எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்”

 மடல்பெரிது தாழை; மகிழினிது கந்தம்

உடல்சிறியா ரென்றிருக்க வேண்டா – கடல்பெரிது

மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல்

உண்ணீரு மாகி விடும்.

-மூதுரை(12) – அவ்வை

 தாழை மடல் மிகப் பெரியது, ஆனால் அதனுடன் ஒப்பிடும்போது, மிக மிகச் சிறியதாக இருக்கும் மகிழம்பூ, நல்ல வாசம் வீசுகிறது. அதைப் போலவே கடல் மிகப் பெரியது என்றாலும் அதன் நீரைக் குடித்துத் தாகம் தீர்க்க இயலாது. அதே சமயம், கடற்கரையோரம் சிறு ஊற்றில் கிடைக்கும் நீரோ தாகம் தீர்க்கவல்லது.

உடலின் அளவை வைத்து ஒருவரைப் பெரியவர், சிறியவர் எனப் பாகுபடுத்துதல் வேண்டாமே.

ஐந்து சுந்தரிகள் என்ற மலையாளப் படத்தில் வரும் குள்ளனும் மனைவியும் பகுதியைப் பார்க்கும்போது ஜப்பான் இல்லை இல்லை ஆறுமுகம் சார் ஞாபகம் வந்தது.