சித்தார்த் பரதன் இயக்கி நடித்திருக்கும் நித்ரா திரைப்படம், அவரது தந்தை இயக்கத்தில் அதே பெயரைக் கொண்டு வெளியானதின் நவீன வடிவம்.
கச்சிதமான திரைக்கதை, கண்ணுக்கினிய காட்சியமைப்பு, நேர்த்தியான இயக்கம், நடித்தவர்களின் நிறைவான பங்களிப்பு எனத் தவறவிடக்கூடாத படம்.
அடையாளமின்றித் தவித்தல் ஒருவித அவஸ்தை எனில் தவறான அடையாளத்துடன் வாழநேர்வது கொடுமை. தன் வாழ்வில் நேர்ந்த அதிர்ச்சி ஒன்றின் காரணமாக மனநிலை தவறி வாழ நேர்கிறது சித்தார்த்துக்கு, இரண்டு வருடங்கள் மட்டுமே. அதன் பின் அதிலிருந்து மீண்டு மற்றவர்கள்போல் வாழ அவர் எடுக்கும் பிரயத்னங்களும், அதற்கு முட்டுக்கட்டையாக வரும் மற்றவர்களின், குத்தல் பேச்சும், சுட்டிக் காட்டுதலும் எனத் தன்னை மீட்கப் போராடுவதே கதை.
தான் காதலித்தவளையே கைபிடித்தாலும், எதுவும் சுலபமாக இல்லை அவருக்கு. ஒரு கட்டத்தில் எல்லோரும் தன்னையே கவனிக்கிறார்கள், தன்னைக் குறித்தே பேசுகிறார்கள், ஏளனம் செய்கிறார்கள் என்ற பிம்பத்தைத் தன்னுள்ளே ஏற்படுத்திக் கொண்டு மேலும் மேலும் சிக்கலை ஏற்படுத்திக் கொள்கிறார்.
எப்படி மீள்கிறார் என்பதே கதை.
சித்தார்த், ரிமா கலிங்கல், ஜிஸ்னு, தலைவாசல் விஜய், கேபிசிஏ லலிதா என முக்கிய நடிகர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
சாலக்குடி வனப்பகுதியைக் கேமிரா அள்ளி அள்ளிப் பருக்கத் தருகிறது. ஒளிப்பதிவாளர் தாகிருக்கு ஒரு சல்யூட்.
மலையாளத்திரையுலகின் புது அலை ,வினீத் ஸ்ரீனிவாசன், கோபி முரளி, சித்தார்த் பரதன் போன்ற வாரிசுகளின் பங்களிப்பால் செறிவுறுகிறது.
You must be logged in to post a comment.