முதல் சமூக நீதிப் போராளி

தன் சீடனின் திறமையின் மீதான அதீத நம்பிக்கையில் துரோணர் சொன்னார், “இச்சபையில் இவனை வெல்ல எவரும் உண்டோ?” திறமையில் சற்றும் குறையாத கர்ணன் சொன்னான் “உள்ளேன் அய்யா”
 
பரஸ்பர நிதி நிறுவனங்கள்கூட யாரும் படித்துவிடமுடியாத 5 அளவு எழுத்தில் “சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை” எனப் பொறுப்புத் துறப்புக் குடுக்கின்றன. துரோணர் அப்படியெல்லாம் சொல்லவில்லை. “வெல்ல, அரசவம்சத்தினன் உளனோ?” எனக் கேட்டிருந்தால் நியாயம்.
 
“யார் நீ? எத்தேச அரசன்?” கர்ணன் நிலைகுலைகிறான். உடுக்கை உழந்தவன் இடுக்கையைக் களைய, துரியோதனன் சபையேறிச் சொன்னான், ”ஒன்றே சாதி”
 
கற்றவர்க்கும் நலன் நிறைந்த கன்னியர்க்கும் வண்மைகை
உற்றவர்க்கும் வீரரென்று உயர்ந்தவர்க்கும் வாழ்வுடைக்
கொற்றவர்க்கும் உண்மையான கோதின்ஞானசரிதராம்
நற்றவர்க்கும் ஒன்றுசாதி நன்மைதீமைய இல்லையால்.
 
அ.சொ.பொருள்
நலன் நிறைந்த = நலம் நிறைந்த
வண்மை கை உற்றவர்க்கும் = கொடை வழங்கும் கைகளை கொண்டவர்களுக்கும்
வாழ்வுடைக் கொற்றவர்க்கும் = உயர்ந்த வாழ்வை உடைய அரசர்களுக்கும்
கோதின்ஞானசரிதராம் = குற்றமற்ற ஞானம் அடைந்து அதன் படி வாழ்பவர்களுக்கும்
நற்றவர்க்கும் = நல்ல தவம் செய்தவர்களுக்கும்
நன்மைதீமை இல்லையால் = அதில் உயர்வு தாழ்வு இல்லை
 
உடுக்கை இழந்தான் கைபோல என்ற குறளை, எங்கள் தமிழய்யா ராமச்சந்திரன் நடத்திக் கேட்க வேண்டும். “டேய் உடுக்கை இழந்தவன் என்றால் அடிக்கிற உடுக்கு இல்லடா, போட்டிருக்கிற துணி. அதுகூட அவுந்துபோய் அம்மனமாகி நிக்கிம்போது வந்து தோள்ல இருக்க துண்ட எடுத்துக் கட்டி விடுறது இல்லைடா. அது அவிழும் முன்பே உதவுறது. உதாரணமா நீ பள்ளிக்கூடப் பைய ஒரு கைலயும் சாப்பாட்டுப் பைய இன்னொரு கைலயும் எடுத்துட்டுப் போறே திடீர்னு உன் கால்சட்டை கழறுதுன்னு வச்சுக்கோ என்ன செய்வே? டபக்னு உன் முழங்கையால இடுக்கிக்கிட்டு ரெண்டு பையையும் கீழ வச்சிட்டு சரி பண்ணிக்குவ இல்ல, அது மாதிரித்தான். எப்படி முழங்கை அனிச்சையாக உடனே உதவுதோ அது போல உதவுவதுதான் நல்ல நட்பு.”
 
நல்ல தமிழய்யா அமைவது, ஊழ்வினை.

Leave a comment