திரையரங்கை ஒட்டி இருக்கும் மண்டபத்தில்தான் சரவணன் தங்கை ரேவதிக்குத் திருமணம். முதல்நாளிரவே வரச் சொல்லி அன்புக் கட்டளை. சொன்னபடி ஆஜராகிவிட்டேன் குடும்பத்துடன். காரைப் பார்க்கிங் பண்ண இடம் கிடைக்கத்தான் தாமதமாகி விட்டது. அடுத்த வீதியில்தான் நிறுத்த முடிந்தது.
மண்டபத்தை கலை ரசனையுடன் அலங்கரித்திருந்தனர். முதல் நாள் இரவு வரவேற்பு என்பதால் மணவறை அலங்காரம் ஏதும் செய்யவில்லை. நள்ளிரவில் ஆரம்பித்து அதிகாலையில் முடிப்பார்கள். அதற்குத் தேவையான சம்பங்கி மற்றும் கலர் பூக்கள் அருகே மூட்டையில் தயாராக இருந்தது.
நடை பழகும் யுவதிகளும், அவர்களைப் பின் தொடரும் வாலிபர்களும், இன்று பார்க்கமுடியாமல் போன சீரியலில் என்ன ஆகியிருக்கும் என்று அலசும் மாமியார்களும் , அடுத்து என்ன புடவை வாங்கலாம், என்ன நகை வாங்கலாம் என திட்டம் போடும் நடுவயதுப் பெண்மணிகளும், தயாராக இருக்கும் மகளின் கல்யாணச் செல்வு குறித்த கவலை தோய்ந்த பெரிசுகளுமென மண்டபம் கலந்துகட்டி நிறைந்திருந்தது. இந்தக் கவலைகள் ஏதுமற்றுச் சுற்றித் திரிந்த குழந்தைகள் கூட்டம் ஒரு சோபை தந்திருந்தது.
”டாடி மம்மி வீட்டில் இல்லை” என்ற ரகசியத்தை இசைக்குழுவினர் சத்தமாக எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருந்தனர். நாதஸ்வரமும், தவிலும் உறையிலிருந்து பிரிக்காமல் சுவரோரமாகத் தள்ளி வைக்கப் பட்டிருந்தது. வீடியோக்காரர்கள் பி சி ஸ்ரீராம் லெவலுக்கு சுட்டுக் கொண்டிருந்தார்கள். புகைப்படக் கலைஞரும் சளைத்தவர் இல்லை.
வாழ்த்துவோருக்கான வரிசை நீண்டதாக இருந்தது. எல்லோரும் மாப்பிள்ளை சைடு. ரேவதியின் அழகிலும் குணத்திலும் மயங்கி மணமகன் முறையாகப் பெண் கேட்டு நடக்கும் திருமணம். மணமகனும் ரேவதிக்கேற்ற அழகன். மணமகன் வீட்டினருக்கும் ரேவதியைப் பிடித்துப் போக எல்லாச் செலவும் தங்களுடையது எனச் சொல்லிவிட்டனர்.
சரவணனும் நானும் ஒன்றாக டிப்ளாமோ படித்தோம். பின் இருவரும் இரு வருடங்கள் மண்டபத்தின் பின்பக்கத் தெருவில் ஒரு அறையில் தங்கிச் சின்னச் சின்னக் கம்பெனிகளில் வேலை என்ற பெயரில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தோம். நல்ல வேலையில் செட்டிலாக இருவருக்குமே மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது; வேறு வேறு ஊர்களில்.
“இந்த மண்டபம் ஞாபகமிருக்காடா?” என்றான் சரவணன்.
“மறக்க முடியுமாடா?” என்றேன் பேச்சிலர் தின ஞாபகங்களுடன்.
” எந்தங்கச்சி கல்யாணம் இவ்வளவு பெரிய மண்டபத்துல நடக்கும்னு நான் நெனைச்சுக் கூடப் பார்க்கலடா?” என்றான் விழிகள் உதிர்த்த கண்ணீர் முத்துக்களுடன்.
சரவணனின் தோளைத் தட்டி அமைதிப் படுத்தினேன். அதற்குள் வேறு யாரோ, “மாப்ப்பிள்ளை பட்டுவேட்டி சட்டை எங்க வச்சிருக்கீங்க” என்று அவனைக் கூப்பிட என்னை விட்டுப் பிரிந்தான்.
இரவுப் பந்தி நடக்க ஆரம்பித்திருந்தது. டைனிங்க் ஹால் அமளிதுமளிப்பட்டது. இரண்டு மூன்று பேர் ஒரு இளைஞனைத் தாக்கிக் கொண்டிருந்தனர். விலக்கி விட்டு என்னவெனக் கேட்டதில், “ நானும் வந்ததிலிருந்து பாக்குறேன் சார். பேந்தப் பேந்த முழிக்கிறான். நான் கேட்டா மாப்பிள்ளை வீடுங்கிறான். அவர் கேட்டதுக்கு பொண்ணு வீடுங்குறான். சாப்பாட்டுக்குன்னே வந்திருக்கான் சார்”
“சரி சரி விடுங்க நான் விசாரிக்கிறேன்” என அவன் தோள் மீது கை போட்டு அவனை தனியே அழைத்து வந்தேன்.
“சார் சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு. மில்லுக்குப் போயிட்டிருந்தேன் இப்ப அதுக்கும் வழியில்ல. கட்டிட வேலைக்கும் போய்ப் பார்த்தேன். என்னால முடியல. இன்னைக்கு நைட் சாப்பிட்டா எப்படியும் ரெண்டுநாள் தாக்காட்டிடுவேன். ப்ளீஸ்”
அவனை அழைத்து வந்து தியேட்டருக்கு முன் இருக்கும் புரோட்டாக் கடையில் முட்டை புரோட்டாவும் குடல் குழம்பும் வாங்கித்தந்தேன். என் விசிட்டிங்க் கார்டைக் கொடுத்து “ நாளை மறுநாள் என்னை வந்து பார். ஏதாவது வேலை தருகிறேன்” என்றேன்.
“நன்றி சார். இதை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன் “ என்றான் கலங்கிய கண்களுடன்.
“சரி சரி. மறக்காம வா “ என்று அவனை அனுப்பிவிட்டு மண்டபத்துக்குள் நுழைந்தேன்.
வேகவேகமாக என்னை நோக்கி வந்த சரவணன், ”எங்கடா போன இவ்வளவு நேரம்? ஏதோ பிரச்சினைன்னு சொன்னாங்க, என்னடா?” என்றான்.
“ஞாபகமிருக்கான்னு கேட்டியே இங்க ஒருத்தன் பிளாஷ் பேக்க நடத்தியே காமிச்சுட்டுப் போயிட்டான்.”
“பாவம், நம்ம டெக்னிக் அவனுக்குத் தெரியலை அதான் மாட்டிக்கிட்டான்” என்றான் சரவணன் ஒரு பெரு மூச்சை வெளியேற்றியவாறே.
உரையாடல் – சமூக கலை இலக்கிய அமைப்புச் சிறுகதைப் போட்டிக்கு எனது படைப்பு.
.
You must be logged in to post a comment.